.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 4 October 2013

செவ்வாய்க் கிரகத்தில் எரிமலைகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு!



செவ்வாய்க் கிரகத்தில் மனிதனை குடியேற்றும் முகமாக நீர் இருப்பதையும், ஏனைய வளங்களையும் கண்டறியும் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

அதாவது Supervolcanoes எனப்படும் எரிமலைகள் இருப்பதற்கான ஆதாரப் புகைப்படங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தகவல்கள் வெளியிட்டுள்ளனர். 



மேலும் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு செவ்வாயில் இடம்பெற்றிருக்கலாம் என நம்புவதாக Michalski எனும் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.



 




 



 




 



 



இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.!....... விமர்சனம்



தமிழ் சினிமாவில் இது விஜயசேதுபதி நேரம் போல… சமீபத்திய அவர் படங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் ரசிகர்களை பிடித்துக் கொள்கிறது.
படத்தில் கதையிருக்கிறதா… லாஜிக் இருக்கிறதா… நடிப்பு இருக்கிறதா… அது இருக்கிறதா… இது இருக்கிறதா… என்றெல்லாம் கேட்காமல் காசு கொடுத்து பார்க்கிறவன் ரசித்து விட்டு போகிறானா… பணம் போட்டு படம் எடுத்தவன் வசூலை வாரிக் கொள்கிறானா என்று மட்டும் பார்த்தால் இப்போதைய தயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த ஓட்டும் விஜயசேதுபதிக்குத்தான் விழும்போல…



‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ படத்தின் பெயர் என்னவோ தூய தமிழில் இருந்தாலும் படம் முழுக்க வசனங்கள் மெட்ராஸ் மொழி பேசுகிறது.




4 -idharku thane asapattai balakumara.


காலையில் தொடங்கி ராத்திரி வரைக்கும் குடித்து விட்டு சும்மா ஊதாரியாக திரிந்து கொண்டு அதே கேப்பில் எதிர்வீட்டில் இருக்கிற சுவாதியை விரட்டி விரட்டி ஒருதலையாக காதலிக்கும் சுமாரான மூஞ்சு கொண்டவன் கதையின் ஹீரோவான விஜயசேதுபதி.


படத்தில் ஹீரோவுக்கு குமரவேல் என பேர் வைத்திருந்தாலும் அந்த கேரக்டரை சுமார் மூஞ்சி குமாரு என்றே அழைக்கிறார்கள்.


சுமார் மூஞ்சி குமாருவின் ஒருதலைகாதல் தொல்லையால் ஹீரோயின் சுவாதியின் அப்பா பட்டிமன்ற ராஜா தாதாவான அண்ணாச்சி பசுபதியின் உதவியை நாடுகிறார்.


ஒரு ஒயின்ஷாப் மாடியில் ஆரம்பிக்கிற கதையின் பயணம் சில நேரங்களைத்தவிர மற்ற பெரும்பாலான நேரங்களில் ஒயின்ஷாப்பிலேயே தங்கி விடுகிறது.


பசுபதியின் ஆட்களால் சு.மூ.குமாரான ஹீரோ அடித்து துவைக்கப்படுகிறார்… அடி வாங்கிய வேதனையை மறக்க நள்ளிரவில் சரக்கு தேடி அலைகிறார்.
இது மெயின் கதை…


சு.மூ.குமாரு சரக்கு தேடி அலையும் அந்த ராத்திரியில்… ஒரு ஒயின்ஷாப்பில் சரக்கு அடிக்கும் ஒருவரை சத்தமில்லாமல் கொலை செய்கிறார்கள்.
அது தெரியாமலேயே அந்த ஒயின்ஷாப்பில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து விட்டு பைக்கில் திரும்புகிற அஸ்வின் போதையில் எதிரே வந்த ஒரு பெண் மீது மோதுகிறார்.


அந்த பெண் சுயநினைவை இழக்கிறார். அஸ்வினை தேடி அவனது காதலி வருகிறார். காயமடைந்த பெண்ணுக்கு உனடியாக ரத்தம் தேவைப்படுகிறது. அந்த ரத்தப்பிரிவு சிலருக்கு மட்டுமே இருக்கும் அரிதானது.


