.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label குழந்தை. Show all posts
Showing posts with label குழந்தை. Show all posts

Sunday 15 December 2013

குழந்தைகளின் இருட்டு பயத்தை போக்கும் சில வழிகள்!



பல குழந்தைகள் இருட்டில் ஏதோ ஒரு உருவம் ஒளிந்து கொண்டு தன்னை விழுங்கப்போவதாக நம்பிக்கை கொண்டிருப்பர். இந்த பயம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது, பெற்றோர்கள் அவர்களின் பயத்தை எப்படி போக்குவது என்பதை இங்கு பார்க்கலாம். பயம் என்பது நம் அனைவரது வாழ்விலும், குறிப்பாக குழந்தைகளிடம் காணப்படும் ஒரு சாதாரண விஷயம். இருட்டைக்கண்டு பயப்படுவது குழந்தைகளின் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. நாம் புதியதாக ஒன்றை முயற்சிக்கும் போது, இதற்கு முன் அனுபவிக்காத ஒன்றை அனுபவிக்கும் போது நமக்கு பயம் ஏற்படுகிறது.


குறிப்பாக குழந்தைகளிடம் இது போன்ற பயம் தினம் தினம் ஏற்படுகிறது. இதற்கான முக்கிய காரணம் பல உள்ளன. தொலைக்காட்சியில் காட்டப்படும் பயப்படும்படியான செய்திகள், அடிக்கடி பேய் கதைகளை பெற்றோர் குழந்தைகளிடம் கூறுவது போன்றவை கூட குழந்தைகளின் பயத்தை அதிகரிக்கும். தேவையில்லாத புத்தகங்கள் கூட குழந்தைகளிடம் பயத்தை உருவாக்குவதில் குற்றமுடையதாகுகிறது. இரவில் இருட்டைக்கண்டு பயப்படும் குழந்தைக்கு பெற்றோர்கள் செய்ய வேண்டிய முதல் காரியம், அவர்களோடு பொறுமையுடன் பேச வேண்டும்.

அவர்கள் கூறுவதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய பயத்தை கேலிக்குரியதாக்காமல், அவர்களை அமைதிப்படுத்தி, அவர்களின் பயத்தை போக்கி, அவர்களை வேறு நல்ல விஷயங்களில் திசை திருப்ப வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மேலும் பயப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் உங்களின் கேலிக்குரிய பேச்சால் குற்றவுணர்வுடன், வெட்கப்பட்டு உங்களிடம் எதையும் கூறாமல் மறைக்க ஆரம்பிப்பர். அதனால் பிரச்சனைகள் பெரிதாகுமே தவிர, தீர்வு ஏற்படாது. அதற்கு பதில் அவர்களுக்கு பாதுகாப்புணர்வை எற்படுத்துங்கள். அதனால் தங்கள் அச்சத்தை எளிதில் கையாளும் பக்குவம் அவர்களுக்கு ஏற்படும். குழந்தைகளின் இருட்டு பயத்தை போக்குவதற்கான சில வழிமுறைகளை கீழே காணலாம்.


1. உங்கள் குழந்தைகளின் படுக்கையறையில் மெலிதான வெளிச்சம் பரவும்படி மின்விளக்கை பொருத்தவும். இதனால் உங்கள் குழந்தைகள் ஓரளவு நிம்மதியுடன் உறங்குவர்.

2. இருளில் உங்கள் குழந்தைகள் என்ன நினைக்கிறார்கள் அல்லது உணர்கிறார்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். அவர்களது அச்சத்தை போக்குவதற்கு உத்திரவாதம் அளியுங்கள்.

3. இருட்டாக இருக்கும் போதும், வெளிச்சமாக இருக்கும் போதும், அவர்களது அறை ஒரே மாதிரி இருப்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அதனால் அவர்களது பயம் படிப்படியாக குறையும்.

