.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label எச்சரிக்கை! உடல்நலம்!. Show all posts
Showing posts with label எச்சரிக்கை! உடல்நலம்!. Show all posts

Saturday 4 January 2014

கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி....




கலப்பட பெருங்காயத்தை அறியும் வழி
கலப்பட பெருங்காயம் சமையல்பெருங்காயம்
வாயுத் தொல்லைக்கு பெருங்காயம்


பெரின்னியல் (pernnial plant) என்னும் சிறு மரவகையின் பிசின்தான் பெருங்காயம் என்பது. இது இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், வெளிநாடுகளில் ஈரான், ஆப்கானிஸ்தானம், துருக்கி, பெஷாவர் போன்ற இடங்களிலும் இந்தச் சிறு மரம் நன்றாக விளைகிறது.

மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பூ பூப்பதற்கு முன்பாக, நான்கு, ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்துள்ள சிறுமரத்தின் கேரட் வடிவத்திலுள்ள வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள்.

இருவகை நிறங்களில் இந்தப் பிசின் கிடைக்கின்றன. கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் அவை இருக்கும். கருஞ்சிவப்பான பிசினும் கருப்பு வகையில்தான் சேர்க்கப்படும். வெள்ளை நிறமாக உள்ள பால் பெருங்காயம் நல்ல மணமும் மருத்துவக் குணங்கள் அதிகம் கொண்டதுமாகும்.

கலப்படம் செய்து விற்கப்படும் பெருங்காயத்தை அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. இந்தப் பெருங்காயத்தைத் தண்ணீரில் போட்டால் கரையாமல் கோந்து போலக் காணும். அந்தக் கோந்தை எடுத்து எரித்தால் கரி மட்டுமே மிஞ்சும். கலப்படமில்லாத சுத்தமான பெருங்காயமானால் தண்ணீரில் போட்டவுடன் கரைந்து தண்ணீர் பால் நிறமாக மாறிவிடும். மேலும் சுத்தமான பெருங்காயத்தின் மேல் தீக்குச்சியைப் பற்றவைத்துப் போட்டால் கற்பூரம் போலப் பற்றிக் கொண்டு முழுவதுமாக எரிந்துவிடும்.

பெருங்காயத்திலுள்ள “ஓலியோ ரெஸின்’ மிக உயர்ந்த மருத்துவ குணங்களைக் கொண்டது.

பாவப் பிரகாசர் எனும் முனிவர் பெருங்காயத்தைப் பற்றி குறிப்பிடுகையில் அது உஷ்ணம் (சூடான வீர்யத்தைக் கொண்டது), பாசனம் (எளிதில் தானும் ஜீரணமாகி தன்னைச் சுற்றியுள்ள மற்ற உணவையும் விரைவில் ஜீரணம் செய்துவிடும்), ருச்யம் (வாயில் ருசியை அறியும்.

கோளங்களில் படிந்துள்ள அழுக்கை அகற்றி ருசியைத் தூண்டிவிடும்). ஸ்த்ரீபுஷ்பஜனனம் (கருப்பையைச் சார்ந்த முட்டையை நன்றாக உற்பத்தி செய்து மாதவிடாய் கோளாறுகளைப் போக்கும் அதனால்தான் பிரசவித்தவுடன் தாய்க்கு இதைப் பொரித்துப் பூண்டு, பனை வெல்லம், இஞ்சிச் சாறு இவைகளுடன் கொடுப்பது உண்டு), பவ்யம் (உடலுக்கு வலுவைக் கூட்டும் பெருங்காயத்தை நெய்யில் பொரித்துத் தசமூலாரிஷ்டம், வில்வாதி லேஹ்யம், ஜீரக வில்வாதி லேஹ்யம் இவைகளில் ஏதாவது ஒன்றுடன் சிட்டிகை சேர்த்து உணவிற்குப் பின் சாப்பிட, வயிற்றில் அஜீர்ணம், அஜீர்ண பேதி, குடலோட்டம், பசியின்மை, ஜீரண சக்திக் குறைவு ஆகியவற்றைப் போக்கி, உடலுக்கு வலுவைத் தரும்), மூர்ச்சாபஸ்மாரஹ்ருத்பரம் (மூர்ச்சை எனும் மயக்கநிலை, வலிப்பு ஆகிய நோய்களில் மிகவும் உபயோகமானது) என்று கூறுகிறார்.

முடி உதிர்வதற்கான காரணங்கள் என்ன..?



உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்கியமாக இருக்கும். உடல் ஆரோக்கியமின்மைக்குக் காரணம் சத்துக்குறைவு தான். சுவையானது என்று நாம் தேர்ந்தெடுத்து உண்ணும் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இல்லாததால், ஆரோக்கியம் குறைவதோடு முடி தொடர்பான பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன.

சமச்சீரற்ற முறையில் ஹார்மோன் சுரத்தல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வைட்டமின் பற்றாக்குறை, பொடுகு, டைபாய்டு, மலேரியா, தைராய்டு, நீரிழிவு, கூந்தலில் அதிகமான ஈரப்பதம் ஆகியவை முடி உதிர்வதற்கான முக்கிய காரணங்கள். குறிப்பிட்ட கால்சியம், வைட்டமின், தாது உப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொண்டாலும் முடியானது உலர்ந்த தன்மையை அடையலாம்.

பிற நோய்த்தொற்றுகள் ஏற்பட்டாலும் முடி உலர்ந்து, கொட்டிப்போகும். எனவே தலைமுடி கொட்டுவதற்கு அடிப்படை பிரச்சினை என்ன? என்பதைக் கண்டறிந்து, அதன்படி சிகிச்சை பெற்றால் பலன் கிடைக்கும். அதிகமாக முடி கொட்டுபவர்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறுவது நல்லது. ஏனெனில் நமது உடலில் சுரந்து கொண்டிருக்கும் ஹார்மோன்கள் சில சமயங்களில் சுரக்காது நின்றுபோனாலும் முடி கொட்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

புரதம் நிறைந்த பருப்பு, கீரை வகைகள், கேரட், பீட்ரூட், கறிவேப்பிலை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், எலும்பு சூப் போன்ற சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்ய முடியும் எனவும் அவர்கள் கூறுகிறார்கள். மேலும், அடிக்கடி சீயக்காய் போட்டு கூந்தலை கடினமாக தேய்க்கக்கூடாது. மென்மையாகவே கையாள வேண்டும்.

• முடிஉதிர்வதைத் தவிர்க்க அழகு நிலையங்களில் மூலிகைகளால் செய்த ஹெர்பல் ஹேர் பேக், ஸ்பெஷல் ஸ்பா ட்ரீட்மெண்ட், டீப் கன்டிஷனர், சீரம் ட்ரீட்மெண்ட், வாசலின் ட்ரீட்மெண்ட் ஆகிய முறைகள் கையாளப்படுகிறது.

• வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.

* இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.

* தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.