அந்த சிலரில் நமது ஹீரோ சு.மூ.குமாரும் ஒருவர். அவரைத்தேடி அஸ்வினும் அவனது நண்பர்களும் புறப்படுகிறார்கள்….
சு.மூ.குமாரோ சரக்கு தேடி அலைகிறான்…


ஒயின்ஷாப்பில் கொலை செய்த நான்கடவுள் ராஜேந்திரனும் அவனது நண்பனும் கள்ளக்காதலியை பார்க்க போகிறார்கள்… போகும்வழியில் சரக்கு தேடி அலையும் சு.மூ.குமாருவின் செல்போனை திருடிக் கொள்கிறார்கள்…
ஒயின்ஷாப்பில் அண்ணன் கொலையானதை டிவியில் பார்த்து அதிரும் பரோட்டா சூரி அண்ணன் வீட்டு வருகிறான்… அங்கே அண்ணிதான் ஆள்வைத்து கொலை செய்ததை கண்டுபிடிக்கிறான்…


சு.மூ.குமாரு சரக்கு அடிக்காமல் இருந்தால் தான் ரத்தம் கொடுக்க முடியும் என தேடி அலையும் நண்பர்கள் கையில் ஹீரோ சிக்கினானா…
புருஷனை போட்டுத்தள்ளிய அண்ணியை பரோட்டா சூரி என்ன செய்தான்…


சு.மூ.குமாருவின் ஒருதலைகாதல் ஜெயித்ததா…



கொலையாளிகள் பிடிபட்டார்களா…


இதற்கெல்லாம் கிளைமாக்சில் விடை சொல்கிறார் இயக்குனர் கோகுல்.
படம் வேகமாக போகிறது… போகிற போக்கில் ஒவ்வொருவருக்கும் ஒரு கதையை வைத்து அதை மெயின் கதையோடு கோர்த்து ஒரு சினிமாவாக்கியிருக்கிறார் இயக்குனர் கோகுல்.


மகேஷ்முத்துசாமியின் காமிராவுக்கு பெருசாக வேலை எதுவும் தராத படம் இது. காரணம் ஒயின்ஷாப் விட்டால் ஒயின்ஷாப் இங்கே புதுசாக சொல்ல எதுவும் இல்லை…


சித்தார்த் விபின் இசையில் கானாபாலாவின் பாடலைத்தவிர மற்றது ஹீரோ பேருக்கு முன்னால் இருப்பதுபோலத்தான்.


ரொம்ப நாளைக்கு பிறகு ராஜூசுந்தரம் டான்ஸ் ஆடி நடனம் அமைத்திருக்கிறார். லியோ விஷன் ராஜ்குமார் தயாரிப்பில் ஜேஎஸ்கே சதீஷ்குமார் வெளியிட்டிருக்கிற ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் ஹீரோவின் பேரான ‘சுமார் மூஞ்சி குமார்’ போலவே சுமார் ரகம்தான்..!


ஆஹா!! ஜாலி!!!

'டிவி, பிரிட்ஜ், ஏ.சி., டூவீலர்' போன்றவற்றிற்கு, குறைந்த வட்டியில் கடன்;-


நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், உற்பத்தி பொருட்களின் தேக்கத்தை போக்கவும், 'டிவி, பிரிட்ஜ், ஏ.சி., டூவீலர்' போன்றவற்றிற்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்குமாறு, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுத பூஜை, தீபாவளி என தொடர்ச்சியாக பண்டிகைகளைக் கொண்டாடத் தயாராகும் மக்கள், புதிய பொருட்களை வாங்க, இதன் மூலம் வழி ஏற்பட்டு உள்ளது. நுகர்வோர் சாதனங்களுக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்காக, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு, குறிப்பிட்ட தொகையை பங்கு மூலதனமாக வழங்கும்.



கூடுதல் மூலதனம்: 



வங்கிகளுக்கு நடப்பு நிதியாண்டில், பங்கு மூலதனமாக, 14 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என, மத்திய அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் தெரிவித்தது. இதற்கும் மேலாக, தற்போதைய அறிவிப்பின்படி, பொதுத் துறை வங்கிகளுக்கு, கூடுதல் மூலதனம் வழங்கப்படும். டில்லியில் நேற்று, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலர் அரவிந்த் மயாராம் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.


இதை அடுத்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: பொதுத் துறை வங்கிகளின் மூலதன இருப்பு விகிதத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, நடப்பு நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிதி வரம்பு, தேவையான அளவிற்கு உயர்த்தப்படும். இதன் மூலம், 'டிவி, பிரிட்ஜ், ஏ.சி., டூவீலர்' போன்ற நுகர்வோர் சாதனங்களுக்கு வங்கிகள், தாராளமாக கடன் வழங்க முடியும். இது, இச்சாதனங்களுக்கான தேவையை அதிகரிக்கச் செய்யும். அதே சமயம்,
நுகர்வோருக்கு, குறிப்பாக, நடுத்தர மக்கள் இதனால் பயன் பெறுவர். இந்த நடவடிக்கை, தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளித்து, உற்பத்தி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை அதிகரிக்க வழி வகுக்கும்.