4. ஒரு மங்கலான ஒளியைத் தரும் மின் விளக்கை பொருத்தி, பின் படிப்படியாக அவ்வெளிச்சம் குறையும்படி செய்தால், குழந்தைகளின் பயம் குறைந்து, நம்பிக்கையுடன், அவர்களே விளக்கை அணைத்துவிட்டு உறங்கும் நிலைமை ஏற்படும்.

5. ஹாலில் உள்ள விளக்கை அணைக்காது வைத்து, உங்கள் குழந்தை உறங்கியவுடன் அணைத்து விடுங்கள்.

6. விளக்கை அணைத்து விட்டு உங்கள் குழந்தையுடன் இருங்கள். அவர்களை இருட்டில் இருக்கச் செய்யுங்கள். அவர்கள் அந்த இருட்டிற்கு பழகி அருகிலுள்ள பொருட்களை பார்க்க முடியும் என்றும் அவர்கள் பயப்படத் தேவையில்லை என்றும் உணர வையுங்கள். குறிப்புகள்: ஒருவேளை குழந்தைகள் எதையாவது நினைத்து பயந்து விழித்தால், உங்களுடன் உடனடியாக தொடர்பு கொள்ள அவர்களது அறையில் தொலைபேசி ஒன்றை வைக்கவும்.

இரவில் நடமாடும் விலங்குகளான பூனை, வவ்வால் மற்றும் பறவையினமான ஆந்தை போன்றவற்றின் பொம்மைகளை அவர்கள் அறையில் வைத்தால், அவர்கள் இரவில் கண்விழித்து பார்க்கும் போது, இருட்டில் பார்க்கக்கூடிய நண்பர்கள், தன்னை பார்ப்பதாக நினைத்து, தங்கள் பயத்தை போக்கிக்கொள்வர். விளக்குகளை அணைத்து அவர்கள் பயப்பட எதுவும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்கள் சோர்வாக உணரும் வரை புத்தகங்கள் படிக்க அவர்களை அனுமதியுங்கள். அவர்களே விளக்குகளை போடவும், அணைக்கும்படியும் செய்ய பழக்கப்படுத்துங்கள். நல்ல இனிமையான இசையை கேட்கும்படி செய்யுங்கள். அவர்கள் உறங்கப்போகும் முன் நல்ல விஷயங்களை மட்டுமே எப்பொழுதும் அவர்களிடம் பேசுங்கள்.

குழந்தை வளர்ப்பதில் சில தவறான பழக்க வழக்கங்கள் !

 
 
1. குழந்தை பிறந்தவுடன் குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். வேறு எந்தப் பொருளும் என்ன காரணம் கொண்டும் ஊட்டக்கூடாது.


*
2. பிறந்த சில குழந்தைகளுக்கு மார்பகத்தில் பால் கட்டி தடித்து இருக்கும். இதை குழந்தை வீறிட்டு அழுவதையும் பொருட்படுத்தாது நசுக்கி விட்டு பாலை வெளியே எடுக்கும் பழக்கம் உள்ளது. இது நல்லது அல்ல. மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.


*
3. பச்சிளங்குழந்தை அழுவதற்கு காரணம் ‘உரம் விழுந்து இருக்கிறது’ என்று எண்ணி ‘உரம் எடுத்தல்’ என்று செய்கிறார்கள். இது தவறான பழக்கம். இப்படியொரு ‘நோய் நிலை’ இல்லை.


*
4. அடிக்கடி பேதியாகும் குழந்தைகளுக்கும் தொக்கம் எடுக்கிறார்கள். அப்படி ஒன்று கிடையாது. பேதியின் காரணம் என்ன என்று அறிந்து அதற்கான வைத்தியம் செய்ய வேண்டுமே தவிர தொக்கம் எடுப்பது தவறு - சில சமயம் விபரீதம் ஏற்படக் கூடும்.