Friday 3 January 2014

மாதுளம்பூவின் பயன்கள்...?

 

 மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும்.


மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும்.


மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

தினமும் காலை உணவு பிரெட் சாப்பிட்டா ஆபத்து!




இது ஃபாஸ்ட் ஃபுட் உலகம். கிடைத்ததை அள்ளிப் போட்டுக் கொண்டு, அவசரம் அவசரமாக வேலைக்க ஓடுபவர்கள் அதிகம். பெண்களுக்கு இன்னும் கூடுதல் அவசரம். பெற்றோரைவிட மாணவர்கள் பரபரப்பாக ஓடும் நிலை. இப்படிப்பட்டவர்கள் காலையில் தேர்ந்தெடுக்கும் உணவு பிரெட், பிரெட் ஆம்லெட், பிரெட் உப்புமா இதுபோன்ற ஐட்டங்களைத்தான் எளிதில் கிடைக்கக்கூடியது. கையைக் கடிக்காத செலவு. சாப்பிட்டதும் பசி ஆறிப் போகும். சமைக்கும் நேரம் மிச்சம். குழந்தைகளுக்குத் தொந்தரவு தராத உணவு. இதெல்லாம் தான் பிரெட்டை காலை உணவாக தேர்ந்தெடுக்க காரணம்.ஆனால், வாரத்திற்கு ஒருநாள் இரண்டு நாள் சாப்பிட்டால் சரி. தினந்தோறும் காலையிலோ, மாலையிலோ, அல்லது எப்போது பசிக்கிறதோ அப்போதெல்லாம் சிலர் பிரெட் ஜாம், பிரெட் ஆம்லெட், பிரெட் மசாலா என்று செய்து சாப்பிடுவதால் பெரிய ஆபத்தும் இருக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை.


உடலில் உப்பின் அளவு அதிகரித்தால் பி.பி. உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வரும் என்பது எல்லோரக்கும் தெரிந்த விஷயம். வேறு எந்த தொந்தரவுக்காகவும், நீங்கள் டாக்டரிடம் போனால் முதலில் உப்பின் அளவைக் குறைக்கச் சொல்லித்தான் டாக்டர்கள் அறிவுரை வழங்குகிறார்கள்.


தினசரி 0.5 மில்லி கிராம் அளவக்குத்தான் உடலில் உப்பு சேர்க்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் நாம் சாப்பிடும் சிலைஸ் பிரெட்டில் 230 மில்லி கிராம் உப்பு உள்ளது. இவ்வளவு உப்புள்ள பிரெட்டை அடிக்கடி சாப்பிடும்போதுதான் உடலில் உப்பின் அளவு கூடுகிறது என்கிறார்கள். அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மைய நிபுணர்கள்.


இந்த மையம் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் குறித்து விரிவான கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. அதில் பரிசோதனை செய்தவர்களில் 10 பேரில் 9 பேருக்கு உப்பின் அளவு மிக திகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு முழு முக்கியக் காரணம் தினமும் சிற்றுண்டியாக பிரெட், பிரெட் ஆம்லெட் போன்றவற்றை அவர்கள் உண்டு வந்திருக்கிறார்கள்.


“பிரெட்டைத் தொடர்ந்து சாப்பிட்டால் உப்பின் அளவு அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை ஏற்படும். எனவே இதை தொடர்ந்து சாப்பிடக் கூடாது’ என்று அறிவுறுத்தியுள்ளனர்.


ஏன் பிரெட் கூடாது?



எப்போதாவது சாப்பிடுவதால் பிரெட்டால் தீமை இல்லை. மாறாக நன்மைதான். குழந்தைகளுக்கு பிரெட் ஆம்லெட் என்பது நல்ல ஊட்டச்சத்துதான். ஆனால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதற்காகவும், பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் எப்படியோ எதையாவது சாப்பிட்டுக் கொண்டு போனால் போதும் என்றோ நினைத்து பிரெட் ஐட்டங்களை அடிக்கடி கொடுப்பதுதான் ஆபத்து.


குழந்தைகள் முதலே பிரெட் வகைகளாக சாப்பிட, அதில் உள்ள உப்பானது கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும். அது அப்படியே துளித்துளியாக சேர்ந்து பெரியவர்கள் ஆனதும், ரத்த அழுத்த நோய்க்கு இட்டுச் செல்லும்.


“எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால் என்கு பி.பி என்கிறார் டாக்டர்’ என்று சொல்வதெல்லாம் இந்த ரகம்தான். ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு வருகிறது. அதற்கு காரணமும் இதுதான்.


தீர்வு என்ன?



1. பிரெட் வகைகளை உண்ணக் கூடாது என்று சொல்லவில்லை. தினந்தோறும் அல்லது அடிக்கடி சாப்பாடாக இதையே எடுத்துக் கொள்ளக் கூடாது.


2. வெறும் பிரெட் ஜாம், பிரெட் மசாலா என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. பிரெட் சாப்பிட்டவுடன் கூடவே இரண்டு துண்டு பழங்கள் சாப்பிட பழக்க வேண்டும்.


3. பிரெட் சுவையாக இருக்க முழு முதற்காரணம் அதில் உள்ள உப்பு சுவைதான். அதனால் சுவை கொஞ்சம் குறைவாக இருந்தாலும் உப்பு அதிகம் கலக்காத பிரெட் கேட்டு வாங்கி உண்ணலாம்.


4. பிரெட் ஆம்லெட் நல்ல ஆரோக்கியம்தான். ஆனால் தினந்தோறும் சாப்பிட்டால், பிரெட்டில் உள்ள உப்பும், ஆம்லெட்டில் உள்ள மஞ்சள் கருவும் சேர்ந்து கூடுதல் கொழுப்பை உருவாக்கும். ரத்தக்குழாய்கள் அடைபட இதைவிட காரணம் தேவையில்லை. வாரம் ஒருநாள் ஒரு பிரெட் ஆம்லெட் நல்லது.


5. பிரெட் உப்புமா செய்யும்போது, மேலும் கொஞ்சம் உப்பைச் சேர்ப்பது வழக்கம். அது எவ்வளவு கெடுதல் என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.


6. நாகரிக மோகத்தில் சிலர் பிரெட், சிப்ஸ், பீசா என்று அடிக்கடி சாப்பிடுவது கவனத்திற்கு உரியது. ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் தேவையான உப்பை உடல் எடுத்துக் கொண்டதுபோக, மீதமுள்ளவற்றில் ஒரு சிறிதாவது உடலில், ரத்தத்தில் கலக்க வாய்ப்பு உண்டு. அப்படி சேமித்து சேமித்து வைப்பதால்தான் பிற்காலத்தில் அது நோயாக உருவெடுக்கிறது.


7. அவசர காலம் என்றாலும், வேக வைத்த உணவுகள், காய்கறிகள் போன்வற்றை கொஞ்சம் சுவையாக தயாரித்து உண்ணப் பழகுங்கள்.

