.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label எச்சரிக்கை! உடல்நலம்!. Show all posts
Showing posts with label எச்சரிக்கை! உடல்நலம்!. Show all posts

Wednesday 8 October 2014

உணவு ::: கொஞ்சம் உண்மைகள் + தெளிவுகள் !

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”, உண்மைதான், இவ்வுலகில் நிறைவான வாழ்வு வாழ ஆரோக்கியம் மிக மிக இன்றியமையாதது. ஆரோக்கியமற்ற மனிதரால் விரும்பினாலும் மகிழ்சியாக வாழ முடிவதில்லை. அவர் தானும் துன்புற்று தம்மை நேசிப்பவர்களையும் வருத்தத்தில் ஆழ்த்துகின்றார்.

இன்றைய நவ‌நாகரீக யுகத்தில் விளைந்த நவீன வாழ்வியல் முறைகளும், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மனித வாழ்வை பல வழிகளில் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளன என்பது உண்மை, எனினும் நோயற்ற வாழ்வை அவை நமக்குத் தந்துள்ளன என நம்மால் நிறைவு கொள்ள முடிவதில்லை காரணம், நாளும் ப‌ல்கிப்பெருகி வரும் எண்ணற்ற நோய்கள், (பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைப்போல அல்லவா விஞ்ஞானிகள், நாளும் ஒரு நோயைக் கண்டுபிடித்து புதிது புதிதாய் அவற்றுக்கு பெயர் வைத்துக் கொண்டு வருகின்றனர்) !!?

26 - health food


இதற்கிடையில் பெரும்பாலானோருக்கு அவர்களின் உணவால்தான் பெரும் வியாதிகள் வருகிற்து. பொதுவாக ஒவ்வொருவரும் பசித்தால் மட்டுமே உண்ணவேண்டும்.*உண்பதற்கு அரைமணி நேரம் முன்பும்‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍பின்பும் நீர் அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே சிறிதளவு அருந்தலாம்.*உண்ணும் பொழுது கண்களை மூடி, இதழ்களை மூடி, இதழ் பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.*தொலைகாட்சி பார்த்தல், புத்தகம் படித்தல், செல்போன் பேசுதல், கால்களை தொங்க விடுதல் ஆகிய கவனச் சிதறல்கள் உண்ணும் நேரத்தில் கூடாது.*முடிந்தவரை வீட்டு உணவு ( நம்மேல் அக்கரை கொண்டவர்கள் சமைத்த உணவை ) உட்கொள்ளவும். 

அதே சமயம் உணவுகளில் பல வகைகள் உள்ளன. இருந்தாலும் சுலபமாகப் புரிந்துகொள்வதற்காக நாம் சில வகைகளாகப் பிரித்துள்ளோம்.

முதல் வகை:

இயற்கையாக, சுவையாக இருக்கும், சமைக்காத உணவுகள், அனைத்துப் பழங்கள், தேங்காய், வெள்ளரிக்காய், கேரட் போன்றவை சமைக்காமல் அதே சமயம் சுவையாக இருக்கும் உணவுகள் இவை அனைத்தும் முதல் வகை உணவுகள். இவற்றில் சுவை 100%இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராண சக்தி 100% இருக்கும். எனவே மேலும் 100 மதிப்பெண்கள். சத்துப்பொருள் 100% இருக்கும். எனவே மீண்டும் 100 மதிப்பெண்கள். ஆக மொத்தம் முதல்வகை உணவுக்கு 300 மதிப்பெண்கள். எந்த உணவைச் சமைக்காமலும், அதே சமயத்தில் சுவையாக பச்சையாகச் சாப்பிட முடியுமோ, அவையனைத்தும் முதல் வகை உணவுகளில் வரும்.

இரண்டாவது வகை:

சமைக்காத ஆனால் சுவையில்லாத உணவுகள் இந்த வகையில் சேரும். உதாரணமாக முளை கட்டிய தானியங்கள், சுவையில்லா பழங்களும், காய்கறி வகைகளும். இந்த இரண்டாம் வகை உணவுகளில் பிராணன் 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். சத்துப்பொருள்கள் 100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். ஆனால் சுவை இருக்காது. எனவே அதற்கு 0.மதிப்பெண்கள். எனவே இந்த வகை உணவுகளுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள். எனவே இவை இரண்டாம் தர உணவுகள் என நாம் பிரிக்கலாம். உதாரணம் முளை கட்டிய தானியங்கள்.

மூன்றாம் வகை:

சமைத்த காய்கறிகள், கீரைகள், தானியங்கள் அனைத்தும் இந்த மூன்றாவது வகை உணவுகளாம். ஓர் உணவை சமைப்பதால் (வேக வைப்பதால்) அந்த உணவிலுள்ள சுவை 50% குறைகிறது. எனவே சுவைக்கு 50 மதிப்பெண்கள். மேலும் சத்துப்பொருள் பாதி குறைந்து விடுகிறது. எனவே மீண்டும் 50 மதிப்பெண்கள். பிராணசக்தியும் பாதி குறைந்து விடுகிறது. எனவே மேலும் ஒரு 50 மதிப்பெண்கள். ஆக மொத்தம் இவ்வகை உணவுகளுக்கு 150 மதிப்பெண்கள் தரலாம். உதாரணம், இட்லி, தோசை, பொங்கல், ஊத்தப்பம், சாப்பாடு, சப்பாத்தி ஆகிய நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அனைத்து சமைத்த உணவுகளும்
.
நான்காவது வகை:

அசைவ உணவுகள் இந்த நான்காவது வகையில் வரும். அசைவ உணவில் சத்துப் பொருள்100% இருக்கும். எனவே 100 மதிப்பெண்கள். பிராணன் ஒன்றுமே இருக்காது. எனவே 0மதிப்பெண். சுவை இருக்காது. எனவே 0.மதிப்பெண். ஆக மொத்தம் அசைவ உணவுகளுக்கு 100மதிப்பெண்கள். எனவே அசைவ உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது அல்லது குறைப்பது நல்லது. ஆனால் சில நாடுகளில், பாலைவனப் பிரதேசங்களில், வெப்பம் அதிகமுள்ள நாடுகளில், தாவரவகை உணவுகள் கிடைக்காத காரணத்தினால் அசைவ உணவுகள் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உள்ளது. உடல் ரீதியாக அசைவ உணவைச் சாப்பிடுவதால் உடலுக்கு எந்தத் தீங்கும் கிடையவே கிடையாது. ஆனால் ஆன்மிக ரீதியாக ஓர் உயிரைக் கொல்வது பாபம் என்ற அடிப்படையில் நம் மனத்தில் ஓர் எண்ணம் தோன்றிய பிறகு நாம் சாப்பிட்டால் அந்த எண்ணம் நோயை உண்டாக்கும். எனவே அசைவ உணவைச் சாப்பிடுபவர்கள் இதைச் சாப்பிட்டால் பாபமில்லை என்ற எண்ணத்துடன் மனத்திலே எந்தவொரு குழப்பமும் இல்லாமல் சாப்பிடும் பொழுது சரியாக ஜீரணமாகிறது.

அதே சமயம் மனத்தில் 50/50 சாப்பிடலாமா? வேண்டாமா? அல்லது சாப்பிட்டால் நல்லதா? கெட்டதா? என்ற எண்ணத்துடன் குழப்பத்துடன் சாப்பிடும் பொழுது அது நோயை உண்டாக்குகிறது. இஃது அசைவத்திற்கு மட்டுமன்று. எந்த ஓர் உணவைச் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஆரோக்கியமென்ற தெளிவான திடமான நம்பிக்கையுடன் சாப்பிடும்பொழுது அது மருந்தாக வேலை செய்கிறது. அந்த உணவு நமக்கு நோய் ஏற்படுத்துமோ என்ற எண்ணத்துடன் சாப்பிடும்பொழுது அது நோயை உண்டாக்குகிறது. இறுதியாக அசைவ உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இது நான்காவது வகை உணவு.

ஐந்தாவது வகை:

போதைப் பொருள்கள் (லாகிரி வஸ்துகள்) இவை உணவே அல்ல. சில பொருள்களை நாம் உணவுபோல் சாப்பிடுகிறோம். ஆனால் அவை உணவல்ல. போதைப்பொருள்கள். உதாரணமாக டீ, காபி, பீடி, சிகரெட், சாராயம், பீடா, கஞ்சா, அபின், பாக்கு ஆகியவை அனைத்தும் உணவுப் பொருள்களே அல்ல. அவை போதைப் பொருள்கள். உணவுப் பொருளுக்கும், போதைப் பொருளுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பதென்றால் எந்தவொரு பொருளை மூன்று நேரமும் சாப்பிட்டு நம்மால் உயிரோடு இருக்க முடியுமோ இவையனைத்தும் உணவுப் பொருள்கள். எந்தப் பொருளை மூன்று நேரமும் அது மட்டும் சாப்பிட்டு உயிரோடு இருக்க முடியாதோ, அவை போதைப் பொருள்கள். தேங்காயை மட்டும் சாப்பிட்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியும்; அஃது உணவு. சிகரெட் மட்டும் புகைத்துக் கொண்டு ஒரு மனிதன் உயிரோடு இருக்க முடியுமா? அது போதைப் பொருள். அசைவம் சாப்பிட்டு ஒருவர் உயிரோடு இருக்க முடியும். எனவே அசைவம் என்பது ஓர் உணவு. கஞ்சா குடித்துக்கொண்டே ஒருவர் உயிரோடு இருக்க முடியுமா? இருக்க முடியாது. எனவே அது போதைப் பொருள். உணவு என்பது நம் உடலில் வெளியிலிருந்து சத்துப் பொருள்களை உடலுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பொருள். போதைப் பொருள் என்பது உடலிலேயே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சத்துப் பொருள்களை எடுத்துச் செலவு செய்யும் ஒரு பொருள்.

எனவே போதைப் பொருளைப் பயன்படுத்தும் பொழுது சில குறிப்பட்ட நேரம் மட்டும் உடலில் அதிகமான தெம்பு இருக்கும். பிறகு நாம் வலுவிழந்து காணப்படுவோம். ஏனென்றால் நம் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். சில சத்துப்பொருள்களை இந்தப் போதைப்பொருள் எடுத்துச் செலவு செய்து நம்மை வீரியமாக இருக்கச் செய்கிறது. ஆனால் அது நம் உடம்பிற்கு உணவை ஒரு போதும் கொடுப்பதில்லை. எனவே தயவு செய்து போதைப் பொருள்களைச் சாப்பிடக் கூடவே கூடாது. “நான் பல மருத்துவரிடம் சென்றேன். பல வருடங்களாக சிகிச்சை எடுத்துக் கொள்கிறேன். ஆனால் எந்த நோயும் குணமாகவில்லை” என்று மருத்துவத்தையும், மருத்துவர்களையும் குறை சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்தும் போதைப் பொருள்களைப் பற்றி அவர்கள் வெளியே சொல்வதே கிடையாது. எனவே அசைவம் சாப்பிடுவதை விட டீத்தூள், காபித்தூள் சாப்பிடுவது கெடுதல் அதிகம்.

மேலே கூறப்பட்டுள்ள உணவு வகைகளைப் புரிந்து கொண்டு நீங்கள் எந்தவகை சாப்பிடுகிறீர்கள்? என்று புரிந்து கொள்ளுங்கள். முடிந்தவரை முதல் வகை உணவை நோக்கி உங்கள் பயணம் இருக்கட்டும். சில இயற்கை மருத்துவர்கள் மூன்று நேரமும் இயற்கை உணவு சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். இஃது எல்லாராலும் கடைப்பிடிக்க முடியாது. நீங்கள் ஒரு மாதம் தொடர்ந்து மூன்று வேளையும் இயற்கை உணவு சாப்பிட்டு வந்தால் ஒரு மாதம் முடிந்தவுடன் இட்லியைப் பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறும். என்ன செய்வீர்கள்? எனவே நம் சிகிச்சையில் ஒரு சிறிய யோசனை உங்களுக்குத் தருகிறோம்.

