.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

கவிஞர் வைரமுத்து பாடிய அசத்தல் தாலாட்டு!


வேலைக்குப்போகும் பெண் குழந்தைக்குத் தாலாட்டினால் எப்படி இருக்கும்?
என்ன சொல்லித் தாலாட்டுவாள்?




சோலைக்குப் பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்குப் போகின்றேன்
வெண்ணிலவே கண்ணுறங்கு!
அலுவலகம் விட்டு
அம்மா வரும்வரைக்கும்
கேசட்டில் தாலாட்டு
கேட்டபடி கண்ணுறங்கு
ஒருமணிக்கு ஒருபாடல்
ஒலிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியிலே
விழிசாத்தி நீயுறங்கு!
ஒன்பது மணியானால்
உன் அப்பா சொந்தமில்லை
ஒன்பது முப்பதுக்கு
உன் அம்மா சொந்தமில்லை
ஆயாவும் தொலைக்காட்சி
அசதியிலே தூங்கிவிட்டால்
தூக்கத்தைத் தவிர
துணைக்கு வர யாருமில்லை
இருபதாம் நூற்றாண்டில்
என் கருவில் வந்தவளே!
இதுதான் கதியென்று
இன்னமுதே கண்ணுறங்கு!
பேருந்தில் நசுங்கிப்
பிதுங்குகின்ற வேளையிலும்
எடைகொஞ்சம் இழந்து
இறங்குகின்ற வேளையிலும்
கோப்புக்குள் மூழ்கி
குடியிருக்கும் வேளையிலும்
பூப்பூவாய் உனது முகம்
புறப்பட்டு வரும் கண்ணே!
தந்தை வந்து கொஞ்சுவதாய்
தாய் மடியில் தூங்குவதாய்
கண்ணான கண்மணியே
கனவுகண்டு நீயுறங்கு!
புட்டிப்பால் குறையவில்லை
பொம்மைக்கும் பஞ்சமில்லை
தாய்ப்பாலும் தாயுமின்றி
தங்கம் உனக்கென்ன குறை?
மாலையில் ஓடிவந்து
மல்லிகையே உனையணைத்தால்
சுரக்காத மார்பும்
சுரக்குமடி கண்ணுறங்கு
தாலாட்டுப் பாட்டில்
தளிரே நீ தூங்கிவிட்டால்
கோலாட்டம் ஆட
கொண்டவர்க்கு ஆசைவரும்!
உறவுக்குத் தடையாக
ஓவென்று அலறாமல்
இரவுக்கு மிச்சம் வைத்து
இப்போது நீயுறங்கு
தாயென்று காட்டுதற்கும்
தழுவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுக் கிழமைவரும்
நல்லவளே! கண்ணுறங்கு!
*************

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top