Wednesday 1 January 2014

ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?




ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.

அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.

ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

 உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.


அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன.

 ஓட்ஸ் உணவின் மூலம் உடல் எடை குறைகிறது என்று இங்குள்ள நிறைய விளக்கங்கள் மற்றும் உதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த ஒரு உணவு மட்டும் போதும் என்று கூற முடியாது. உடல் எடையை குறைக்கும் பத்தியத்தில் ஓட்ஸ் என்பது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது .

ஓட்ஸில் வைட்டமின்கள், நார்ச்சத்து, கனிமச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமில்லாமல் இருதய நோயை தடுப்பதற்கும் ஓட்ஸ் பயன்படுகிறது.

சில விளக்கங்கள் மற்றும் உண்மைகள் மூலம் ஓட்ஸ் பத்தியம் என்பது உடல் எடையை குறைக்க சிறந்த வழி என்று நிரூபிக்கபட்டுள்ளதை கீழே காண்போம்:

அதிக அளவு நார்ச்சத்து உள்ள தானியங்கள்


ஓட்ஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக அளவிலான இந்த நார்ச்சத்தானது, கொழுப்புச்சத்து மற்றும் ரத்தத்திலுள்ள சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இது போக வயிறு நிறைந்த உணர்வை உண்டாக்கும் ஓட்ஸ். இதன் மூலம் பசி உணர்ச்சி தவிர்க்கப்படுகிறது.

எடையை குறைக்க வேண்டுமென்றால் பசியை கட்டுப்படுத்தி, சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும். அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்பது இதயத்துக்கும் நல்லது.

அதிக ஆற்றலை தரும் தானியம்


ஓட்ஸ் அதிக ஆற்றலை அளித்து வேலை செய்யும் திறனை உடலுக்கு அளிக்கிறது. ஓட்ஸ் கஞ்சியை காலையில் எடுத்துக் கொண்டால், அந்த முழு நாளைக்கு தேவையான சக்தியையும் திறனையும் அது அளிக்கிறது. இதனால் பலர் ஓட்ஸை காலை உணவாக உட்கொள்கின்றனர்.

ஓட்ஸினால் கிடைக்கும் அதிக அளவிலான ஆற்றல், உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப் படுகிறது. மேலும் ஓட்ஸ் உடலின் எடையை குறைத்து உடலுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. இதற்காகவே ஓட்ஸால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்து கொள்வது சிறந்தது.

அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்துக்கள்


ஓட்ஸில் அதிக அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி, உடலை புனரமைக்க உதவுகிறது. அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்குகிறது.

 இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை வெளித் தள்ளுவதால், உடல் எடை குறைவதுடன் உடல் சுத்தமும் ஆகிறது. ஆண்டி ஆக்சிடன்ட்கள் உடல் உறுப்புகளின் இயக்கத்திலும், அவற்றை சரி செய்வதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

குறைந்த கலோரி உள்ள தானியம்

ஓட்ஸானது மற்ற தானியங்களை விட குறைந்த அளவிலான கலோரிகளையே உடையது. இதன் காரணமாகவே உடல் எடை குறைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகிறது. பொதுவாக குறைந்த கலோரி உணவுகள் அதிக அளவிலான கொழுப்புகளை குறைக்க வல்லது.

 ஓட்ஸ் ஒரு அடர்த்தி குறைந்த உணவு. ஆதலால் இது எடையை குறைக்கும் உணவு முறையில் முதலிடம் பெறுகிறது. ஓட்ஸ் மட்டும் தனித்து உடல் எடையை குறைத்து விடாது. மற்ற ஆரோக்கியமான சரிவிகித உணவுகளோடு சேர்ந்தே ஓட்ஸ் எடையை குறைக்கிறது.

தயாரிப்பதற்கு சுலபம்


ஓட்ஸ் என்பது ஒரு ஆரோக்கியமான முழு தானியம். பொதுவாக முழுதானியங்கள் சமைப்பதற்கும், உண்ணுவதற்கும் எளிதானவை. பொதுவாக ஓட்ஸ் கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. பால் மற்றும் பழங்களோடு சேர்த்து இது உண்ணப்படுகிறது.

இந்த காலத்தில் ஓட்ஸை கொண்டு பல துரித உடனடி உணவுகள் தயார் செய்யப்படுகிறது. காலை உணவாக அவைகள் எடுத்து கொள்ளப்படுகின்றன. துரித உணவுகள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுகளில் கூட ஓட்ஸ் தனது சத்துகளை இழப்பதில்லை. இந்த அனைத்து உண்மைகள் மூலம் ஓட்ஸ் எடை குறைய சிறந்த உணவு என்பதை அறியலாம்.

கசப்பு அமுதம் பாகற்காய்...!!


 பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி விடுகிறார்கள். ஆனால் கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அல்லது. மாறாக அமுதத்துக்கு சமமானது. நம்முடைய உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக் கொண்டு எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும். பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு, தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு சுவையாக இருக்கும்.


இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக்கும். இதனுடன் சிறிது புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. பாகற் காயை அவ்வப்போது சேர்த்துக் கொண்டால் ஜூரம், இருமல், இரைப்பை, மூலம், வயிற்றுப்புழு ஆகியவை அகலும். நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.


பாகற்காய் எளிதில் ஜPரணமாகாது என்றாலும் ஜடாராக் கினியை ஊக்குவிக்கும். கபம், பித்தம், ரத்த தோஷம், பாண்டு, குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்குவது இதன் இயல்பாகும்.


பாகற்காய் சிறந்த உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. பாகற்காய் இலையின் சாறினை ஒரு அவுன்சு சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும். இலையை அரைத்து உடம்பு முழுவதும் தடவி 1 மணி நேரம் ஊறியபின் குளிக்க வேண்டும். இது போன்று 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாய்க் கடியின் விஷம் உடம்பில் ஏறாது.


பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை சிறிது உரைத்து சிரங்கின் மேல் நல்ல தடிப்பாக தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்று சிரங்கு உதிர்ந்து விடும். பாகற் காய் வேரை சந்தனம் போல அரைத்து நல்லெண்ணெய் - யில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும் புறமும் தடவி வந்தால் பெண்களுக்கு கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்குப் பின்வரும் மண்குத்தி நோய்க்கு இது கண்கண்ட மருந்து.


கொடி பாகல் இலையுடன் 500 மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் மாலைக்கண் அகலும். 2 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே சிறிது வெல்லத்தைக் கரைத்து சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்பூச்சிகள் வெளியேறும். பாகல் சாற்றில் சிறிது குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த வயிறு சிறுத்து விடும். பாகல் இலைச் சாற்றை குடிப்பதால் பாம்பு விஷம் நீங்கும். பாகல் இலையை உலர்த்தி பீடி போல சுற்றிக் கொண்டு அதன் புகையை உறிஞ்சினால் பல் நோய்கள் பறந்தோடி விடும்.