காலையில் சமைக்காத உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடலுக்குத் தேவையான பிராண சக்தியும், தாது உப்புகளும் இயற்கையான முறையில் காலையில் உணவு மூலமாக நம் உடலுக்குச் சென்று விடும். பகல் உணவு சமைத்த உணவு. ஆசை தீர எது எதுவெல்லாம் பிடித்ததோ அனைத்தையும் சாப்பிடுங்கள். இது நம் மனத்திற்கு ருசிக்காக சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதற்காக அரிசிக் கஞ்சி, கோதுமைக் கஞ்சி போன்ற கஞ்சி, ஏதாவது ஒரு காய்கறி பொரியலை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முறையில் சாப்பிடுவதால் இயற்கை உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். ஆசை தீர சமைத்த உணவு சாப்பிட்டது போலவும் இருக்கும். கஞ்சி என்ற நோயைக் குணப்படுத்தும் மருந்தைச் சாப்பிட்டது போலவும் இருக்கும். நமக்கு எல்லா வகையிலும் சத்துப்பொருள்கள் உள்ளே சென்று நாம் என்றும் ஆரோக்கியமாக இருக்கவும், சிறந்த வழியையும் கொடுக்கும்.

காலையில் இராஜா போல சாப்பிட வேண்டும். பகலில் மந்திரி போல சாப்பிட வேண்டும். இரவு பிச்சைக்காரனைப் போல சாப்பிட வேண்டும் என்று பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது தான் ஆரோக்கியத்திற்கான சரியான வழி. ஆனால் நாம் காலையில் பிச்சைக்காரனைப் போல இரண்டு தோசை, இரண்டு இட்லி என்று அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு அலுவலகத்துக்கு ஓடுகிறோம். பகலில் மந்திரியைப் போல அளவாக சாப்பிடுகிறோம். இரவு இராஜாவைப் போல அனைத்து உணவுகளையும் மொத்தமாக அள்ளிச் சாப்பிடுகிறோம். நமக்கு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணமே இரவு அதிகமாக சாப்பிடுவதுதான். எனவே காலை நேரங்களில் நம் வயிற்றில் ஜீரணசக்தி அதிகமாக இருக்கும்,

எனவே காலை உணவை தயவு செய்து திருப்தியாக, நிறை அமைதியாக, ஆசை தீர சாப்பிடுங்கள். பகல் உணவு அளவாக இருக்கட்டும். இரவு முடிந்தவரை அளவைக் குறையுங்கள். ஏனென்றால் இரவில் நமக்கு உழைப்பு குறைவு. சூரியனும் கிடையாது. நம் உடலில் ஜீரணம் ஆக வேண்டுமென்றால் வெப்பம் இருக்க வேண்டும். பகலில் நாம் உழைக்கிறோம், நடக்கிறோம், ஓடுகிறோம், வேலை செய்கிறோம், எனவே உழைப்பு மூலமாக உடலுக்கு உஷ்ணம் கிடைக்கிறது. மேலும் சூரியன் இருக்கும்பொழுது இயல்பாகவே வெப்ப சக்தி நம் உடலுக்குள் புகுகிறது. அதனால் பகலில் அதிகமாக சாப்பிடுங்கள். இரவில் குறைவாக சாப்பிடுங்கள்.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

பலருக்கு இந்த விஷயத்தில் மிகப்பெரும் சந்தேகம் எப்பொழுதுமே இருக்கும். காலையில் எவ்வளவு சாப்பிட வேண்டும், பகலில் எவ்வளவு சாப்பிட வேண்டும், இரவில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று இந்த அளவில் குழப்பம் ஏற்படும்பொழுது நாம் ஒரு மருத்துவரிடம் செல்கிறோம். குறிப்பாக டயட்டீசியனிடம் சென்றால் அவர் நமக்கு அறிவுரை கூறுவார். காலையில் நான்கு சப்பாத்தியும், ஒரு கப் தயிரும் சாப்பிடுங்கள். இரவு ஐந்து இட்லி சாப்பிடுங்கள், பகலில் 750 மி.கி. சாதமும் 350 மி.லி. குழம்பும் சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுப்பார். சாப்பிடும்பொழுது மி.கி., மி.லி. பார்த்தா சாப்பிட முடியும்? சாப்பிடும்பொழுது நாம் பக்கத்தில் தராசு வைத்துக் கொள்ள முடியுமா? ஒன்று செய்யுங்கள், இனிமேல் பகலில் சாப்பிடும்பொழுது பக்கத்தில் தராசு வைத்துக் கொள்ளுங்கள். 750 மி.கி. சாப்பாட்டை அளந்து தட்டில் போடுங்கள். இது சாத்தியமாகுமா?

மருத்துவர்கள் காலையில் 4 சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்களே, நீங்கள் வீட்டில் எல்லா வேலையும் செய்யும் பெண்மணியா? அல்லது எல்லா வேலைக்கும் ஆள் வைத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டு சும்மா இருக்கும் பெண்மணியா என்று கேட்டார்களா? டயட் எழுதித் தருவதற்கு முன்பாக நீங்கள் கூலி வேலை செய்யும் நபரா? அல்லது கம்ப்யூட்டர் என்ஜினியரா என்று கேட்டார்களா? ஒவ்வொரு மனிதனுக்கும் வேலையின் அளவு, உடல் எடை, மனத்தில் தெம்பு, சுபாவம், கிளைமேட், இயற்கையின் அளவு முறை, நாடு, வயது, இடம், ஊர், ஆகியவற்றைப் பொருத்து உணவின் அளவு மாறும். ஒரு நாள் கட்டடவேலைக்குச் சென்று நாள் முழுவதும் கற்களைத் தூக்கும் ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று யோசியுங்கள். அதே நபர் அடுத்த நாள் தன் நண்பரின் ஏசி காரில் பயணம் செய்யும்பொழுது அவர் எவ்வளவு சாப்பிட வேண்டும்? உலகத்தில் யாருமே இன்று செய்வதைப் போல அடுத்த நாள் வேலை செய்வது கிடையாது. அப்படி இருக்கும்பொழுது ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டுமென்பதை முதலிலேயே எழுதிக் கொடுக்க முடியுமா?

உலகத்தில் எவ்வளவு பெரிய சயன்டிஸ்ட்டாக இருந்தாலும் எவ்வளவு பெரிய மருத்துவராக இருந்தாலும் அடுத்த வேளை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அவருக்கு அவரே எழுதிக் கொடுக்க முடியாது. இப்படி நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை நமக்கே கூற முடியாத நிலையில் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு எப்படி கூற முடியும்? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், நீங்கள் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்ற அளவை உலகத்தில் வேறு யாராலும் கொடுக்க முடியாது. ஏன்? உங்களுக்கே தெரியாது.

மருத்துவர்கள் காலையில் 4 சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்களே உங்கள் வீட்டுச் சப்பாத்தி எந்த அளவு இருக்குமென்று கேட்டார்களா? சிலரின் வீட்டுச் சப்பாத்தி கெட்டியாக, பெரியதாக இருக்கும். ஒன்று சாப்பிட்டாலே போதும். சில சப்பாத்தி அப்பளம் போல இருக்கும். பத்து சாப்பிட்டாலும் வயிறு நிறையாது. இப்படி இருக்கையில் எப்படி நான்கு சப்பாத்தி சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்க முடியும்? ஒரு கப் தயிர் சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்களே, உங்கள் வீட்டு கப் எத்தனை பெரிய சைஸ் உள்ளது என்று அவர்களுக்குத் தெரியுமா? சற்று சிந்தியுங்கள், இரவு 5 இட்லி சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்களே, உங்கள் வீட்டு இட்லி எடை அவருக்குத் தெரியுமா? தயவு செய்து மற்றவர்கள் எழுதிக் கொடுக்கும் அளவு முறையில் தயவு செய்து சாப்பிட வேண்டாம். இது நோயைப் பெரிது படுத்துமே தவிர நோயைக் குணப்படுத்தாது.

சரி எவ்வளவுதான் சாப்பிட வேண்டும் என்ற அளவை எப்படி கண்டுபிடிப்பது. அதற்கு சுலபமாக வழிமுறை இருக்கிறது. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிடும் பொழுது கவனத்தை உணவில் வைத்துச் சுவையை ரசித்து, ருசித்து சாப்பிட்டால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நமக்கு சாப்பிடப் பிடிக்காது. முதல் முறை வாயில் எடுத்து வைக்கும் பொழுது பிடித்த அதே உணவு எப்பொழுது நமக்குப் பிடிக்கவில்லையோ, போதும் என்று அர்த்தம். வழக்கமாக நீங்கள் காலையில் 10 இட்லி சாப்பிடும் நபராக இருந்தால் கவனத்தை இட்லியின் மீதும், இட்லியிலுள்ள சுவையின் மீதும் கவனம் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள், நான்கு இட்லி சாப்பிட்ட பிறகு ஐந்தாவது இட்லியைப் பார்த்தால் உங்களுக்குச் சாப்பிடப் பிடிக்காது. எப்பொழுது பிடிக்கவில்லையோ உங்கள் அளவு முடிந்து விட்டது என்று அர்த்தம்.
கவனத்தை உணவில் வைத்துச் சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரியும். கவனத்தை செல்போனிலோ, ட.வி.யிலோ அல்லது பேச்சிலோ வைத்துச் சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரிவதில்லை. எனவே தயவு செய்து சாப்பிடும் பொழுது கவனத்தை உணவிலும், சுவையிலும் வைத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நம்மால் சாப்பிட முடியாது.

எனவே நம் சிகிச்சையில் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதற்கு மி.கி., கி.கி., தராசு போன்ற அளவு முறைகள் தேவையில்லை. பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். ருசித்து சாப்பிட வேண்டும். மனத்திற்கு எப்பொழுது போதுமென்று எண்ணம் ஏற்படுகிறதோ அப்பொழுது நிறுத்த வேண்டும். எனவே ஆசை தீர சாப்பிடுங்கள். கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. பசி கொஞ்சம் தள்ளிப் போகும். அவ்வளவுதான். குறைவாகச் சாப்பிட்டால் ஒரு தவறும் கிடையாது. நமக்கு சீக்கிரமாகப் பசித்து விடும். எனவே தயவு செய்து சாப்பிடும்பொழுது அளவு பார்க்காதீர்கள். உங்கள் மனத்திற்குப் பிடித்த அளவு ஆசை தீரச் சாப்பிடுங்கள். ஆனால் ஒரேயொரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் பசி எடுக்கும் வரை வேறு எதையும் சாப்பிடக்கூடாது.

எனக்குக் கண்டிப்பாக சாப்பிடுவதற்கு அளவு வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஒரு வழிமுறையைச் சொல்கிறேன். உங்கள் வீட்டிலுள்ள நாய்க்கு ஒரு கப் சாதம் கொடுங்கள். அது சாப்பிட்டு முடித்த பிறகு மீண்டும் வேண்டுமென்று வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும். மீண்டும் ஒரு கப் சாப்பாடு கொடுங்கள். மீண்டும் கேட்கும். மூன்றாவது கப் சாப்பாடு கொடுத்தால் அதில் பாதியை மட்டும் சாப்பிட்டு விட்டு மீதியை அங்கேயே விட்டுவிட்டு நடக்க ஆரம்பிக்கும். அந்த நாயை “வா வந்து சாப்பிடு, என்னிடம் இன்னும் ஏழு கப் சாப்பாடு உள்ளது” என்று நீங்கள் கொட்டினாலும் அது சாப்பிடாது. ஏனென்றால் ஒரு நாய்க்குத் தெரியும். நாம் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று மனிதர்களுக்குத் தெரிவதில்லை. ஏனென்றால் நாய் பசித்து, ருசித்து சாப்பிடுகிறது. மனிதன் பசிக்காமல், ருசிக்காமல் சாப்பிடுகிறான்.

எனவே  நம் சிகிச்சை முறையில் பசி எடுத்தால் சாப்பிட வேண்டும். ரசித்து, ருசித்து ஆசை தீர சாப்பிட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். யார் யார் வீட்டில் 80 வயதிற்கு மேல் தாத்தா, பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறார்களோ அவர்கள் கண்டிப்பாக எந்த உணவையும், எந்தச் சுவையையும் வேண்டாமென்று ஒதுக்கியிருக்க மாட்டார்கள். சுவை, சுவையாக வித விதமாக மனத்திற்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடுவது மூலமாக நாம் ஆரோக்கியமாக இருக்க முடியுமே தவிர நோய்கள் வராது. எனவே சுவையைப் பற்றியும், உணவைப் பற்றியும் தெரியாத சில மருத்துவர்கள் கூறும் தவறான விதிகளை தயவு செய்து கடைப் பிடிக்க வேண்டாம்.

Tuesday 7 October 2014

6 பேக் நல்லதா கெட்டதா?