பேதியை உடனே நிறுத்தும் மாத்திரையை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. வயிற்றில் ஏதோ ஒரு பொருள் ஒதுங்கி உள்ளது என்று ‘தொக்கம் எடுத்தல்’ என்று சொல்கிறார்கள். இது இல்லாத ஒன்று. அது போல் குடல் ஏற்றம் என்று ‘குடல் தட்டல்’ என்று செய்கிறார்கள். இது தவிர்க்கப்படவேண்டும்.


*
5. சில குழந்தைகளுக்கு பிறந்து சில மாதங்களுக்கு தொப்புள் சிறிது வெளியே தள்ளிக் கொண்டு இருக்கும். அதை அமுக்கி காசு வைத்து கட்டும் பழக்கம் கூடாது. மாறாக தொப்புளைச் சுற்றி உள்ள பகுதியில் விரலை வைத்து சிறிது சிறிது அமுக்கி அமுக்கி விடலாம்.


*
6. சாம்பிராணி, கொமஞ்சான் புகை போடுவதால் சில குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அவை அவசியமில்லை; பயனுமில்லை.


*
7. சில பெரியவர்கள் மூக்கில் ஊதி சளியை எடுக்க முயல்கிறார்கள். இது தவறான பழக்கம். இதனால் இவர்களின் வாயில் உள்ள நுண்கிருமிகள் எளிதில் குழந்தைகளுக்குப் பரவும்.


*
8. தலைக்கு குளிக்க வைக்கும் முன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் உள்ளது. இதனால் எண்ணை தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்கு துவாரம் அருகே வரும்போது மூக்கு அனிச்சை செயலாக அதை உறிஞ்சி உள்ளே இழுத்து அதனால் சளி, நிமோனியா போன்ற நோய் வர வாய்ப்பு உள்ளது.



*
9. தோலில் சிலசமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறுசிறு சீழ் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை ‘அக்கி’ என்று சொல்லி அதற்கு அக்கி எழுதுவதாக சிலர் நம்புகிறார்கள். மருந்தை உட்கொண்டாலே ஒழிய வெறும் அக்கி எழுதுவதால் போய் விடாது.

Friday 13 December 2013

பிறந்த குழந்தையின் வளர்ச்சி நிலைகள்:-




தாயின் கர்ப்பப் பையில் கருவாக உருவாகி, 9 மாதத்தின் நிறைவில் சரியான உடல் எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.


அந்த வகையில், ஒரு சில குழந்தைகள் விரைவாகவே திரும்புதல், தவழுதல் போன்றவற்றை செய்யலாம். சில குழந்தைகள் மாதங்கள் கடந்தும் செய்யலாம். அது அவற்றின் வளர்ச்சியைப் பொருத்த விஷயமாகும். ஆனால் பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி இங்கு காணலாம்.

முதல் மாதம்


கை, கால்களில் அசைவு இருக்கும். 24 மணி நேரத்தில் 22 மணி நேரம் உறங்கிக் கொண்டுதான் இருக்கும். பசிக்காகவும், உடல் உபாதைகளுக்காகவும் குழந்தைகள் அழும்.

இரண்டாம் மாதம்

அசைவுகளை உணரும். அழுகையைத் தவிர சில சிறிய சத்தத்துடன் கத்தும். தாயின் அரவணைப்பை நன்கு உணர்ந்திருப்பர்.

மூன்றாம் மாதம்

தாயின் முகம் நன்கு அறிந்திருக்கும். குரல்களைக் கேட்டு அந்தப் பக்கமாகத் திரும்பும். அசைவுகளை உற்று நோக்கும்.

நான்காம் மாதம்

நிறங்களை அறிந்திருக்கும். குழந்தைகளுக்கு கழுத்து நிற்க ஆரம்பிக்கும். கழுத்தை அவர்களாக திருப்பி அசைவுகளை கவனிப்பார்கள். அவர்களது பெயரை கூப்பிட்டால் அந்த திசையை நோக்கி திரும்புவார்கள்.