பாகல் இலைச் சாற்றை 1 அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில் 1_2 அவுன்ஸ் நல்லெண்ணெய் கலந்து உட் கொண்டால் காலரா உடனே நீங்கும். 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவுக்கு பெருங்காயப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நிரந்தரமாக குணம் ஆகும்.


அதுபோல 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் அதே அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்த முடியும்.

Tuesday 31 December 2013

தூக்கமும் நீங்களும்...




உலகில் சரிபாதிப் பேர், நிம்மதியான உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இருட்டு- வெளிச்சம், இன்பம்- துன்பம், கஷ்டம்- நஷ்டம், நன்மை- தீமை, சந்தர்ப்பம்- சூழ்நிலை இவற்றோடு சம்பந்தப்பட்டது, தூக்கம். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தூக்கத்தை வரவழைக்க முடியாது.


அதேமாதிரி நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் வருகிற தூக்கத்தை நிறுத்தவும் முடியாது. தூக்கமின்மை, அதாவது போதிய நேரம் தூங்காததை மருத்துவ மொழியில் ‘இன்சோம்னியா’ என்று சொல்கிறார்கள். தூங்கப்போவதற்கு முன்பு தீவிரமான யோசனை, மூளையைக் கசக்கி சிந்திப்பது என்று சொல்வார்களே,


அந்த மாதிரி எண்ணங்கள் உருவாவது, உடலை அதிகமாக வருத்திக்கொள்வது, உடலுக்கு அதிகமாக வேலை கொடுப்பது, தூங்கும் இடம் ஒரு நல்ல சூழ்நிலையில் அமைந்திராமல் இருப்பது, தூங்கும் நேரம் ஒத்துப் போகாமல் இருப்பது, நாள்பட்ட உடல் நோய்கள், தாங்க முடியாத வலி, மன அழுத்தம்,


மன உளைச்சல் இவை அனைத்துமே தூக்கத்தைப் பாதிக்கும். தூக்கத்தை வரவழைக்க பலரும் பலவித முறைகளைக் கையாளுகிறார்கள். சிலர் யோகா செய்கிறார்கள். சிலர் தியானம் பண்ணுகிறார்கள். சிலர் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள்.


சிலர் மது அருந்துகிறார்கள். இப்படி பலவிதமான முறைகளைக் கையாண்டு தூக்கத்தை வரவழைக்கிறார்கள். தூக்கமின்மைக்கும் மதுவுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள்.


தூக்கம் வர வேண்டும் என்பதற்காகவே மதுபானம் அருந்த ஆரம்பித்தவர்கள் நிறைய பேர். ஆரம்பத்தில் மதுபானம் நல்ல தூக்கத்தைத் தருவதைப் போலத் தோன்றினாலும், நாளடைவில் அது தூக்கத்தைக் குலைக்கும். முன்னிரவில் தூக்கத்தை கொடுத்து பின்னிரவில் தூக்கத்தைக் கெடுத்துவிடும் தன்மையுடையது மது பானம்.


மேலும் கண்கள் சுற்றிக்கொண்டே தூங்கும் தூக்கத்தையும் (ஆர்.இ.எம். தூக்கம்) மது குறைத்து விடும். வயதானவர்களுக்கு ஒரு சிறிய சத்தம் கூட தூக்கத்தை கெடுத்துவிடும். அதற்குப் பிறகு தூக்கத்தை வரவழைக்க அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.


மறுபடியும் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகும். மனிதனுடைய பழக்கவழக்கங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் தூக்கத்தைப் பற்றிய பலவிதமான விஷயங்கள் நமக்குத் தெரியவருகின்றன. செயற்கை வெளிச்சங்கள் அதிகமில்லாத பழைய காலத்தில், சூரியன் மறைந்த கொஞ்ச நேரத்திலேயே தூங்கப் போய்விடுவார்கள்.


ஆனால் இரவில் நிறைய தடவை விழிப்பார்கள். மறுபடியும் தூங்குவார்கள். முன்னிரவில் ஆழ்ந்த தூக்கமும், பின்னிரவில் லேசான தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். பின் னிரவில் கண்கள் சுற்றும் (ரேபிட் ஐ மூவ்மெண்ட்) தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். தூங்குகிற நேரத்தில் உடம்பும், மூளையும் வேலை பார்ப்பதில்லை, இரண்டும் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம்.


இது சரியல்ல. நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், விளையாடிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும் நமது மூளை ‘பிசி’யாக வேலை பார்த்துக் கொண்டு தான் இருக்கும். நமக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும் நேரத்தில், மூளையும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்.


ஆனால் ஓரளவுதான் மூளை ஓய்வு எடுத்துக் கொள்கிறது. நாம் தூங்கும்போது மூளை அதுபாட்டுக்குச் செயல்பாட்டில் இருக்கிறது. அன்றைய பொழுதுக்கும், அடுத்தடுத்த நாட்களுக்கும் உங்களை தெம்பாக வைக்க, உங்களை தேக ஆரோக்கியத்தோடு உற்சாகமாக வைக்க, உடலுக்குள் என்னென்ன ரசாயன மாற்றங்கள் பண்ண வேண்டுமோ அதையெல்லாம் பண்ணி, உடம்பை மூளை தயாராக வைத்திருக்கிறது.

தொலைபேசி கட்டணங்கள் நாளை முதல் அதிகரிப்பு ...?




தொலைபேசி கட்டணங்கள் நாளை புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளன.தொலைத்தொடர்பு வரியினை 20 – 25 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்திருந்தார்.

இதற்கமையவே தொலைபேசி கட்டணங்கள் நாளை புதன்கிழமை முதல் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்.....??




பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம்
.

பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் செந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.


தரைப் பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ் சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.


இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.


ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது.


இந்தக் கீரையில் வைட்டமின் A B C சத்துகள் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, இரும்புச் சத்து அடங்கியது. இது தாதுவைக் கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும். உடல் வறட்சியை அகற்றும். உள் சூட்டைப் போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன. பச்சையம் கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.


பசலைக் கீரை ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.


இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறைத் தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.


ஒரு கப் பசலைக் கீரையில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லி கிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.


இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும். இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும். பசலைக் கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்!

Sunday 29 December 2013

பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?




பற்களில் காரை படிந்துள்ளதா....? இனி கவலை எதற்கு....?

என்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் காரை (decay) கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான்..

நீண்ட நாட்களாக இருக்கும் காரைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள்(pottasium permanganate.) (KMNO4) பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch)போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும்.. (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது.. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்..

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த காரைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

வருடத்திற்கொருமுறை அனைவரும் இதனை செய்து கொள்வது நல்லது.. பிறகென்ன பல் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.. முயற்சித்துப் பாருங்களேன்.

பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம் - எச்சரிக்கை!!!






பெண்களை தாக்கும் கர்ப்பப்பை இறக்கம்

 இப்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது. கர்ப்பப்பை இறக்கம் ஏற்பட என்ன காரணங்கள், அதன் அறிகுறிகள், தீர்வுகள், தடுப்பு முறைகள் பற்றி பார்க்கலாம்...

சுகப்பிரசவத்தில் குழந்தை பெறுகிற பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. பிரசவத்தின் போது தசைகள் தளர்ந்து போயிருக்கும். போதுமான அளவு ஓய்வெடுக்காமல், வேலை செய்வது, எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குவது போன்றவற்றால் இடுப்பெலும்புத் தசைப் பகுதிகள் பலமிழக்கும்.

பெரும்பாலும் மெனோபாஸ் வயதில்தான் இது தன் வேலையைக் காட்டத் தொடங்கும். அந்தரங்க உறுப்பின் வழியே சதைப்பகுதி வெளியே வருகிற உணர்வு இருக்கும். அடிக்கடி முதுகு வலியும் இருக்கும். கர்ப்பப்பை இறக்கத்தில் 3 3 நிலைகள் உள்ளன.

முதல் மற்றும் இரண்டாவது நிலைகளில், இறங்கிய கர்ப்பப்பை பகுதியை லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் இழுத்து வைத்து, டேப் மாதிரியான ஒன்றைப் பொருத்தி சரி செய்து விடலாம். அது அதே நிலையிலேயே அடுத்த சில வருடங்களுக்கு இருக்கும். 3வது நிலை இறக்கம் சற்றே சிக்கலானது. 


 
இந்நிலையில் கர்ப்பப்பையானது வெளியே தொங்க ஆரம்பித்து விடும். சிறுநீர்பையும் மலப்பையும் சேர்ந்து அழுத்தப்பட்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கிற உணர்வு, சிறுநீர் கழித்த பிறகும் மிச்சமிருக்கிற உணர்வு, தேங்கிப் போகிற சிறுநீரின் மூலம் இன்ஃபெக்ஷன் உண்டாகி, சிறுநீரகங்களே பழுதடைவது போன்றவையும், மலச்சிக்கலும், மலம் கழித்த பிறகும் அதிருப்தியான உணர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும். 



இது தவிர சிலருக்கு பிறவியிலேயே திசுக்கள் பலவீனமாக இருந்து, குழந்தை பிறப்பதற்கு முன்பே கர்ப்பப்பை இறக்கம் ஏற்படலாம். இது பரம்பரையாகத் தொடர்ந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

 

ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகுவது, முதல் நிலை பாதிப்பாக இருப்பின், ‘ஸ்லிங்’ எனப்படுகிற அறுவைசிகிச்சையின் மூலம் தீர்வு காண்பது, எடை தூக்குவது, கடினமான வேலைகளைச் செய்வது போன்றவற்றைத் தவிர்ப்பது…

 

இவையெல்லாம் பிரச்சனை தீவிரமாகாமல் தடுக்கும் வழிகள்

‘கற்பக விருட்சம்’ என்றே சொல்லப்படும் வேப்பமர மருத்துவ மகிமைகள்!

 

 வீட்டு வாசலில் வேம்பு – நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!வேம்பின் தாவரவியல் பெயர் ‘அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.

வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ‘அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.


வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் ‘கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.

இலை:

வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.

வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.

வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.

பூ:
வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
காய்: மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.

விதை:


 புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.

வேப்ப எண்ணெய்:

வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
பட்டை: வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.

பிசின்:

உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.

புண்ணாக்கு:

 வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.

வேம்பின் மருத்துவ பயன்கள் இன்றியமையாதது. பல நோய்களுக்கு அருமருந்தாக விளங்கும் வேம்பின் குணநலன்களை அறிந்துகொள்வோமா?

* வேப்ப எண்ணையுடன் தூய தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணையை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்தால், பூச்சிகள் மற்றும் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். மேலும், இந்த கலவை தோல் எரிச்சல், சிறு வெட்டுக்காயங்கள், தீக்காயங்கள் ஆகியவற்றையும் குணப்படுத்துகிறது.

* வேப்ப இலைகளால் தயாரிக்கப்பட்ட தேனீரைப் பருகும்போது, தோலுக்கு பாதுகாப்பும், உறுதியும் கிடைக்கும்.

* வேப்ப எண்ணையுடன், தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் ஆயிலை கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளிக்கவும். தொடர்ந்து 3 வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்கி, ஆரோக்கியமான பளபளப்பான தலைமுடியை பெறலாம்.

* 300 மில்லி நீருடன் 2 முதல் 3 வேப்ப இலைகளை சேர்த்து, கொதிக்க வைத்து ஆறவிடவும். இந்த வேப்ப இலை கஷாயத்துடன், சிறிதளவு தேன் கலந்து பருகி வர, தொண்டைப் புண் குணமாகும்.

* வேப்ப இலையை உலரவைத்து பொடியாக்கி, சிறிதளவு நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

* வேப்ப எண்ணையை, காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.

* கொசு உற்பத்தியாகும் இடங்களில் வேப்ப விதை மற்றும் வேப்ப எண்ணையை தெளித்து வர, கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

* 250 மில்லி அளவுள்ளநீரில், 40 முதல் 50 வேப்ப இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு ஆறவைத்து வடிகட்டி குடிக்க, உடலில் உள்ள தசைகள் மற்றும் திசுக்கள் பலம்பெறுகின்றன.

* 2 அல்லது 3 வேப்ப இலைகளை தினமும் மென்று வர, ரத்தம் சுத்திகரிக்கப்படுவதுடன், அஜீரணக்கோளாறும் சரியாகும்.

* வலி நிவாரணியாகவும், உடல் சூட்டை தணிக்கும் சிறந்த மருந்தாகவும் இது பயன்படுகிறது.

Saturday 28 December 2013

சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை





சித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை


 காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.


எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது.
மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய்,


முத்துப்போல நின்றால் உங்களுக்கு கபநோய்,


எண்ணெய்த்துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.


எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.


எண்ணெய்த்துளி சிதறினாலோ அமிழ்ந்துவிட்டாலோ நோயை குணப்படுத்த இயலாது.

Thursday 26 December 2013

அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா?




ஆரோக்கியமாக உள்ளவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் உடலில் இருந்து கழிவுகள் முழுமையாக வெளியேறாது. இதனால் சிறுநீர் வெளியேறும்போது எரிச்சல் ஏற்படும். ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு தினமும் இரண்டு லிட்டர் வரை சிறுநீர் வெளியேறினால் இயல்பு நிலை. இதயநோய், சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி குடிநீரின் அளவை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். ஏனெனில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற இதயம் அதிகமாக ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டியிருக்கும்.

ஒருநாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடித்தால் போதுமானது. அதேபோல் சிறுநீர் அடிக்கடி வெளியேறக்கூடாது.

ஆரோக்கியமாக உள்ளவர்கள் 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை தான் சிறுநீர் கழிக்க வேண்டும். இதற்கு குறைந்த நேரத்தில் சிறுநீர் கழித்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.
சிறுநீரகத்தில் பிரச்சினை, மது குடித்தல், புகைப்பழக்கம், சிறுநீர் தொற்று, முதுமை என அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.

முதுமையில் புராஸ்டேட்(விந்து) சுரப்பி வீக்கம் காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் வெளியேறும். ஆனால் குளுகுளு அறையில் இருப்பது, பரபரப்பாக செயல்படுவது, பதட்டத்தில் இருக்கும் நேரங்களில் சிறுநீர் கழிக்கும் உணர்வு அடிக்கடி ஏற்பட்டால் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை!

புத்துணர்ச்சி தரும் உலர் திராட்சை!



திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது. அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய திராட்சை உலர் திராட்சை தான். இந்த பழங்கள் உலர வைத்து எடுப்பதால் உலர் திராட்சை பழம் என்கிறோம். உலர் திராட்சையில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. மேலும் சுக்ரோஸ், பரக்டோஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம் இரும்புச்சத்து பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துகளும் இதில் உள்ளது.

வளரும் குழந்தைகளுக்கு உலர் திராட்சை சிறந்ததாகும். இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதிபெறவும் பற்கள் வலுபெறவும் உடல் வளர்ச்சி பெறவும் இது உதவுகிறது. குழந்தைகளுக்கு தேகபுஷ்டி வேண்டுமென்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு பாலில் போட்டு காய்ச்சி அருந்தச்செய்யுங்கள். இவ்வாறு பருகுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடும் முதியோர்களுக்கு சிறந்தது. உல் திராட்சை தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கிளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இந்த பலத்தை வாயில் போட்டு சாப்பிடும் போது எலும்பு மஞ்ஜைகள் வலுபெறும். மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினமும் காலை, மாலை வேளையில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

தொண்டை கட்டு ஏற்பட்டவர்கள் பால் காய்ச்சும் போது மிளகுதூள், உல் திராட்சையை போட்டு பருகலாம். நாவறட்சிக்கு சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையுடன் மிளகு சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நாவறட்சி எளிதில் குணமாகும். உடல் வலியால் அவதிபடுபவர்கள் சுக்கு, பெருஞ்சீரகம், உலர்திராட்சையை யும் சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி பருகினால் உடல் வலி தீரும்.

பித்தத்திற்கும் இது சிறந்த மருந்து. கர்ப்பிணிபெண்களும் பாலில் உலர் திராட்சை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். இந்தப்பழத்தை பாலில் போட்டும் வெறுமனையாக சாப்பிட்டும் வந்தால் இதய துடிப்பு சீராக செயல்படும். தினமும் ஒரு பத்து உலர் திராட்சை பழத்தை தொடர்ந்து ஒரு மூன்று மாதம் சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே பல மாற்றங்கள் தெரியும்.

கர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!




கர்ப்பமாக இருக்கும் போது மருத்துவர்கள் எந்த ஒரு உணவிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஏனெனில் ஒருசில உணவுகளில் வயிற்றில் வளரும் சிசுவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே தான். பொதுவாக அனைவருக்கும் ஒருசில பழங்களை சாப்பிட்டால் தான் கருச்சிதைவு ஏற்படும் என்று தெரியும்.

ஆனால் பழங்கள் மட்டுமின்றி, ஒருசில காய்கறிகளின் மூலமும் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக முதல் மூன்று மாதத்தில் கர்ப்பிணிகள் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் இந்த காலத்தில் தான் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே இக்காலத்தில் உணவுகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அது உடனே வேலையை காண்பித்துவிடும். அதற்காக அதனை முற்றிலும் தவிர்க்கக்கூடாது. ஆனால் மிகவும் குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும்.

இதற்கு காரணம் அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின்கள் தான். ஏனென்றால் வைட்டமின்கள் அதிகமாக இருந்தால், இரத்தக்கசிவு ஏற்படுவதோடு, கடுமையான வலியையும் உண்டாக்கும். எனவே கீழ்கூறிய சில காய்கறிகளை பிரசவத்திற்கு முன் தவிர்ப்பது நல்லது.

• கத்திரிக்காயில் இரும்புச்சத்து அதிகம் இருந்தாலும், இதனை கர்ப்பிணிகள் அதிகம் உட்கொண்டால், இது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இதனை கர்ப்பிணிகள் தவிர்ப்பது மிகவும் நல்லது.

• கர்ப்பிணிகளுக்கு ஒரு ஆபத்தான ஒரு கீரை என்றால் அது வெந்தயக்கீரை தான். ஏனெனில் வெந்தயக் கீரையை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சிசுவின் மூளை வளர்ச்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இந்த கீரையை கர்ப்பிணிகள் இறுதி மூன்று மாதங்களில் தொடவேக் கூடாது.

பசலைக் கீரையை அதிகம் உட்கொண்டாலும், கருச்சிதைவு ஏற்படும். அதிலும் இந்த கீரையை தினமும் உட்கொண்டு வந்தால், விரைவில் கருச்சிதைவு ஏற்படும். எனவே இந்த கீரையை மாதத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் போதும்.

• கசப்பு தன்மையுடைய ப்ராக்கோலியை தினமும் கர்ப்பமாக இருக்கும் போது உட்கொண்டால், அது கருச்சிதைவை ஏற்படுத்திவிடும். குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் இதனை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இதில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே தினமும் உட்கொண்டால் கருச்சிதைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

• கர்ப்பமாக இருக்கும் போது காலிஃப்ளவர் சாப்பிட்டால் நல்லது என்று சொன்னாலும், இதனை கோபி மஞ்சூரியன் போன்று செய்து சாப்பிட்டால், பின் கர்ப்பமானது பிரச்சனையாகிவிடும். ஏனெனில் இதிலும் வைட்டமின் சி எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.

• குடமிளகாயின் சுவை அனைவரையும் ஈர்க்கும். ஆனால் இதனை சாப்பிட்டால், கர்ப்பத்தில் பிரச்சனை ஏற்படும். ஆகவே பிரசவம் முடியும் வரை இதனை சாப்பிடுவதை சற்று தவிர்க்கலாமே!

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க இயற்க்கை மருத்துவம்:-




குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.

சிறு குழந்தைகள் இனிபபு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள்
 உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக்
 கொடுத்து மறுதினம் பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள்
 வெளியேறும்.

கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக்
 கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள்
 வெளியேறும்.

கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும்
 வயிற்றில் சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல்
 பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின்
 வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.

வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய்
 அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில்
 சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்

தொப்பையைக் குறைக்க சில முக்கிய குறிப்புகள் !!!