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சமீப காலங்களில் வந்த படங்களில் பாலிவுட்டில் அமீர்கான், சல்மான்கான், கோலிவுட்டில் சூர்யா,  பரத் போன்ற நடிகர்கள் சிக்ஸ் பேக் உடலமைப்பில் நடித்தனர். படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பே நடிகர் சிக்ஸ் பேக் உடலமைப்பு கொண்டு வருவதற்காக நாள் ஒன்றுக்கு 15 நேரம் பயிற்சி எடுத்து கொண்டார் என்பது போன்ற விளம்பரங்களும் வருவதுண்டு.

இந்த சிக்ஸ் பேக் தீ, தற்போது இன்றைய இளைஞர்களிடம் பரவி உள்ளது. அழகின் முகவரி எதுவென்று கேட்டால் சிக்ஸ் பேக் என்பார்கள். அந்த அளவுக்கு சிக்ஸ் பேக் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள். பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடலியக்கத்தின் மூலம் இயல்பாகவே கரைந்து போகும். சில சமயங்களில் கரையாமல் ஆங்காங்கே சேர்ந்து போகும். இப்படி சேரும் கொழுப்பைக் கரைத்து தசைகளாக வயிற்றுப்பகுதியில் உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக். ஒருமுறை சிக்ஸ் பேக் கொண்டு வந்து விட்டாலும் அதை தொடர்ச்சியாக பராமரிப்பது கஷ்டம். உழைப்புக்கான சூழ்நிலை நகர வாழ்க்கையில் இல்லை. அதனால் தான் உடற்பயிற்சி மூலம் இதைப் பெற வேண்டும். அதற்காக ஒரு சிலர் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து உண்டு.
ஆண்மைக்கு காரணமாக இருக்கும் ஹார்மோன் டெஸ்டோடீரோன். இயல்பாக சுரக்கும் இந்த ஹார்மோனை அதிக அளவில் சுரக்க செய்வது ஸ்டீராய்டு.

இந்த ஹார்மோன் அதிகம் சுரந்தால் உடல் எடை கூடும். தசைகள் அளவில் பெரிதாகும். அதன்மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் மிக பயங்கரமானவை. முதலில் ஏற்படுவது ஆண்மைக் குறைவு தான்.மேலும் மலட்டுத்தன்மை, குரல் மாற்றம், கல்லீரல் கேன்சர், மார்பில் அதீத ரோம வளர்ச்சி, நரம்புத்தளர்ச்சி, பார்வைக் குறைபாடு போன்றவையும் ஏற்படும். அழகான ஆரோக்கியமான உடலுக்கு அன்றாடம் எளிதான உணவு வகைகளும் இயல்பான உடற்பயிற்சியுமே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எளிய பயிற்சிகள்: இதயப் பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர உடம்பில் உள்ள கொழுப்பின் அளவை வேகமாக குறைக்க வேறு வழி இல்லை. உயர்ந்த இதயத் துடிப்பு மற்றும் வியர்வை உடம்பை விட்டு வெளியேறுவதால், கொழுப்புத் திவலைகளை சிதைக்க உதவி புரியும். இது செல்லுலைட் என்ற தோலில் தேங்கியிருக்கும் கொழுப்பை வேகமாக சிதைக்க உதவும். இதற்காக மிதிவண்டி ஓட்டுதல், ஓடுதல், நீந்துதல் மற்றும் நடனம் ஆடினால் சில கிலோகிராம் எடை நம் உடலை விட்டு ஓடும். எடை குறைப்புக்கு வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகமாக வைத்திருப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் செய்யும் உடற்பயிற்சிக்கு பின்னரும் கூட, அதிகப்படியான வளர்ச்சிதை மாற்றமானது கொழுப்பை எரிக்கும். அதிக வளர்ச்சிதை மாற்ற வீதத்தை அடைய ஒருவர் அளவான உணவை போதிய இடைவெளியில் சாப்பிட வேண்டும்.

சில சமயங்களில் பளு தூக்குவதால், மீள்வரு தசைகளில் உண்டாகும் செல்லுலைட் என்ற தோல்களில் படியும் கொழுப்பை கரைக்க உதவும். பளு தூக்கும் பயிற்சி உடல் கட்டமைப்பை அதிகரிக்க உதவும். உடம்பில் உள்ள கொழுப்பை நீக்கியதும், சிக்ஸ் பேக் வயிற்றுடன் உடலை கட்டமைக்க தசைகளை வலுப் பெறச்செய்ய வேண்டும். அதற்கு சில உடற்பயிற்சிகளை செய்தால் சரியான கட்டமைப்புடன் வயிறு அமையும். வயிற்றுக்கான உடற்பயிற்சி செய்தோமானால், வயிற்று தசைகளுக்கு சரியான அளவு இழுவிசை இளக்கத் தன்மை கிடைக்கும். அதுவும் தரையில் படுத்து, முட்டியை மடக்கி கைகளை தலைக்குப் பின்னால் கட்டிக் கொண்டு, தலை, முட்டியை தொடும் அளவிற்கு உடம்பை தூக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி மேல் மற்றும் நடு வயிற்றை குறி வைக்கும். இந்த பயிற்சியை உடம்பின் இரு பக்கங்களாக செய்தால் சரிவுள்ள தசைகளை மேம்படுத்தும்.

கட்டுப்பாடான உணவு அவசியம்: காலை ஆறு மணிக்கு இரண்டு டீ, ஒன்பது மணிக்கு ஓட்ஸ் மற்றும் எட்டு முட்டைகளின் வெள்ளைக்கரு. காலை 11 மணிக்கு பப்பாளிப் பழம். சர்க்கரை இல்லாத புரதச் சத்து நிறைந்த பானம். மதியம் ஒரு மணிக்கு அரை கிலோ சிக்கன். எண்ணெய் சேர்க்காத கோதுமை ரொட்டி, மாலை ஐந்து மணிக்கு மீண்டும் புரதச்சத்து பானம், 7.30 மணிக்கு திரும்பவும் புரதச்சத்து பானம், இரவு ஒன்பது மணிக்கு எட்டு முட்டைகளின் வெள்ளைக்கரு, ஒரு ஆப்பிள். இவைதான் உணவு. மாவுச்சத்து, நார் சத்து, கொழுப்புச் சத்து, அடங்கிய உணவுப் பொருட்களை அறவே சாப்பிடக் கூடாது.

தண்ணீரின் அளவைப் படிப்படியாகக் குறைக்க வேண்டி இருக்கும். மேலும், சர்க்கரை, உப்பு, தண்ணீர் மூன்றையும் உடலை விட்டு சுத்தமாக நீக்க வேண்டும். ஆகையால், 16 வயதினருக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும்தான் சிக்ஸ் பேக் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதைவிடக் குறைவான வயதுடையவர்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஏனெனில் முதுகுத் தண்டு வளர்ச்சி முழுமையாகப் பாதிக்கப்படும்‘‘  என்கின்றனர் மருத்துவர்கள்.

இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கையில், சிக்ஸ் பேக் செய்பவர்கள், உடலில் உள்ள கொழுப்பை ஒன்பது சதவிகிதம் ஆகவும் நீரின் அளவினை 40 சதவிகிதம் அளவுக்கு குறைத்தே ஆக வேண்டும். மேலும், புரதச் சத்தை மட்டும் அதிகம் எடுத்துக்கொள்வதால், கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. அதிக அளவு உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் வெப்பம் அதிகரிக்கும். மாவுச்சத்து, பால் பொருட்களைத் தவிர்ப்பதால், உணவின் விகிதாச்சாரம் மாறுபட்டு, மயக்க நிலைக்குத் தள்ளப்படலாம், என்றனர்.

இதுபற்றி எலும்பு சிகிச்சை நிபுணர் தெரிவிக்கையில், சர்க்கரை, தண்ணீர், உப்பு ஆகிய மூன்றையும் நீக்கிவிட்டால் உயிர் வாழ்வது கடினம்தான். அதிலும் புரதம், மாவுச்சத்து இல்லாமல், கடும் உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் தசை நார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். மனிதனுக்கு வலிமையான தசைநார்களே தேவை. உடல் வலி, காயம் ஏற்படுவதைத் தடுக்கவும் முதுகுவலி வராமல் காக்கவும் தசை நார்கள் பயன்படுகின்றன. ஆனால், சிக்ஸ் பேக் வைப்பதால் தேவை இல்லாத வலிகள், பிரச்னைகள்தான் அதிகம், என்றனர்.

அழகுக்கு ஆசைப்பட்டுத்தான் சிக்ஸ் பேக் மாயையில் இளைஞர்கள் விழுகிறார் கள். ஆனால், நிரந்தர அழகுக்கு ஒருவர் முறையாக உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்குள் வைத்திருத்தலே முக்கியம். சிக்ஸ் பேக் அழகு என்பது தற்காலிகமானதே. நீடித்தது அல்ல. அழகைவிட ஆரோக்கியமே முக்கியம் என்பதையும் இளைஞர்கள் உணர வேண்டும், என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

மஞ்சள் பாலின் தித்திப்பான நன்மைகள்!

உலகின் மிகச்சக்தி வாய்ந்த மற்றும் இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்துள்ள பொருட்களில் ஒன்று தான் மஞ்சள்.
மஞ்சள் மற்றும் பால் இயற்கையான ஆன்டி-பயாடிக் பண்புகளை கொண்டுள்ளன.

உங்களுடைய அன்றாட உணவில் இந்த இரண்டு இயற்கை பொருட்களையும் சேர்த்துக் கொள்வதால், பல்வேறு நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகளைத் தடுக்கலாம்.

அதிலும் மஞ்சள் தூளை சற்றே சூடான பாலுடன் கலக்கப்படும் போது, எண்ணிலடங்கா பலவித சுகாதார பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.

மஞ்சள் பால் செய்முறை:

1 அங்குல மஞ்சள் துண்டை எடுத்துக் கொள்ளவும். அதை பாலில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பின் பாலை வடிகட்டி மஞ்சளை எடுத்துவிடவும். பின்பு குளிர வைத்து, இந்த பாலைக் குடிக்கவும்.

சுவாசக் கோளாறு

மஞ்சள் பால், பாக்டீரியா நோய்த்தொற்றுகள் மற்றும் நச்சுயிரி சார்ந்த நோய்த்தொற்றுகளைத் தாக்கும் நுண்ணுயிர் ஆகும்.
இந்த மசாலாப் பொருள் உடலை வெப்பப்படுத்தும் என்பதால் நுரையீரலின் சளித் தேக்கம் மற்றும் சைனஸ் பிரச்சனைக்கு விரைவான நிவாரணம் வழங்குகிறது.

அதுமட்டுமின்றி சுவாச அமைப்பு தொடர்பான நோய்களான ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் அழற்சி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாகவும் இருக்கிறது.

புற்றுநோய்

மஞ்சள் பால் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகளைக் கொண்டுள்ளதால் இது மார்பகம், சரும, நுரையீரல், புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் நிறுத்தவும் செய்கிறது.

தூக்கமின்மை

வெதுவெதுப்பான மஞ்சள் பால் அமினோ அமிலம், டிரிப்தோபன் போன்றவற்றை உற்பத்தி செய்து அமைதியான மற்றும் பேரின்ப தூக்கத்தைத் தூண்டும் என்று கூறப்படுகிறது.

ஜலதோஷம் மற்றும் இருமல்

மஞ்சள் பால் ஜலதோஷம் மற்றும் இருமலுக்கு ஒரு சிறந்த தீர்வாக கருதப்படக் காரணம் அதன் நச்சுயிரிக்கு எதிரான குணமும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஆகும். இது தொண்டைப் புண், இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கிறது.

கீல்வாதம்

மஞ்சள் பால், கீல்வாதத்தை குணப்படுத்த மற்றும் நாள்பட்ட மூட்டு வலிகளின் காரணமாக ஏற்படும் வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
இது வலியை குறைத்து நெகிழ்தன்மையுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகள் உருவாக்க உதவுகிறது.

மேலும் உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் மூட்டுகளையும் வலுப்படுத்த முடியும்.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்

மஞ்சள் பால் ஒரு தடையற்ற முழுமையான எதிர் ஆக்ஸிகரணிகளுக்கு ஒரு சிறந்த ஆதாரமாக உள்ளது. இதனால் பல வியாதிகளை குணப்படுத்தவும் முடியும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

மஞ்சள் பால் ஆயூர்வேத பாரம்பரியத்தில் இரத்தத்தை தூய்மைப்படுத்தும் ஒரு சிறந்த பொருளாகவும் மற்றும் சுத்தப்படுத்தியாகவும் கருதப்படுகிறது.
இது உடலில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு உயிர்ப்பூட்டு பொருளாகவும் மற்றும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யவும் உதவுகிறது.