வங்கி கடன் வளர்ச்சி:



கடந்த செப்டம்பர் இறுதி நிலவரப்படி, வங்கிகளின் கடன் வளர்ச்சி, ஆண்டுக்கணக்கில், 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே சமயம், சில துறைகளில், வளர்ச்சி மந்தமாக உள்ளது. குறிப்பாக, நுகர்வோர் சாதனங்கள் துறையின் வளர்ச்சி, குறைவாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு வழங்கும் மூலதனத்தை உயர்த்துவது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளுக்கு கூடுதலாக எவ்வளவு தொகையை பங்கு மூலதனமாக வழங்கும் என்பது குறித்து, அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. அதுபோல், நுகர்வோர் சாதனங்களின் கடனுக்கு, வட்டி விகிதம் எவ்வளவு குறைக்கப்படும் என்பது குறித்தும் வங்கிகள் இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை. வட்டி குறைப்பு அவசியம் குறித்து, ப.சிதம்பரம், விரைவில் வங்கி தலைவர்களுடன் பேச்சு நடத்த உள்ளார். இதையடுத்து, குறைக்கப்பட்ட வட்டி விகிதம்  குறித்து, வங்கிகள், அடுத்த வாரம் அறிவிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.



தேக்கம்: 



'டிவி, பிரிட்ஜ்' உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஜூலையில், 9.3 சதவீதம் குறைந்துள்ளது. இந்த வளர்ச்சி, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 0.8 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான நான்கு மாதங்களில், இத்துறையின் உற்பத்தி, 12 சதவீதம் குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 6.1 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. அரசின் இந்த புது நடவடிக்கை மூலம் இந்த தேக்கத்தில் மாற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கலாம்.


உப்புமூட்டை வியாபாரியும்... இறைவனும்.(நீதிக்கதை)





ஒரு ஊரில் உப்பு வியாபாரி ஒருவன் இருந்தான்...அவனுக்கு முன்னைப்போல வியாபாரம் ஆகாததால் வறுமையில் வாடினான்.

அவன் இறைவனை நோக்கி "ஆண்டவா எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டத்தை குடுக்கிற" என்று கேட்டுவிட்டு தன் கழுதையின்மேல் உப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊர் சந்தைக்கு சென்றான்.ஆனால் வழியில் பெரிய மழை பெய்து உப்பு முழுவதும் கரைந்து போனது..." உன்னை அவ்வளவு வேண்டியும்,,ஏழையான என் வயிற்றில் இப்படி அடித்துவிட்டாயே' என இறைவனைத் திட்டினான்.

பின் மழை சற்றே நிற்க ஊர் திரும்பினான்.வழியில் சில திருடர்கள் ..வியாபாரிகள் தன் பொருளை சந்தையில் விற்றுவிட்டு பணத்துடன் வருவார்கள் என எண்ணி வெடி மருந்து கொண்டு வெடிக்கும் துப்பாக்கியுடன் நின்றார்கள்.

வியாபாரி திரும்பி வரும்போது வெடிமருந்து மழையால் நனைந்திருந்ததால் துப்பாக்கி வெடிக்கவில்லை..உடனே திருடர்கள் மாட்டிக்கொள்வோமோ என்று பயந்து ஓட்டம் பிடித்தனர்.

அப்போதுதான் உப்பு வியாபாரி நினைத்தான்,"மழை வந்ததால் உப்பு தான் போச்சு....மழை வராதிருந்தால் என் உயிர் அல்லவா போயிருக்கும்...ஆண்டவன் கருணையே கருணை...அது புரியாமல் ஆண்டவனை திட்டினேனே" என உருகினான்.


நமக்கு எந்த ஒரு துன்பம் வந்தாலும் ..அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும் என்பதை அறிய வேண்டும்.அதுபோல் துன்பம் விலகவும் ஒரு வழி இருக்கும் என்றும் உணரவேண்டும்.

கார்ட்டூன் நண்பர்களே! கார்ட்டூன்!



5-year jail for corruption in the case of cattle feed Lalu 


கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்!

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top