பிரச்னைகள் எப்போதும் தனித்து வருவது இல்லை’ என்பார்கள். உடல் பருமன் பிரச்னை வந்தாலே, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், முதுகு வலி, குழந்தைப்பேறு இன்மை, மூட்டு வலி, உளவியல் சிக்கல் மற்றும் மன அழுத்தம், மாரடைப்பு என அடுத்தடுத்து இதரப் பிரச்னைகளும் போனஸாக வரிசை கட்டும்.

உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவது கிடையாது.

ஆனால், உடல் எடைக் குறைப்பு மட்டும் சில நாட்களில் நிகழ்ந்துவிட வேண்டும் என்று நாம் பேராசைப்படுகிறோம். ஒரே வாரத்தில் உடலை இளைக்கவைக்கும் பயிற்சி ஏதாவது இருக்கிறதா? என விளம்பரங்களைத் தேடி அலைகிறோம். உடல்பருமனில் இருந்து அபரிமிதமான உடற்பருமனுக்கு செல்லும்போது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். இந்தியர்களின் சராசரி பாஸல் மெட்டபாலிக் ரேட் (பி.எம்.ஆர்.) என்பது 1800 கலோரி. ஆனால், சராசரியாக இந்தியர்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் 3000 கலோரி உள்ளது. நம் உடல்வாகையும், உணவுப் பழக்கத்தையும் முறையாக ஆராய்ந்து, படிப்படியான மாற்றங்களை நமக்குள் நிகழ்த்தினால், நிச்சயம் உடல் பருமன் பிரச்னையை சரி செய்துவிட முடியும். இதோ, உங்களை நீங்களே அலசுவதற்கான அற்புத வழிகள்…

உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைப் பொறுத்து மட்டுமே நோய் அபாயம் அதிகரிப்பது கிடையாது. எங்கே, எவ்வளவு இருக்கிறது என்பதைப் பொறுத்து அது மாறும். ஈஸியாகப் புரிந்து கொள்வதற்காக, கொழுப்பு சேரும் இடத்தை ஆப்பிள் மாடல், பேரிக்காய் மாடல் என்று இரண்டு விதமாக வகைப்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பை ஆப்பிள் மாடல் என்றும், இடுப்பு மற்றும் பின்புறத்தில் சேரும் கொழுப்பை பேரிக்காய் மாடல் என்றும் கூறுவார்கள். இரண்டுமே மோசம்தான். பேரிக்காய் வடிவத்தினரைவிட ஆப்பிள் வடிவத்தினர்தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அவர்களைவிட இவர்களுக்கு அதிகம்!

இடுப்பை அளவிடுங்கள்… அபாயத்தைக் கணக்கிடுங்கள்…


நீங்கள் (ஆப்பிள்) ஆணாக இருந்தால் இடுப்பின் அளவு 94 செ.மீ-க்கு (37 இன்ச்) அதிகமாகவும், பெண்ணாக இருந்தால் 80 செ.மீ-க்கு (32 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். (பேரிக்காய்) ஆண்கள் 102 செ.மீ-க்கு (40 இன்ச்) அதிகமாகவும், பெண்கள் 88 செ.மீ-க்கு (35 இன்ச்) அதிகமாகவும் இருந்தால் கூடுதல் எச்சரிக்கை தேவை. இடுப்பு அளவைக் குறைக்கும் முயற்சியில் உடனடியாக ஈடுபட வேண்டியது அவசியம்!

திட்டமிட்ட ஆரோக்கிய உணவு

 ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்தைக் கொடுப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதனால் இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். ஆரோக்கியமான உணவுத் திட்டமிடல் என்பதில், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச் சத்து உள்ள உணவின் அளவைக் குறைத்து, அதிகக் காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளுதல், கொழுப்பு நீக்கப்பட்ட அல்லது குறைந்த அளவு கொழுப்பு உள்ள பால் எடுத்துக்கொள்ளுதல், இறைச்சி, மீன், முட்டை, பாதாம், முந்திரி ஆகியவற்றைக் குறைவாக எடுத்துக்கொள்ளுதல் போன்றவை அடங்கும். உணவில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ளவேண்டும். இப்படி சமச்சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே, உடல் எடை கட்டுப்படத் தொடங்கிவிடும்.

உடல் எடையைக் குறைக்க அதிக கலோரிகள் உள்ள உணவு மற்றும் பானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிடும் உணவில் இருந்து எந்த அளவு சக்தி கிடைக்கிறதோ, அதை உடம்பில் சேர்த்துவைக்காமல் அவ்வப்போது எரித்துவிட வேண்டும். அதாவது, உடல் உழைப்பின் மூலம் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். விளக்கமாகச் சொன்னால்… உண்ணுகிற உணவுக்கு ஏற்ப நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று எது முடிகிறதோ, அதைச் செய்ய வேண்டும்.

உடல்பருமனால் அவதிப்படும் அதே நேரம், நீரிழிவு போன்ற பிரச்னை இல்லை என்றால் அவர்களுக்கு புதிய ஸ்லீவ் கேஸ்ட்ரக்டமி (Sleeve gastrectomy) அறுவைச் சிகிச்சை உள்ளது. இந்த அறுவைச் சிகிச்சையில், பசியைத் தூண்டும் க்ரெலின் (Ghrelin)) என்ற ஹார்மோன் அகற்றப்படும். மேலும், இரைப்பையின் அளவும் குறைக்கப்படும். இதனால் சாப்பிடும் அளவு மட்டுமே குறையும், ஊட்டச்சத்து கிரகிப்பது குறைக்கப்படாது. இந்த அறுவைச் சிகிச்சை முடித்த ஒரே ஆண்டில், உடல் எடை 70 சதவிகிதம் வரை குறைந்துவிடும். அபரிமிதமான உடல்பருமன் உள்ளவர்களுக்கு பை பாஸ் அறுவைச் சிகிச்சை தான் சிறந்தது. இதில் இரைப்பையின் அளவு குறைக்கப்படுவதுடன், ஊட்டச்சத்து கிரகிக்கப்படும் அளவும் குறைக்கப்படுகிறது. இதுதவிர, ரோபோட்டிக் அல்லது எண்டோஸ்கோப்பி மூலமாகவும் உடல்பருமன் அறுவைச் சிகிச்சை செய்யும் முறை இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் அறிமுகமாகியுள்ளது’ என்றார்.

உடல் எடை குறைய டாக்டர்கள், டயட்டீஷியன் அளிக்கும் உற்சாக வழிகள்…

காலை உணவு கண்டிப்பாகத் தேவை. குறைந்தது மூன்று வேளை உணவு அவசியம். ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளைச் சாப்பிடலாம்.

குறைந்தது நாள் ஒன்றுக்கு மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். பசியுடன் இருக்காமல், ஆரோக்கிய உணவை நேரத்துடன், அளவோடு சாப்பிடுவது நல்லது.