மேலும் இது நிணநீர் அமைப்பு மற்றும் இரத்த குழாய்களில் இருக்கும் அனைத்து நச்சுக்களையும் நீக்கி, இரத்த மெலிவூட்டியாக வேலை செய்கிறது.

கல்லீரல் நச்சு நீக்கி

மஞ்சள் பால் ஒரு இயற்கையான கல்லீரல் நச்சு நீக்கியாக விளங்குகிறது. இது இரத்தத்தை தூய்மைப்படுத்தி இதனால் கல்லீரல் நன்றாக செயல்பட உதவும் ஒரு ஊக்கியாகவும் இருக்கிறது.

இதன் தூய்மைப்படுத்தும் குணத்தினால் இது கல்லீரலுக்கு ஆதரவாகவும் மற்றும் நிணநீர் மண்டலத்தையும் சுத்தமாக்குகிறது.

எலும்பு சுகாதாரம்

மஞ்சள் பாலில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால் அவை எலும்புகள் ஆரோக்கியமாக மற்றும் வலுவாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் எலும்பு தேய்மானத்தையும் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸையும் குறைக்கிறது.

செரிமான நலம்

இது ஒரு சக்தி வாய்ந்த கிருமி நாசினியாக இருப்பதால், குடல் சுகாதாரத்தை ஊக்குவிக்கிறது. மேலும் வயிற்று புண்களையும் மற்றும் பெருங்குடல் அழற்சியையும் கட்டுப்படுத்துகிறது.

அதுமட்டுமின்றி இது சிறந்த செரிமான சுகாதாரத்திற்கும் மற்றும் வயிற்றுப்புண்கள், வயிற்றுப் போக்கு மற்றும் அஜீரணத்தையும் தடுக்கிறது.

எடை குறைப்பு

மஞ்சள் பால் உணவில் இருக்கும் கொழுப்பை முறிக்க உதவுகிறது. இதனால் இது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது.

எக்ஸிமா/சிரங்கு

எக்ஸிமா சிகிச்சைக்கு தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பால் குடிக்க வேண்டும். இதனால் நாளடைவில் அந்த பிரச்சனை குணமாகும்.

Thursday 2 October 2014

கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்காதீங்க.


பேஸ்புக் என்பது மிகப்பெரிய மீடியாவாக மாறிவிட்டது. பேஸ்புக்கில் பகிரும் சில செய்திகள் காட்டுத்தீப்போல பரவிவிடும். அதுவும் அந்த செய்திகள் உண்மையா இல்லை வெறும் வதந்தியா என்றெல்லாம் யோசிப்பதற்கு நேரமில்லாமல் நாமும் பகிர்ந்துவிடுகிறோம்.

இதில் நாம் பார்க்கப் போவது "டூத்பேஸ்ட் கலரும், தவறான விளக்கமும்"

பொதுவாக நாம் வாங்கும் டூத்பேஸ்ட்களில் சதுர வடிவ நிறங்களில் குறியீடு இருக்கும். பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும்.

இவற்றுக்கு கொடுக்கப்படும் தவறான விளக்கம்:

பச்சை - இயற்கை
நீளம் - இயற்கை + மருத்துவ குணம்
சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை
கருப்பு - சுத்தமான ரசாயன கலவை

உண்மை என்ன?

இவ்வாறான நிறங்கள் உண்மையில் Packaging Process-காக பயன்படுகிறது. இந்த குறியீட்டுக்கு "Eye Mark அல்லது Eye Spot" என்று பெயர். இவைகள் டூத்பேஸ்ட் ட்யூபை உருவாக்கும் நவீன பேக்கேஜிங் இயந்திரங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இவைகள் "ட்யூபில் எங்கு வெட்ட வேண்டும், எங்கு மடக்க வேண்டும் என்பதனையும், ட்யூபிற்கு எந்த கலரை கொடுக்க வேண்டும் என்பதனையும்" மெசின்கள் தெரிவிக்கும்.

இந்த கலர் குறியீடுகளை டூத்பேஸ்ட் மட்டுமின்றி, பல்வேறு க்ரீம் பாக்கெட்களிலும் நீங்கள் பார்க்கலாம்.

தயவு செய்து யாரும் "உங்க டூத்பேஸ்ட்ல கலர் இருக்கா?" என்று கேட்டுடாதீங்க....

Friday 19 September 2014

தூக்கம் பற்றிய சில விழிப்புணர்வு தகவல்கள்!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபம், ஆத்திரத்தைக் குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம்.

தூக்கத்துக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு. நமது உடலில் இரண்டு வகையான தசைகள் இருக்கின்றன. நமது கட்டுப்பாட்டில் உள்ள தசைகள், கை கால்கள், தோள்பட்டை, மார்பு, முதுகு முதலியவற்றிலுள்ள கடினமான தசைகள், நமது கட்டுப்பாட்டிலுள்ள தசைகளாகும். இந்த தசைகளெல்லாம் நாம் நடப்பதற்கும், நகர்வதற்கும், உருண்டு புரள்வதற்கும் உபயோகப்படும் தசைகளாகும்.


24 - Health -Sleeping-Positions

ஆண்களின் உடலில் சுமார் 42 சதவீதமும், பெண்களின் உடலில் சுமார் 36 சதவீதமும் கட்டுப்பாட்டில் உள்ள தசைகள் இருக்கின்றன. தூக்கத்தின்போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் பெரும்பாலும் தற்காலிகமாக செயலிழந்து விடுகின்றன.

நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள்(inVoluntary Muscles) இரைப்பை, இருதயம், உணவுக்குழாய், காற்றுக்குழாய், வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள், சிறுநீர்ப்பை, ரத்தக்குழாய்கள் மற்றும் உடலின் உறுப்புகளுக்கு உள்ளே உள்ள மெல்லிய தசைகள், இவை எல்லாமே நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகளாகும்.

தூங்கும் போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் மட்டுமே செயலிழக்கப்படுகிறது. கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் நம்மை கண்டு கொள்ளாது. பாலூட்டி, விலங்குகள், பறவைகள், தவளை, மீன் போன்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் தூக்கம் உண்டு.

மேலும் மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்றும இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண்

இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.
அத்துடன் எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக்#கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல்  குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

Tuesday 21 January 2014

கலப்பட உணவை கண்டறிவது எப்படி?

   கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள்  சேர்க்கப்படுகிறது.. இது தெரியாமல் அதை  காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். தவறான வழியில் காசு சம்பாதிக்க  மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது? 

                                                     இதோ பட்டியல்

         பெருங்காயத்தில்  பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற  பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்.



        சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.



        ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள்  இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.



        மஞ்சள் தூளில்,பருப்பு வகைகளில்  மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறாகள். அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.



       மிளகாய் தூளில் மரப்பொடி ,செங்கல் பொடி,Rodamine Culture மற்றும் சிவப்பு வண்ணப்பொடி கலக்கிறார்கள். நீரில் கரைத்து சோதித்தால் மரத்தூள் மிதக்கும் வண்ணப் பொடி தண்ணீரில் நிறமுண்டாக்கும்.செங்கல் பொடி மிளாய் பொடியை விட சீக்கிரம் கிளாசின் அடியில் போய் செட்டில் ஆகிவிடும். 2 கிராம் மிளாய் பொடியில் 5 ml  acetone சேர்த்தால் உடனடி சிவப்பு நிறம் தோன்றினால் Rodamine Culture கலப்படத்தை உறுதி செய்யலாம்.


 
      காபித் தூளில் சிக்கரி கலக்கிறார்கள்.குளிர்ந்த நீரில் கலந்து குலுக்கினால் காபித்தூள் மிதக்கும் சிக்கரி கீழே படிந்து விடும்.



      கொத்துமல்லி தூளில் குதிரைச்சாணத்தூள் கலக்கிறார்கள். நீரில் கரைத்தால் குதிரைச் சாணத்தூள் மிதக்கும்.



       கிராம்பில் அதன் எண்னெயை எடுத்து விட்டிருப்பார்கள். எண்ணை நீக்கப்பட்ட கிராம்பு சுருங்கி இருக்கும்.



      சீரகத்தில் புல்விதை நிலக்கரிதூள் கொண்டு வண்ணம் ஊட்டப் பட்டிருக்கும். கைகளில் வைத்து தேய்த்தால் விரல்களில் கருமை படியும்.



      நெய்யில் மசித்த உருளக்கிழங்கு,  வனஸ்பதி சேர்த்திருப்பார்கள். 10-மி.லி.ஹைட்றோ குளோரிக் அமிலத்துடன் 10-மி.லி உருக்கிய நெய் கலந்து அதோடு ஒரு மேசைக்கரண்டி சர்க்கரையை கரைத்து ஒரு நிமிடம் நன்றாக குலுக்கவும் வனஸ்பதி கலந்திருந்தால் பத்து நிமிடங்களுக்கு பின் சிவப்பு நிறமாக மாறும்.



       வெல்லத்தில் மெட்டானில் (Metanil) மஞ்சள் என்ற ரசாயனம் கலக்கிறார்கள்.அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் இந்த மஞ்சளை சிறிது கலந்தால் மஞ்சள் மஜெந்தா நிறமாகி விடும்.



       ரவையில் இரும்புத் தூள் கலக்கிறார்கள் காந்தத்தை அருகே காட்டினால் இரும்புத்தூள் ஒட்டிக்கொள்ளும்.



       பாக்குத்தூளில் மரத்தூள் மற்றும் கலர் பொடி சேர்க்கிறார்கள் நீரில் கரைத்தால் தண்ணீரில் வண்ணம் கரையும்.



       பாலில்,நெய்யில்  மசித்த உருளக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கிறார்கள். கலப்பட பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் மர வண்ண டிஞ்சர் நீல வண்ணம் ஆகும்.         பாலில் யூரியா கலப்படம் செய்திருந்தால் 5 ml பாலில்இரண்டு துளி bromothymol blue சொலுசன் கலந்து பத்து நிமிடம் கழித்து நீலநிறமானால் யூரியாகலந்திருப்பதை உறுதி செய்யலாம்        பாலில் தண்ணீர் சேர்த்திருந்தால் ஒரு துளி பாலை வழ வழப்பான  செங்குத்து தளத்தில் வழிய விட்டால் தூய பால் வெள்ளை கோட்டிட்டது போல் வழியும்  கலப்பட பால்  எந்த அடையாளமும் ஏற்படுத்தாது  உடனடி வழிந்து விடும். டிடெர்ஜென்ட் பவுடர் எண்னெய் எல்லாம் சேர்த்து பால் போன்ற செயற்கை பாலையும் உருவாக்கி விடுகிறார்கள்.



       தேயிலைத்தூளில் பயன்படுத்திய பின் உலத்திய தூள் செயற்கை வண்னமூட்டிய தூள் கலக்கிறார்கள். ஈர, வெள்ளை பில்டர் தாளில் தேயிலைத் தூளை பரப்பினால் மஞ்சள், சிவப்பு, பிங்க் புள்ளிகள் உண்டானால் அதில் கலர் சேர்த்திருக்கிறார்கள்.இரும்புத்தூள் சேர்த்திருந்தால் காந்தம் மூலம் கண்டுபிடிக்கலாம்.



       சமையல் எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலக்கிறார்கள். எண்ணெயுடன் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் சேர்த்து சிறிது சிறிதாக  ஃபெர்ரிக் க்ளோரைடு கலவையில் கலந்தால் எண்ணெயில் ஆர்ஜிமோன் கலப்படமிருந்தால் அரக்கு வண்ண படிவு உண்டாகும்.



      குங்குமப்பூவில் நிறம் மற்றும் மணம் ஏற்றப்பட்ட உலர்ந்த சோள நார்கள் கலக்கிறார்கள்.தூய குங்குமப்பூ எளிதில் முறியாது கடினமாக இருக்கும். கலப்பட நார் எளிதில் முறிந்து விடும்.



      ஜவ்வரிசியில் மணல் மற்றும் டால்கம் பவுடர் சேர்கிறார்கள். வாயிலிட்டு மென்றால் கல் நற நறவென்றிருக்கும். தண்ணீரில் வேக வைக்கும் போது தூய ஜவ்வரிசி பருத்து பெரிதாகும்.



