.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 9 October 2014

காளிபிளவர் மொச்சை மசாலா...




காளிபிளவரை பகோடா செய்திருப்போம், உருளைக் கிழங்குடன் சேர்த்து வறுவல் செய்வோம். அதேப்போல, மொச்சைக் கொட்டையுடன் சேர்த்து பொறியல் செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
 
செய்யத் தேவையானவை

காளிபிளவர் - ஒரு பூ

மொச்சைக் கொட்டை - 100 கிராம்

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்

கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

தேங்காய் துருவல் - அரை கப்

செய்யும் முறை

மொச்சைக் கொட்டையை குக்கரில் 3 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

காளிபிளவரை ஒவ்வொரு கிளையாக நறுக்கி  ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் ஊற்றி அதில் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து சுத்தப்படுத்தி, தேவையான அளவுக்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயை வைக்கவும். அதில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொறிந்ததும் உளுத்தம் பருப்பை போட்டு அது சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு, வெங்காயத்தையும், தக்காளியையும் போட்டு நன்கு வதக்கி, நறுக்கி வைத்துள்ள காளிபிளவரையும், வேக வைத்துள்ள மொச்சைக் கொட்டையையும் போட்டு நன்கு கிளறவும்.

தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு கிளறவும். அடி பிடிக்காமல் இருக்கும் வகையில் அவ்வப்போது நன்கு கிளறி மசாலா பொருட்கள் சிவந்து வரும் போது தேங்காய் துருவலை சேர்த்து இறக்கவும்.

காளிபிளவர் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் காய்களில் ஒன்றாகும். காளிபிளவரில் கால்சியம் அதிகம் உள்ளது. நரம்பை பலமாக்குவதோடு, புத்துணர்ச்சியை அளிக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இது நல்ல உணவாக அமைகிறது. வாயுத் தொல்லை இருப்பவர்கள், காளிபிளவருடன் பூண்டு சேர்த்து சாப்பிடலாம்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top