உடல் பருமனுக்கு முக்கியக் காரணமான சாதத்தைக் குறைத்து, ஒரு பங்கு சாதம், இரண்டு பங்கு வேகவைத்த காய்கறிகள் என்று அளவாகச் சாப்பிடலாம். இரவில் சாதத்தைத் தவிர்த்து, தோசை, சப்பாத்தி போன்ற டிஃபன் வகைகள் பெட்டர்.

முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பாகற்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.

பழ வகைகளில் மா, பலா, வாழை, சப்போட்டா ஆகிவற்றைத் தவிர்த்து, மிதமான இனிப்பு உள்ள சாத்துக்குடி, கொய்யாப் பழங்களைச் சாப்பிடலாம்.

அசைவப் பிரியர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சியைக் குழம்பு வைத்துச் சாப்பிடலாம். மீனை எண்ணெயில் பொரிக்காமல், குழம்புவைத்து சேர்த்துக்கொள்ளலாம். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சாப்பிடலாம்.

குழந்தைகள் குறைந்தது ஒரு மணி நேரத்துக்காவது விளையாட்டு, உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

பெரியவர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் பிரிஸ்க் வாக்கிங் செய்ய வேண்டும்.

குடும்பமே தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்காமல், எல்லோரும் சேர்ந்து ஈடுபடும் ஏதாவது ஒரு விளையாட்டு அல்லது தோட்ட வேலை போன்ற கூட்டு வேலைகளில் ஈடுபடலாம்.

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதைத் தவிர்க்க முயற்சிக்கலாம். முடியாதவர்கள் பிளாக் டீ அல்லது பிளாக் காபியில் சர்க்கரையின் அளவைக் குறைத்து அருந்தலாம்.

கிழங்கு வகைகளில் மாவுச்சத்து அதிகமாக இருப்பதால், அவற்றை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

லிபோசக்ஷன் என்ற கொழுப்பு உறிதல் சிகிச்சையும் உள்ளது. இது, உடலின் எந்தப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த இடத்தில் செய்யப்படும்.

பொதுவாக, நாவை அடக்குவது என்பது மிகவும் கடினமான செயல். இனிப்பு, கொழுப்பு உணவுகளும் நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதுதான். இவை அனைத்தையும் ஒரேயடியாகத் தவிர்த்தாலும், மனதளவில் தடுமாற்றமும், உற்சாகக் குறைவும் ஏற்படும். ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று உடல் எடையைக் குறைப்பதற்காக, உணவு மற்றும் உடற்பயிற்சியை மிக வேகமாக மாற்றிவிடக் கூடாது. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்தானே… அதே பாணியில் பருமனையும் கரைப்போம்.

உடற் பருமனைக் குறைக்க யோசனைகள்:-




உடற் பருமன் மற்றும் அதிக கொழுப்பு ஆகியவற்றால் உயர் ரத்த அழுத்தம், உடலின் கெட்ட கொழுப்பு அதிகரித்தல், மூட்டு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வர வாய்ப்பிருக்கிறது. எனவே சில வீட்டு மருத்துவத்தை பயன்படுத்தி அதன் பாதிப்புகளிலிருந்து விடுபட கீழ் வரும் டிப்ஸ் பயனுள்ளதாக இருக்கும் :

1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீறில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுததுக் கொண்டு வந்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீரில் எலுமிச்சை சாறு சிறிதளவு தேன் கலந்து குடிதது வரவும்.

காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச் செய்தால் உடல் எடை குறையும்.

தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும். 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றததை காணலாம்.

பிரஷ்ஷான தக்காளியுடன் வெங்காயத்தை சாப்பிட்டு பிறகு எலுமிச்சை சாற்றை குடிக்கவும்.

இஞ்சியை மெலிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதை கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த பிறகு எலுமிச்சை துண்டங்களை சேர்க்கவும். இதனை சூடாகவோ அல்லது ஆறிய பிறகு பாட்டிலில் ஊற்றி வைத்து போகும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம். இது பசியை ஆற்றும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை குறையும்.

அரிசி, உருளைக்கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும். பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

உயர் கலோரி தின்பண்டங்களான ஐஸ் கிரீம், சாக்லேட், இனிப்புகள், வெண்ணெய், நன்றாக சமைக்கப்பட்ட உணவு, ஆகியவைகளை தவிர்க்கவும்.

பச்சையான முட்டை கோஸ் அல்லது சமைக்கப்பட்ட கோஸ் காயில் மாவுச்சத்தை கொழுப்பு சத்தாக மாற்றமடைவதை தடுக்கூடிய சத்துகள் உள்ளது. எனவே முட்டைக் கோஸ் உடல் பருமனை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

குடல் பிரச்சனைகளைத் தீர்க்கும் மணத்தக்காளி கீரை!



அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.

வயிற்றிலும், வாயிலும் தோன்றும் புண்களை உடனடியாக சிகிச்சை செய்து குணப்படுத்திக் கொள்ளாவிட்டால் பல வீபரீதமான விளைவுகள் ஏற்படக்கூடும். மிக மோசமான நிலையை அடைந்து விட்ட குடற்புண்ணைக்கூட தொடர்ந்து மணத்தக்காளிக் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம். குடற்புண், வாய் புண் அதிகமாக இருந்தால் மணத்தக்காளி கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு போல வைத்து சாப்பிடவேண்டும்.

தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல குணம் பெறலாம். உடலில் தோன்றும் கரப்பான் வகை பிணிகளுக்கும் மணத்தக்காளி நல்ல விதத்தில்
 பன்படுகிறது. நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது..

மணத்தக்காளி கீரை குடல் பிரச்சனைகளை சரிபடுத்துவதோடு மட்டுமல்லாமல், அஜீரணம், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், ஆகியவற்றையும் சரிசெய்கிறது. மணத்தக்காளி கீரையின் சாறு காய்ச்சல், காய்ச்சலால் ஏற்படும் கை கால் வலிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மணத்தக்காளியை அழகுக்காக பயன்படுத்துகின்றனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மணத்தக்காளியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயிலிருந்து குணம் பெறலாம்.

வடஇந்தியாவில் மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான வியாதிகளை குணப்படுத்த மணத்தக்காளியின் பழம் மற்றும் கீரைகளை வேகவைத்து அதன் சாற்றை பருகுகின்றனர். தோலில் ஏற்படும் அலர்ஜி வெயிலுக்கு ஏற்படும் கட்டிகள், தோல் அரிப்பு போன்றவற்றை சரிபடுத்த கீரையை சாறாக பிழிந்து அதன்மேல் தேய்க்க வேண்டும். காபி தயாரிக்கும் போது கீரையின் தண்டு, இலை சேர்த்து காபி தயாரித்து குடிக்கலாம். ஏனெனில் காயங்கள், புற்றுநோய் புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது மணத்தக்காளி கீரை...

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top