      நல்ல மிளகில் உலர்த்தப்பட்ட பப்பாளி விதைகள், கருப்பு கற்கள் சேர்க்கிறார்கள். முட்டை வடிவ கரும்பச்சை பப்பாளி விதைகள் சுவையற்றவை.



      தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய்கள் கலக்கிறார்கள். தேங்காய் எண்ணெயை ஃபிரிட்ஜில் வைத்தால் உறையும் ஆனால் கலந்த .பிற எண்ணெய் உறையாது தனித்து இருக்கும்.



     "கம்பு "வில் பூஞ்சைகள் கலக்கிறார்கள். உப்பு நீரில் பூஞ்சைகள் மிதக்கும்.



       இலவங்கப்பட்டையுடன் (தால்சினி)  தரங்குறைந்த கருவாய் பட்டை (கேசியா) வில் வண்ணம் சேர்த்து கலக்கிறார்கள். சேர்க்கப்பட்ட வண்ணம் நீரில் கரையும்.



      சாதாரண உப்பில் வெள்ளைக் கல் தூள், சுண்ணாம்பு கலக்கிறார்கள் உப்பை தண்ணீரில் கரைத்தால் சுண்ணாம்பு கலப்படம் இருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாகும்.தூய உப்பு நிறமற்று இருக்கும்.



       தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்கிறார்கள்.தூய தேனில் நனைத்த பஞ்சுத்திரியை தீயில் காட்டினால் எரியும் கலப்பட தேனில் எரியாது வெடி ஒலி உண்டாகும்.



        கடலை எண்ணெயில் பருத்திக்கொட்டை எண்ணெய்  கலக்கிறார்கள் .2.5 மி.லி ஹால்பென் கரைசல் சேர்த்து லேசாக மூடி பொருத்தி கொதிநீரில் 30 நிமிடம் சூடு படுத்தினா கலப்படமிருந்தால் ரோஸ்  நிறமுண்டாகும்.


.
      ஐஸ் கிரீமில்  வாஷிங் பவுடர் கலக்கிறார்கள். சில துளி எலுமிச்சை சாறு அதில் விட்டால் குமிழ்கள் ஏற்பட்டால் இதை உறுதி செய்யலாம்.



    முட்டை யில்  டீ டிக்காசன் மூலம் சாயம் ஏற்றி நாட்டு கோழி முட்டியாக விற்கிறார்கள்.



   மாத்திரைகள் மருந்து பொருட்களில் போலி மருந்துகள் நிறைய புழக்கத்தில் உள்ளது நீங்கள் வாங்கும் மருத்தினை http://verifymymedicine.com/
என்ற தளத்தில் சென்று ஒரிஜினல் தானா ,காலாவதியானதா என சோதிக்கலாம்.


      விழிப்புணர்வு மூலம் மட்டும் தான் இந்த தீமையை வேருடன் ஒழிக்க முடியும்.

Monday 20 January 2014

கர்ப்ப கால இரத்தப் போக்குக்கான காரணங்கள்!

பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமான கர்ப்ப கால பொழுதை மகிழ்ச்சியுடனும் கவனத்துடனும் அணுக வேண்டும்.நம் பெற்றோர்களும், பாட்டிகளும் கர்ப்ப காலத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு சொல்லி இருப்பார்கள். அதன்படியும், மருத்துவர் ஆலோசனையின் படியும் நாம் என்ன தான் பார்த்து கொண்டாலும், சில நேரங்களில் இரத்தப்போக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது.

சில பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படும். அதற்காக குழந்தைக்கு பாதிப்பு என்று நினைக்க வேண்டாம். ஒவ்வொரு வித இரத்தப்போக்கிற்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. இதை தெரிந்து கொள்ளாமல், சிலர் இரத்தக் கசிவு ஏற்பட்ட உடனேயே பயந்து விடுகின்றனர்.

இவ்வித பயத்தை போக்க பிரசவ காலத்தில் ஏன் இரத்தப்போக்கு ஏற்படுகின்றது என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு விட்டு விடாமல், இரத்தப்போக்கு ஏற்பட்டால் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்வது அவசியமாகின்றது. இங்கே எதனால் இரத்த போக்கு ஏற்படுகின்றது என்று பார்ப்போம்.

இது எதனால் நிகழ்கின்றது?

கருவின் கழுத்து பகுதியில் பாதிப்பில்லாத மாற்றங்கள் நிகழும் போது சில திசுக்கள் உடைந்து இரத்தப் போக்கு வெளிர் நிறத்தில் வெளியேறும். சில பெண்கள் பிரசவ காலம் முழுவதும் மாதவிடாய் அடைவார்கள். ஆனால் குழந்தை ஆரோக்கியமாகவே இருக்கும். இது மட்டுமின்றி இன்னும் சில காரணங்கள் உள்ளது.

கரு முட்டை உருவாதல்

முதல் மாதத்தில் கரு உருவாக ஆரம்பிக்கும் போது, கருப்பையில் மாற்றம் ஏற்பட்டு இரத்த கசிவு ஏற்படலாம். அப்பொழுது இரத்தம் வெளிரிய நிறத்தில் இருக்கும். அதுவும் ஒன்று இரண்டு நாட்களுக்கு மேல் இருக்காது

கர்ப்பப்பை வாயில் தொற்று நோய்

அதே போல் கர்ப்பமாக இல்லாத போதும், இந்த மாற்றத்தை அனுபவிக்க முடியும். ஆனால் இதை ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும்.
குறிப்பாக செக்ஸ் வைத்துக் கொள்வதால், கருப்பையின் வாயில் எரிச்சல் ஏற்பட்டு சிறிது இரத்தம் வடியும். இந்த வகையான இரத்தப்போக்கு உடலுறவுக்கு பிறகு நடக்கும் பின்னர் மிகவும் விரைவாக நின்றுவிடும்.

சளிப்பிளவு

பிரசவ வலி ஏற்படும் போது கருப்பையின் உள்ள சளி போன்றது உடைந்துவிடும். அப்பொழுது இரத்த கசிவு ஏற்படும். ஒருவேளை இது முன்னரே உடைந்தால், குறிக்கப்பட்ட திகதிக்கு முன்னரே பிரசவம் நடக்க போகின்றது என்று அர்த்தம்.

நஞ்சுக்கொடி நகர்வு

நஞ்சுக்கொடி பகுதி கருப்பையின் உள்ளிருந்து வெளிவரும் போது இரத்தப்போக்கு ஏற்படும்.

கருப்பை

கருப்பை மிகவும் இறங்கிய நிலையில் இருந்தாலும், இரத்தக் கசிவு ஏற்படும். இவ்வாறு இருந்தால் கருப்பையின் கனம் தாங்க முடியாமல் இரத்தக் கசிவு ஏற்படும். இவ்வாறு இருப்பின் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இடம் மாறிய கர்ப்பம்

கருமுட்டை கருப்பையின் வெளியே கருத்தரித்தால், இரத்தக் கசிவு ஏற்படும். பொதுவாக ஒரு கருமுட்டை குழாயில் கருத்தரிக்கும் போது, இந்த பாதிப்பு ஏற்படும். அப்பொழுது கடுமையான வயிற்று வலி இருக்கும். இவ்வகை பிரச்சனை இருப்பின், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கருச்சிதைவு

இரத்தப் போக்கு கருச்சிதைவின் அறிகுறியாகவும் இருக்க முடியும். ஆனால் இது மூன்று மாதத்திற்கு பின் ஏற்படாது.

Sunday 19 January 2014

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்..?


வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.

5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.

பெண்களின் அழகு சாதனப்பொருட்களில் நச்சு! எச்சரிக்கை!

 

இன்றைய  மார்க்கெட்டில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களில் நச்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன. எனவே அதை பெண்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தும்போது அவர்களின் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்துள்ளது.


இம்மையம் நடத்திய ஆய்வில் உலக அளவிலும், தேசிய அளவிலும் புகழ்பெற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளான முக அழகு க்ரீமில் அதிக அளவு பாதரசமும், சில வகை லிப்ஸ்டிக்கில் எஃகும் கலந்திருப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது. இந்த அதிகளவு பாதரசம் சிறுநீரகத்தை பாதிக்கவும், தோலின் நிறம் மாறும் வகையிலும், அதில் வடுக்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அழகு சாதனப்பொருட்களில் பாதரசம் பயன்படுத்தப்படுவதற்கு தடை உள்ள போதிலும், ஆய்வு செய்யப்பட்ட 32 முக அழகு க்ரீம்களில் 44 சதவிகித நிறுவனங்களின் தயாரிப்பில் பாதரசம் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.


அதே போல் 30 லிப்ஸ்டிக் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் 50 சதவிகித நிறுவனங்களின் தயாரிப்பில் எஃகு கலந்திருப்பது தெரியவந்தள்ளது.எனவே பெண்கள் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும் என இம்மையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டை பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மறுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Monday 6 January 2014

கர்ப்பிணிகள் பருப்பு, கொட்டைகளை சாப்பிடலாமா- கூடாதா?




மனிதர்களில் சிலருக்கு ஏற்படும் நட் அலர்ஜி என்று ஆங்கிலத்தில் அறியப்படும் நிலக்கடலை, முந்திரி, பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பல்வேறு கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிட்டால் ஏற்படும் ஒவ்வாமை குறித்த ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க மருத்துவ ஆய்வாளர்கள், கர்ப்ப காலத்தில் பெண்கள் அனைத்துவகையான கொட்டைகளையும், பருப்புகளையும் சாப்பிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஒவ்வாமை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மனிதர்களில் சிலருக்கு இந்தமாதிரியான கொட்டைகளையும் பருப்புகளையும் சாப்பிடும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.

 சிலருக்கு அது தோலில் தடிப்பு, அரிப்பு போன்ற சிறு சிறு உபாதைகளை ஏற்படுத்தினாலும் சிலருக்கு உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய தொண்டை அடைப்பு வரை செல்லக்கூடியதாக இருக்கிறது. ஒரு முறை இந்த ஒவ்வாமை வந்துவிட்டால், இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் தொடர் பிரச்சனையாக நீடிக்கிறது. இப்படியான கொட்டைகள், பருப்புகள் ஒவ்வாமையால் அவதிப்படுபவர்கள் இந்தமாதிரியான கொட்டைகளையும், பருப்புகளையும் வாழ்நாள் முழுவதும் சாப்பிடாமல் தவிர்ப்பது மட்டுமே அவர்கள் இந்த ஒவ்வாமை உபாதைகளில் இருந்து விடுபட இருக்கும் ஒரே வழி.
இந்த பின்னணியில் இந்தமாதிரியான ஒவ்வாமை ஒரு சிலருக்கு மட்டும் ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும், அதை ஆரம்பகட்டத்திலேயே தடுக்க முடியுமா என்பது குறித்தும் மருத்துவ உலகில் நீண்டநாட்களாகவே தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
சுமார் எட்டாயிரம் குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களிடம் ஆய்வு செய்யப்பட்ட மருத்துவர்களின் முடிவுகள், ஜமா குழந்தைநல மருத்து இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. அவர்களின் ஆய்வின் முடிவுகளின்படி, கர்பகாலத்தில் தாய்மார்கள் எல்லாவிதமான கொட்டைகள் மற்றும் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம், கருவிலேயே அந்த குழந்தைகளுக்கு இந்த பருப்புக்கள் மற்றும் கொட்டைகள் பழகிவிடுவதால், அவர்கள் பிறந்து பெரியவர்களாகும்போது அவர்களுக்கு இந்த பருப்புகள் மற்றும் கொட்டைகளினால் ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்க முடியும் என்று தெரியவந்திருப்பதாக இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
 
அதேசமயம், இந்த ஆய்வின் முடிவுகள் முடிந்த முடிவல்ல என்று ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். காரணம், இது தொடர்பாக ஐக்கிய ராஜ்ஜியம் உட்பட வேறு நாடுகளில் செய்யப்பட்ட வேறுபல ஆய்வுகள், கர்பகால உணவுக்கும் குழந்தைகளின் எதிர்கால ஒவ்வாமைக்கும் எந்தவிதமான நேரடி தொடர்பும் இல்லை என்பதை காட்டியிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
 
இப்போதைக்கு இப்படியான மாறுபட்ட ஆய்வின் முடிவுகள் தெரிய வந்திருப்பதால், கர்பகால பெண்கள் கொட்டைகள் மற்றும் பருப்புகள் சாப்பிடுவதாலேயே அவர்களின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இது தொடர்பான ஒவ்வாமை ஏற்படாது என்று உறுதியாக கூறமுடியாது என்றும் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த இருவேறுபட்ட ஆய்வின் முடிவுகளுமே அந்தந்த இனக்குழுக்களுக்கு சரியாக இருந்தாலும், உலகம் முழுமைக்கும் பொருந்தக்கூடிய பொதுவானதொரு அளவுகோளை இந்த விஷயத்தில் எட்டுவது கடினம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த உணவியல் நிபுணர் கவுசல்யாநாதன்.

தினமும் சாப்பிடக் கூடாத உணவுகள்..!!!



நம் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை பல நேரங்களில் நாம் குறை கூறி கொண்டிருப்போம். ஆனால் உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் வேறு சில உணவுகளை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, நாம் நம் அன்றாட உணவு பழக்கங்களில் சில தவறுகளை செய்யத் தான் செய்வோம்.

அதனால் சரியான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, உடல் எடையை சரியாக பராமரிக்க கீழ்கூறிய உணவு பட்டியலை தவிர்க்க வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் மீது மக்களுக்கு உண்டான காதல் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே ஏற்பட்டது. உணவின் ருசியை கூட்டவோ அல்லது அளவை கூட்டவோ நாம் உருளைக்கிழங்கை பயன்படுத்துகிறோம். அதனால் அதனை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தனியாக எந்த ஒரு காரணமும் தேவையில்லை. நாளடைவில் அது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். அதனால் அடுத்த முறை உருளைக்கிழங்கிற்கு பதில் நற்பதமான காய்கறிகளை பயன்படுத்துங்கள்.

பால்

பல பிரச்சனைகளுக்கும் பால் தீர்வாக இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அன்றாடம் பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சியில் தடையாகவும் இருக்கும். தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள். பால் குடிக்கவில்லை என்றால் உங்கள் சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து, சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள். இல்லையென்றால் பிரச்சனை பாலில் இல்லை, வேறு ஏதோ ஒரு உணவில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உணவிற்கு பின்பு டெசெர்ட்

உணவருந்திய பிறகு இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்ணுவது நம்மில் பல பேருக்கு உள்ள பழக்கமாகும். இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும். நீங்கள் உண்ணும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போகும். தினமும் டெசெர்ட் வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் அல்லது ஏதாவது விசேஷ நாட்களில் மட்டும் அவைகள் உண்ணுங்கள்.

மாலையில் உண்ண வேண்டிய நொறுக்குத் தீனிகள்

மாலை வேளைகளில் உண்ணும் நொறுக்குத் தீனிகளில் தான் அதிக கவனம் தேவை. மாலை வேளையில் பசி எடுக்கும் போது சாண்ட்விச் அல்லது சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ண நம்மை தூண்டும். பசி நம்மை வாட்டும் போது நாம் எதனை உண்ணுகிறோம் என்பதை பற்றி அதிகம் கவலை கொள்வதில்லை. இது அன்றாடம் நடக்கக் கூடியது என்றால் அது நம் உடல் நலத்தை நாம் நினைப்பதை விட வெகுவாக பாதித்து விடும். அதனால் நட்ஸ், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை உங்கள் மாலை வேளை நொறுக்குத் தீனியாக பயன்படுத்துங்கள்

அழகு குறிப்புகள்: குதிகால் செருப்பு வாங்க போறீங்களா..?



குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.

* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.

* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.

* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி ‘நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.

* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர்கள் சொல்லும் ஆலோசனை:-


குதிகால் செருப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:


* உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.

* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.

* நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.

* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் ‘சோல்’ ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பானதாக இருக்கும்.

* குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.

* குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும்.

* அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது.

நடக்கும்போது கவனிக்க வேண்டியவை:

* குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதிரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்தமான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.

* கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும்.

* குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.

* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏறவேண்டும்.

* மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.

* குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.

* அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.

* கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.

* கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.

நெ‌ட் பை‌த்‌தியமா..? ‌சி‌கி‌ச்சை தேவை..! - ''மனோதத்துவம்''



பலரு‌ம் க‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்தா‌ல் உலகமே மற‌ந்து போ‌ய்‌விடு‌கிறது எ‌ன்று ம‌கி‌ழ்‌ச்‌சியாக‌க் கூறு‌ம் கால‌ம் போ‌ய், க‌‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்து உலக‌த்தையே மற‌ந்து‌வி‌ட்டவ‌ர்க‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கால‌ம் இது.

இ‌ந்த நெ‌‌ட் பை‌த்‌திய‌ங்களா‌ல் பண‌ம் ச‌ம்பா‌தி‌ப்பது நெ‌ட் செ‌‌ன்ட‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, நெ‌ட் பை‌த்‌திய‌ங்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ஒரு மைய‌ம் ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டது ‌வியாபார‌த்தை.

இணைய‌ம் ப‌ற்‌றி வகு‌ப்பு எடு‌த்து ச‌ம்பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு இப‌்போது வேலை இ‌ல்லை. அ‌ந்த ‌நிலை மா‌றி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது.

எப்போதும் இணைய‌த்‌தி‌ல் எதையாவது செ‌ய்து கொ‌ண்டு க‌ணி‌னி முன் ‌சிலையாக‌க் கிடப்பவர்களுக்கு இன்டர்நெட் அடி‌க்ச‌ன் சின்ட்ரோம் (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.

இதுபோன்றவ‌‌ர்களு‌க்கு மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இ‌ந்த ‌சி‌கி‌ச்சை‌க்கு பெ‌ய‌ர் எ‌ன்ன‌த் தெ‌ரியுமா? ‌ரீ-‌ஸ்டா‌ர்‌ட் எ‌ன்பதுதா‌ன். க‌ணி‌னியா‌ல் ஹே‌ங்‌க் ஆ‌‌கி‌ப் போனவ‌ர்களு‌க்கு ரீ-ஸ்டார்ட் எ‌ன்ற இ‌ந்த ‌சி‌கி‌ச்சை 45 நாட்கள் அளிக்கப்படும்.

இதுபற்றி ரீ-ஸ்டார்ட் இணை நிறுவனர், மனவியல் நிபுணர் மரு‌த்துவ‌ர் லாரி கேஷ் கூறுகையில், இணைய‌ம் துவ‌ங்‌கிய‌ப் ‌பிறகு ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளு‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டன. சமூக மா‌ற்ற‌ங்களு‌ம் ஏ‌ற்ப‌ட்டுவ‌ி‌ட்டன. இ‌தி‌ல் இணைய‌த்தை ஒரு வரைமுறை‌யி‌ல் வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌ப்‌பி‌க்‌கி‌ன்றன‌ர். அ‌ப்படி த‌ப்‌பி‌க்க முடியாதவ‌ர்களு‌க்கு இ‌ங்கு ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.

இ‌ந்த மைய‌த்‌தி‌ல் ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் வரை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், ‌வீடியோ/க‌ணி‌னி ‌விளையா‌ட்டுக‌ளி‌ல் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலையாம். பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம், மசாஜ், நடை‌ப் ப‌யி‌ற்‌சி, கல‌ந்தா‌‌ய்வு என பல க‌ட்ட ‌சி‌கி‌ச்சைக‌ள் உண்டு. இத‌ற்கென உ‌ள்ள சிகிச்சை நிபுணர்கள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களை‌த் த‌னி‌த்த‌னியாக கவ‌னி‌க்‌கிறா‌ர்க‌ள்.

ஆனா‌ல் நெ‌ட் பை‌த்‌திய‌ம் ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு முழு‌ப் பை‌த்‌திய‌ம் ஆ‌கி‌விடு‌ம், இத‌ற்கான க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்டா‌ல். ஆ‌ம்.. ஒ‌ன்றரை மாத‌த்‌தி‌ற்கு அதாவது 45 நா‌‌ட்களு‌க்கு ரூ.6.75 ல‌ட்சமா‌ம்.

அ‌ம்மாடியோ‌வ்…
இ‌ந்த க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்ட ‌பிறகு தலை லேசாக சு‌ற்று‌ம். எனவே ‌நீ‌ங்களாகவே நெ‌‌ட்டி‌ல் இரு‌ந்து ‌ஓரள‌வி‌ற்கு ‌வில‌கி‌க் கொ‌ள்ளலா‌ம் அ‌ல்லவா? அத‌ற்காக எ‌ங்க‌ள் இணைய‌ தளத்தை‌ப் பா‌ர்‌ப்பதை த‌வி‌ர்‌க்க வே‌ண்டா‌ம். அதை‌ப் பா‌ர்‌த்தா‌ல்தானே இ‌ப்படியெ‌ல்லா‌ம் ‌பிர‌ச்‌சினை இரு‌க்‌கிறது எ‌‌ன்று உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரிய வரு‌ம். எ‌ன்ன நா‌ன் சொ‌ல்வது?

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!

முதுகு வலி: 10 எளிய தீர்வுகள்..!


நீங்கள் அலுவலகத்தில் வெகு நேரம் கம்ப்யூட்டர் முன் அசையாமல் அமருபவரா? ஒரு வேளை உங்களுக்கு முதுகு வலி இதுவரை எட்டி பார்க்காவிட்டால், போதிய முன் எச்ச்ரிக்கைகளுடன் நீங்கள் செயல்படாதவரெனில் உங்களுக்கு முதுகு வலி பிரச்சனை கூடிய விரைவில் வரும்.

ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். உணவுகளில் அக்கறையின்மை, வைட்டமின் டி குறைபாடு, உட்காருவதில் அலட்சியம், சரியான இருக்கைகள் இன்மை, வேலைக்கு தேவையான பொருட்களை கண்ட இடங்களில் வைத்து உபயோகிப்பது போன்ற பல பிரச்சனைகளை நாமே ஏற்படுத்தி கொள்கிறோம்.

எனவே வேலையின் போது சில விஷயங்களில் கவனம் கொண்டால் முதுகு வலி பிரச்சனையிலிருந்து நீங்கள் உஷாராக தப்பித்துவிடலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை,

1. உட்காரும் தோரணை

அலுவகத்திலோ, வீட்டில் சகஜமாக டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனம் கொள்ள வேண்டும். உட்காரும் போது விழிப்புடன் நேராகவும், சரியான உடல் தோரணையிலுமே அமர்ந்தாலும், வேலையின் பளுவால் நீங்கள் சற்று சோர்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இப்படியான பட்சத்தில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை கருத்தில் கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும். நாளடைவில் இது உங்களின் மாறா பழக்கவழக்கமாக மாறிவிடும்.

வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேர் முகமாகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

2. உடற்பயிற்சி
கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.

அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். ௦20 எண்ணிக்கைகள் வரை இதே வாக்கில் இருக்கவும். நாள்பட பயிற்சியின் நேரத்தை 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

3.உணவு முறை:

பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள். கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

4. வைட்டமின்கள்:

 கால்ஷியம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் உணவுகளை உடல் ஏற்காது. அதே போல வைட்டமின் பி 12 , எலும்பு மஜ்ஜையின் வாழ் நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவையாலும்.

5. தாதுக்கள்:

 எலும்பின் வளர்ச்சி, வலிமையை கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவையை உணவில் சரிவர எடுத்து கொள்ளுதல் ஒரு சீரான சத்தான உடலை அமைத்து கொள்ள உதவும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமக்கு முக்கியமானவை.

6. சூடான குளியல்:

 வலி மிகுந்த நேரத்தில், சோம்பல் படாமல் சூடான குளியளில் ஈடுப்படுவது நல்லது. உற்சாகத்தையும் இது தரும்.

7. சப்ளிமென்ட்ஸ்:


 நல்ல உணவு அதனுடன் தேவையான சில சப்ளிமென்டுகளை எடுத்து கொள்ளுங்கள், பல சமயங்களில் உடனடி உடல் தேவையை சப்ளிமென்டுகள் ஈடு செய்யும்.

8. மசாஜ்: 

வாரம் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கத்தில் கொள்ளுங்கள், வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைக்களை உற்சாகப்படுத்த இது உதவும்.

9. கடுகு எண்ணெய்:

 எலும்புகளை வலுவூட்ட கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடங்கள். கடுகு எண்ணெய் எலும்பிற்கு உகந்தது.

10.ஆரோகியமான சூழ்நிலை:

 சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் சூழல், எண்ணம் கொண்ட நண்பர்களை வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அப்படி இல்லை எனில் அவர்களை மாற்ற பாருங்கள்.

Sunday 5 January 2014

இட்லி, தோசை மாவில் பயங்கர கலப்படம்..!



தென்னிந்தியர்களின் உணவில் இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரைண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவாகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.

சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அரை கிலோ பாக்கெட் மாவு ரூ.30. பாக்கெட்டுகளில் விற்கப்படும் மாவுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம்.

தயாரிக்கப்பட்ட இடம், தரம், சேர்க்கப்பட்டுள்ள அரிசி, உளுந்து விகிதம் என அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவு தரமான உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை. ஆனால், இந்த நிபந்தனைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியே. இம்மாவில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம், பிளீச்சிங் பவுடர், ஒயிட் கெமிக்கல்ஸ் போன்றவை கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இவ்வாறு கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குடிசை தொழில் போல் பெருகி வரும் மாவு விற்பனை தொழிலை முறைப்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரமான முறையில் தரமான மாவு பொது மக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் முயற்சிக்கவேண்டும்.

மதுரை மருத்துவக்கல்லூரி ஓய்வு பெற்ற நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில் ‘இட்லி, தோசை மாவு தரமான அரிசி, உளுந்து கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விற்கப்படும் போது யாருக்கும், எவ்வித பாதிப்பும் கிடையாது. மாவு தயாரிக்க நல்ல தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுவது அவசியம்.

மாவு தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்கள் வரை தான் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியும். அதற்கு மேல் கெட்டுப் போய் விடும். இம்மாதிரியான சூழலில் மாவு தயாரிக்கும் அனைவரும் தரமான அரிசி, உளுந்துகளை பயன்படுத்துகிறார்கள் என சொல்ல முடியாது. கடைகளில் மக்கி போன, பூஞ்சை படர்ந்த அரிசி, உளுந்து போன்றவை மாவு தயாரிப்பவர்களுக்காக மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு கிலோ இட்லி அரிசி ரூ.35 என்றால் காலாவதியான அரிசி கிலோ ரூ.5 முதல் ரூ.10க்கு கிடைக்கிறது. அதே போல் உளுந்து கிலோ ரூ.70 என்றால் இந்த உளுந்து அதிகபட்சம் கிலோ ரூ.20 தான். தற்போது கிடைக்கும் விலையில்லா அரிசியைக் கொண்டு குறைவான செலவில் அதிக லாபம் ஈட்டலாம். மாவு வெண்மையாக, பஞ்சு போல் இருப்பதற்காக சிறிதளவு சுண்ணாம்பு, பிளீச்சிங் லிக்குவிட் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அரைத்தவுடன் புளிப்பதற்கு ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.

மாவு தயாரிக்கும் அனைவரும் இம்மாதிரியான முறைகளையே பின்பற்றுகின்றனர் என்று சொல்ல இயலாது. பெரும்பாலானவர்கள் குறிப்பாக வீடுகளில் மாவு தயாரிப்பவர்கள் சுகாதாரமான முறைகளை பின்பற்றுவது கடினம்.  மினரல் வாட்டரை மாவு தயாரிக்கும் அனைவருமே பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவு. தயாரிக்கப்படும் கிரைண்டர், இடம் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? என்பதும் கேள்விக்குறியே. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவுகளை உண்ணும் போது  உடனடியாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்.

சரியான முறையில் அரிசி, உளுந்து கழுவப்படாமல் இருந்தால் நீரில் பரவும் நோய்களான டைப்பாய்டு, காலரா, போன்றவை வர வாய்ப்புள்ளது. இதனையே தொடர்ந்து பயன்படுத்தும் போது தோல் சம்மந்தமான வியாதிகள், குடல் பாதிப்புகள், உணவு விஷமாதல்(புட் பாய்சன்) ஏற்படும். செறிமான கோளாறு, அடிக்கடி வயிறு வலி, வயிறு எரிச்சல் வரும். பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். வெளியில் மாவு வாங்குவதை தவிர்ப்பதன் மூலமே இம்மாதிரியான நோய்களை தடுக்க இயலும்‘ என்றார்.

மாவு விற்பனை மூலம் அதிக லாபம்

வீடுகளில் மாவு விற்பனை செய்யும் சாந்தி கூறியதாவது: ‘ஒரு படி ரேஷன் அரிசிக்கு, கால் கிலோ ரேஷன் உளுந்து பயன்படுத்துவோம். ஒரு டீஸ்பூன் வெந்தயம் போடுவோம். ரேஷன் அரிசி இலவசமாக கிடைக்கிறது. ரேஷன் உளுந்து ஒரு கிலோ ரூ.30 தான். அப்போது கால் கிலோ உளுந்து ரூ.7.50. இதனை அரைக்க ஒரு யூனிட் கரன்ட் தான் செலவாகும். ஆக மொத்தம் ஒரு படி மாவு அரைக்க தயாரிப்பு செலவு ரூ.10 தான். மாவு பஞ்சு போல் சாப்ட்டாக வருவதற்கு கொஞ்சம் ஆப்ப சோடா சேர்த்துக்கலாம். ரேசன் பச்சரிசி பாதி, ரேஷன் புழுங்கல் அரிசி பாதி சேர்த்தால் மாவு வெள்ளையா தான் இருக்கும். நல்லா கழுவிட்டா வாடையே இருக்காது. இந்த மாவை ஒரு கப் ரூ.20க்கு 5 பேருக்கு விற்கலாம். ஒரு நாளைக்கு எப்படியும் 5 படி அரைச்சு விற்போம். இதனால் குறைந்தது ரூ.400 லாபமாக கிடைக்கும்‘ என்றார்.

புகார் வந்தால் நடவடிக்கை உறுதி

மதுரை மாவட்ட உணவு மற்றும் மருந்தியல் பாதுகாப்பு நிர்வாக அலுவலர் டாக்டர் சுகுணா கூறியதாவது: ‘மதுரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உணவு பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 8 ஆயிரம் பேர் இட்லி, தோசை மாவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடைகளில் பாக்கெட் செய்து இட்லி தோசை மாவு விற்பனை செய்பவர்கள் எங்களிடம் பதிவு செய்துள்ளனர். அவர்களின் தயாரிப்பு இடம், தயாரிப்பு முறை, பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தையும் ஆய்வு செய்து உரிமம் வழங்கியிருக்கிறோம். வீடுகளில் மாவு தயாரிப்பவர்களையும் எங்களிடம் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் யாரும் முன்வருவது இல்லை. மேலும், சுகாதாரமான முறையில் எவ்வாறு மாவு தயாரிக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.  புகார் பெறப்பட்டால் மாவு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு, கலப்படம், சுகாதாரமின்மை கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

3 வருடம் சிறை தண்டனை உண்டு

நுகர்வோர் கண்காணிப்பகத்தின் தலைவர் வக்கீல் பிறவிப்பெருமாள் கூறுகையில், கலப்பட தடைச் சட்டம் மற்றும் உணவுப்பொருள் தர நிர்ணயம் சட்டப்படி புகாருக்குள்ளான உணவுப்பொருளின் மாதிரி எடுக்க வேண்டும். 14 நாட்களுக்கு பகுப்பாய்வு செய்து அதன் முடிவை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கொடுக்க வேண்டும். ஆய்வு முடிவின் அடிப்படையில் இருவிதமான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தால் மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் வழக்கு நடைபெறும். இதில் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். அடுத்த நிலையில் டிஆர்ஓ கோர்ட் மூலம் வழக்கு நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலப்பட தடுப்பு பிரிவிற்கு என தனியாக நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்..!




தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும்.

அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா?

அப்படி தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ண வேண்டும். நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவா இருக்கும்னு. நினைக்கிறீங்க…? வேற ஒண்ணுமில்ல, குழப்பம்தான். அட ஆமாங்க சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாக் கூட தூக்கமே வராது.

ஆனா இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிஞ்சிக்கலாம்


செர்ரி பழங்கள்:

நம் உடலுக்குள் இருக்கும், உடலியக்கங்களை கட்டுப்படுத்தும் ஒருவகையான கடிகாரமான உயிரியல் கடிகாரமானது நம்ம தூக்கத்தையும் கட்டுப்படுத்துகிறது.

இந்த கடிகாரத்தை உறக்கத்தை நெறிப்படுத்த ஆணையிடும் திறனுள்ள மெலடோனின் அப்படீங்கிற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் செர்ரிபழங்கள்.

அதனால இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இரண்டு செர்ரி பழங்களை சாப்பிட வேண்டும்.

வாழைப்பழம்:

இயற்கையான தசை தளர்த்திகளான பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம்ம வாழைப்பழத்துல நிறைய இருக்கு.

அது மட்டுமல்லாமல் எல் ட்ரிப்டோபன் அப்படீங்கிற அமினோ அமிலமும் வாழைப்பழத்துல இருக்குது. இந்த எல் ட்ரிப்டோபான் அமினோ அமிலமானது மூளைக்குள்ளே 5 HTP அப்படீங்கிற ஒரு ரசாயனமா மாறிவிடும். அதன் பிறகு இந்த 5 HTP-யானது செரடோனின் மற்றும் மெலடோனினாக மாறிவிடும்.

டோஸ்ட்:

நாம பொதுவா காலை உணவா அதிகம் சாப்பிடுற டோஸ்டுக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்.

மாவுச்சத்து நிறைந்த உணவுகள் எல்லாமே இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டும். இந்த இன்சுலின் ஹார்மோன் உறக்கத்தை தூண்டக்கூடியதாகும். இன்சுலின் ஹார்மோனானது மூளையிலிருந்து ட்ரிப்டோபான் மற்றும் செரடோனின் ஆகிய ரசாயனங்களை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்யும் சமிக்ஞைகளை உருவாக்கிறதாம். மூளையிலிருந்து வெளியாகும் இவ்விரு ரசாயனங்களும் உறக்கத்தை தூண்டிவிடும் திறன் கொண்டவை ஆகும்.

ஓட் மீல்:

ஓட்ஸ் கஞ்சி சொல்லுவாங்களே அதத்தான் அமெரிக்காவில் ஓட் மீல் சொல்லுவாங்க.

அதாவது மேலே சொன்ன டோஸ்‌ட் மாதிரியே இந்த ஓட்ஸ் கஞ்சியும் ரத்தத்துல இருக்குற சர்க்கரை அளவை அதிகப்படுத்தி அந்த சர்க்கரை இன்சுலின் ஹார்மோன் சுரப்பதை தூண்டிவிட அதன் விளைவாக உறக்கம் தூண்டும். மூளை ரசாயனங்கள் சுரந்து கடைசியா… “உறக்கம் உன் கண்களை தழுவட்டுமே… நிம்மதி நெஞ்சினில் மலரட்டுமே… அப்படீன்னு நாம தூங்கிடலாம்”

கதகதப்பான பால்:

உறக்கம் தரும் இயற்கை உணவுகள் தரவரிசையில் நாம இன்னைக்கு பார்த்த மேலே இருக்குற 4 உணவுகளுமே புதுசுதான்.

ஆனா பால் மட்டும் பழசுதான். ஆமாம் சின்ன வயசுலேர்ந்து ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் அப்படீன்னு அம்மா காய்ச்சின பாலை கொடுப்பாங்க இல்லையா?

ஆனா நம்ம அம்மாவுக்கு இந்த பால்ல இருக்குற எந்த வேதி‌யியல் மூலப்பொருள் காரணமாக நமக்கு தூக்கம் வருதுன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை

வாழைப்பழத்துல இருக்குற எல் ட்ரிப்டோபன் அமினோ அமிலம் பாலிலும் இருக்கிறது, அதுதான் செரடோனின் உற்பத்தி மூலமா உறக்கம் வரவைக்கும். அதுமட்டுமல்லாமல் பாலில் அதிக கால்சியம் இருப்பது உறக்கத்தை தூண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

உறக்கம் நல்லா வரனும்னா இனிமே யாரும் தூக்க மாத்திரைகளை சாப்பிடாதீங்க. அதுக்கு பதிலா மேலே சொல்லியிருக்குற ஐந்து வகையான இயற்கை உணவுகளை சாப்பிட முயற்சி பண்ணுங்க, ஏன்னா, அவசியமில்லாம மாத்திரைகளை சாப்பிடுறது உடலுக்கு கேடுதான்.

அதிகரிக்கும் இணையதள அடிமைகள் – அதிர்ச்சி தகவல்..!




இன்றைய காலத்தில் இணையத்தை பற்றி தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த இணையமானது வேகமாக பெயர் பெற்று வருகிறது.

இந்த இணையத்தின் மூலம் நமக்கு பல நன்மைகளும் உள்ளன கெட்டவைகளும் உள்ளன அதை நாம் முதலில் புரிந்து கொண்டு பின்பு இணையத்தை நல்ல வழிகளுக்கு பயன்படுத்த வேண்டும் இந்தியாவில் சராசரியாக ஒருவரால் நாளொன்றுக்கு 8 மணி நேரம் இணையப் பயன்பாடு மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்ந்து இணைப்பில் இருப்பவர்கள், அவர்கள் விழித்திருக்கும் நேரத்தில் பாதிக்கு மேலான நேரத்தை இணையத்தில் செலவிடுகின்றனர். இது வாரத்திற்கு 58 மணி நேரமாக உள்ளது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் பாதிப்பேருக்கு, இணைய தொடர்பு அற்ற நிலையில் முதல் மூன்று மணி நேரம் ஒருவகை மனப்பாதிப்பில் இருந்தவர்களாகவே உள்ளனர்.

இன்னொரு ஆய்வில், இணையத்தைப் பயன்படுத்துபவர்கள், ஒரு வாரத்தில், இணைய உலாவில் 12.9 மணி நேரமும், சமுதாயத் தளங்களில் 11 மணி நேரமும், மின்னஞ்சல் பயன்படுத்துவதில் 3.3 மணி நேரமும் செலவழிக்கின்றனர். இந்த ஆய்வு, இணையம் பயன்படுத்தும் 500 பேர்களைத் தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது. இவர்கள் வயது 18 லிருந்து 64 வரை உள்ளவர்கள்.

இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 86% பேர், தாங்கள் இணைய இணைப்பில் இல்லாமல் 24 மணி நேரத்திற்கு மேல் இருக்க முடியாது என உறுதியாகத் தெரிவித்தனர்.

இணையத் தொடர்பு இல்லாமல் போனால், தங்கள் அத்தியாவசிய வேலை அதிகம் பாதிக்கப்படும் எனவும் கூறினர். அடுத்ததாக, இவர்கள் முக்கியத்துவம் அளித்தது சமுதாய இணைய தளங்களைப் பயன்படுத்துவதுதான். மூன்றாவதாகத் தான், இணையவழி வர்த்தகம் மேற்கொள்வது மற்றும் பணம் செலுத்துவதனைக் கூறினர்.

ஒவ்வொருவரும் வீட்டில், குறைந்தது இரண்டு சாதனங்களையாவது இன்டர்நெட்டில் இணைத்து பயன்படுத்துகின்றனர் இன்றைய தலைமுறையினர்.

இன்னொரு வியக்கத்தக்க தகவலும் வெளியானது. தங்களுடைய தனிப்பட்ட தேவைக்கென வைத்துள்ள கம்ப்யூட்டரில், அடுத்தவர்களை அனுமதிப்பதை வெறுத்தனர். ரூ. ஒரு லட்சம் இழப்பு கூட இதைக் காட்டிலும் பெரியதாகத் தெரியவில்லை அவர்களுக்கு.

இவர்களில் 60% பேர் மட்டுமே தங்கள் கம்ப்யூட்டர்களில் அடிப்படைப் பாதுகாப்பினை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளும் புதிய மால்வேர் புரோகிராம்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இல்லை என நார்டன் ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றனர்.

இணைய இணைப்பு பெறுவதில் 92% அளவில் கம்ப்யூட்டர்களும், 83% அளவில் மொபைல் போன்களும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்..!




ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்..!

  பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.

உப்பு:

இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.

ரீபைண்ட் ஆயில்:

செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே.
அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.

வெண்ணெய், நெய், வனஸ்பதி:


வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.

உலர்ந்த தானியங்கள்:

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

பாலிஷ் அரிசி:

அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சந்தை காய்கறி, பழங்கள்:


உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.

பால்:

பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.

கோலா, காபி, டீ:


இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.

சர்க்கரை:

சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.

ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.

Saturday 4 January 2014

குழந்தைகளை(யும்) குறி வைக்கும் ஹைப்பர் டென்ஷன்!- கொஞ்சம் அலசல்




முன்பெல்லாம் பெரியவர்களுக்கான நோய்கள் என்பதாக வகைப் படுத்தப்பட்டவை, தற்போது சிறிய குழந்தைகளிடமும் சாதாரணமாக தோன்ற ஆரம்பித்துள்ளன. கெட்டுவிட்ட சுற்றுச்சூழலும், தவறான மருத்துவப் பழக்க வழக்கங்களும் மற்றும் நமது வாழ்க்கை முறையுமே இவற்றுக்கு பிரதான காரணம்.அதிலும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை தற்போது குழந்தைகளையும் அதிகம் வாட்டும் ஒரு நோயாக மாறிவிட்டது. எனவே, அதுதொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை செய்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் என்ன?


பொதுவாக பெரியவர்களுக்கு மட்டுமே, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த அழுத்த சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள், குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பதை நிரூபிக்கின்றன. எனவே, 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் ரத்த அழுத்த சோதனை நடத்த வேண்டியது அவசியமாகிறது.

குழந்தைகள் மத்தியில் எந்தளவிற்கு உயர் ரத்த அழுத்த சிக்கல்கள் உள்ளன?

இப்பிரச்சினை, இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, 3 – 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிடம், 3.6% அளவிற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது. அதேசமயம், சீனாவைப் பொறுத்தவரை, 8 முதல் 17 வயது வரையிலான பள்ளி குழந்தைகளிடம் 17.4% அளவிற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது.

குழந்தைகளிடம் ரத்த அழுத்த சோதனை நடத்தவில்லை என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?

உயர் ரத்த அழுத்த பிரச்சினைக் கொண்ட 75% குழந்தைகள், சோதனைக்கு உட்படுத்தப்படாமலேயே உள்ளனர். இதன்மூலம், அவர்கள் பெரியவர்கள் ஆனதும், இதயம் மற்றும் ரத்த நாளம் தொடர்பான நோய்களுக்கு உள்ளாகின்றனர். உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள ஒருவர், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு மற்றும் இதய நோய் ஆகியவை தாக்குவதற்கான அதிகபட்ச ஆபத்தில் இருக்கிறார்.

உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, முறையான கவனிப்பிற்கு உட்படுத்தப்படாவிட்டால், மூளை வீக்கம், குழப்பம், கோமா, தீவிர தலைவலி மற்றும் குருட்டுத் தன்மை உள்ளிட்ட மோசமான நிலைகளுக்கு ஆட்படும் ஆபத்து உள்ளது. எனவே, ஆண்டிற்கு ஒரு முறையாகினும், குழந்தைகளுக்கு ரத்த அழுத்த சோதனை நடத்தப்பட வேண்டும்.

குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை அதிகரிக்க காரணங்கள் என்ன?

இன்றைய சமூகத்தில், குழந்தைகளின் வாழ்க்கை முறையில் பல விரும்பத்தகாத அம்சங்கள் இருப்பதே அதற்கு காரணம். உதாரணமாக, அதிகமாக தொலைக்காட்சிப் பார்த்தல், கணினி முன்பாக அதிகநேரம் செலவழித்தல், வீடியோ கேம் விளையாடுதல், ஜங்க் உணவுகளை உண்ணுதல் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படும் பானங்களைப் பருகுதல் உள்ளிட்ட பல பழக்கவழக்கங்களால், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுகிறது.

அதேசமயம், தேவைக்கும் குறைவான உடலியக்கம், தொடர்ச்சியாக உடற்பயிற்சிகள் செய்யாமை, உடல் சார்ந்த விளையாட்டுக்களுக்கு வாய்ப்பில்லாமை உள்ளிட்ட அம்சங்கள் ஒரு குழந்தை குண்டாவதற்கு மட்டுமல்ல, அக்குழந்தை உயர் ரத்த அழுத்த பிரச்சினையை எதிர்கொள்வதற்கும் காரணமாகின்றன.

குழந்தைகளின் உயர் ரத்த அழுத்த சிக்கலைத் தீர்க்க கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகள், நல்ல சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட ஊக்கப்படுத்தப்பட வேண்டும். மேலும் ஜங்க் உணவு மற்றும் சர்க்கரை அதிகம் கலந்த பானங்களை தவிர்க்க வேண்டும்.

காலை, மதியம் மற்றும் இரவு உணவுகளை தவறவிடாமல், சரியான நேரத்தில உண்ண வேண்டும். அதுபோல், அதிகநேரம் தொலைக்காட்சி முன்பாகவோ அல்லது கணினி முன்பாகவோ அமரக்கூடாது. தேவையான அளவிற்கு விளையாட வேண்டும்.

தினந்தோறும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மேலும், இரவில் நெடுநேரம் கண்விழிக்காமல், தினமும் தேவையான அளவு தூங்க வேண்டும்.

குழந்தைகளுக்கான நார்மல் ரத்த அழுத்தம் என்பது என்ன?

பெரியவர்களை எடுத்துக் கொண்டால், அவர்களின் நார்மல் ரத்த அழுத்த அளவு 120/80 mm Hg) என்பதாக இருக்கும். ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை, நார்மல் ரத்த அழுத்தம் என்பது, வயது, பாலினம் மற்றும் உயரம் ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.

எனவே, இதற்கென்று குறிப்பிட்ட அளவீட்டை நிர்ணயிக்க முடியாது. குழந்தையின் ரத்த அழுத்தத்தை அளவிடும் மருத்துவர், அதை reference table -க்கு பொருத்திப் பார்த்து, அது நார்மலா அல்லது அசாதாரணமானதா என்பதை நிர்ணயிக்க வேண்டும்.

இந்த ஒப்பீட்டின்போது, 95% விழுக்காட்டிற்கு மேல் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தமாக கணக்கிடப்படும். உதாரணமாக, ஒரு 5 வயது குழந்தையின் உயரம் 95% விழுக்காட்டில் இருந்தால், 104/65 mm Hg என்பதற்கு மேலான மதிப்பு உயர் ரத்த அழுத்தமாக கருதப்படும்.

குழந்தைகளிடம் நிலவும் மாறுப்பட்ட ரத்த அழுத்த நிலைகள் யாவை?

குழந்தைகளிடம் முதல் நிலையிலான அல்லது அவசியமான உயர் ரத்த அழுத்தம் இருக்கும். இதற்கென பின்னணி உடல் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். அதேசமயம், சிறுநீரக மற்றும் இதய நோய்களுக்கான அறிகுறியாகவும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் இருக்கலாம்.

முன்பு, குழந்தைகளிடம் இருக்கும் அனைத்து உயர் ரத்த அழுத்த பிரச்சினைகளும் இரண்டாம் நிலையிலானவை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நடைபெற்றுவரும் பல ஆராய்ச்சிகளின் விளைவாக, முதல்நிலை அல்லது அவசியமான உயர் ரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய பிரச்சினைகள், இதுவரை பெரியவர்களிடம் மட்டுமே இருந்தவை.

குழந்தைகளிடம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள் யாவை?

உடல் பருமன், சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, தூக்கத்தின்போதான சுவாசப் பிரச்சினை உள்ளிட்டவை, குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை ஏற்படுவதற்கான சில முக்கிய காரணங்கள். ஒரு குழந்தையிடம் உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கிறதென்றால், அதற்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

ரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்கான உகந்த கரம்(hand) எது?

வலது கரம், ரத்த அழுத்தத்தை சோதனை செய்வதற்கான சரியான உறுப்பாகும். இடது கையில் ரத்த அழுத்தத்தை சோதனை செய்தால், இதய நோய் அறிகுறியை கண்டறிவதில் சிக்கல் ஏற்படலாம். ஏனெனில், இடது கை அழுத்தம் குறைவாக இருக்கும்.

White- Coat உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ஒரு குழந்தைக்கு, மருத்துவமனை அல்லது மருத்துவரின் கிளீனிக் ஆகிய இடங்களில் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, அதேசமயம், வீட்டில் அவரின் ரத்த அழுத்தம் சாதாரணமாக இருந்தால், அந்த நிலைக்குப் பெயர் White- Coat Hypertension.

இந்தநிலை, மாறுபடும் மனநிலை அழுத்தம் காரணமாக ஏற்படுவதாகும். இந்த White- Coat Hypertension என்பது தீங்கு தரும் ஒன்றல்ல. எனவே, ஒரு குழந்தை White- Coat Hypertension சிக்கலைக் கொண்டிருந்தால், அதை நினைத்து பெற்றோர் பயப்பட வேண்டியதில்லை. ஏனெனில், அதனால் எந்த தீங்கும் ஏற்படாது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top