5ம் மாதம்

ஒரு பக்கமாக ஒருக்களித்து படுப்பார்கள். கவிழ்ந்து கொள்ள முயற்சித்து கை சிக்கிக் கொண்டு அழுவார்கள். இந்த மாதங்களில் குழந்தைகள் கவிழ்ந்து கொள்ள எடுக்கும் முயற்சிகள் தோல்வியாகவே இருக்கும்.

6ம் மாதம்

வாயில் நுரை வரும். பேசுவதற்கு வாயைக் குழப்புவார்கள். கவிழ்ந்து கொள்வார்கள். தலை நன்றாக நிற்கும். பால் பற்கள் முளைக்கத் துவங்கியிருக்கும்.

7ம் மாதம்

ஒரு முறை கவிழ்ந்தும், அதில் இருந்து திரும்ப மல்லாக்காக படுத்தும் உருளுவார்கள். சில குழந்தைகள் பின்னுக்கு செல்ல காலை உதைக்கத் துவங்கும். உட்கார வைத்தால் உட்காருவார்கள்.

8ம் மாதம்
பொம்மைகளை வைத்துக் கொண்டு விளையாடுவார்கள். எந்த பொருளையும் வாயில் வைத்துக் கொள்ள முனைவார்கள். தானே உட்காருவார்கள். நிற்க வைத்தால் தள்ளாடிக் கொண்டே நிற்பார்கள்.

9ம் மாதம்

ஒரு அடி எடுத்து வைத்து நடப்பார்கள். அவர்களது பெயரைக் கூப்பிட்டால் திரும்பி பார்ப்பார்கள். ஒவ்வொரு வார்த்தைகளாக பேசுவார்கள். தாய், தந்தையை அடையாளம் காட்டுவார்கள்.

10ம் மாதம்

அத்தை, தாத்தா, மாமா போன்றவற்றை நன்கு உச்சரிப்பார்கள். தாயின் பாடலுக்கு நடனமாடுவார்கள். டாடா சொல்வது, உணவை மறுப்பது, தெரியாதவர்களிடம் செல்ல மறுப்பது போன்றவை உருவாகும்.

12ம் மாதம்

ஒரு வயது நிரம்பும் போது முன்வரிசை பால் பற்கள் அனைத்தும் முளைத்திருக்கும். விழுந்து எழுந்து அவர்களாக நடப்பார்கள். பல வார்த்தைகளை அவர்களாகவே பயன்படுத்துவார்கள். ஒரு சில குழந்தைகள் ஒன்றிரண்டு வார்த்தைகளை இணைத்துப் பேச முயற்சிக்கும். பொருட்களையும், உறவினர்களையும் அடையாளம் காட்டுவார்கள்.

15வது மாதம்

தனியாக நடப்பார்கள். உணவுகளை ருசித்து உண்பார்கள். சூழ்நிலைக்கு ஏற்ப பயம், சந்தோஷம், அழுகை ஆகியவற்றை அவர்களே வெளிப்படுத்துவார்கள். படிகட்டுகளை ஏற முயற்சிப்பார்கள். வார்த்தைகளை தெளிவாக பேசுவார்கள்.

இவ்வாறாக குழந்தை வளர்ந்து சிறுவனாகிறது. இந்த படிநிலைகளில் சில குழந்தைகளின் வளர்ச்சியும், மற்ற சில குழந்தைகளின் வளர்ச்சியும் வேறுபடும்.

Wednesday 11 December 2013

உங்கள் பெண் பிள்ளைகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில வழிமுறைகள்…




உங்களுடைய மகள் உங்களுக்கு மிகவும் அரிய சொத்தாக இருப்பவள். அவள் இனிமையானவள், அழகானவள் மற்றும் வளமாக வாழ்வதற்கு மிகவும் தகுதியானவள். இவையனைத்தும் உண்மை என்னும் போது, அவளுடைய பெற்றோர்ககளாகிய உங்களுக்கு அவளை சுய மதிப்புடையவளாக வளர்க்கும் பொறுப்பு பெரிதும் உள்ளது.

இது மிகவும் எளிமையானது மற்றும் தினசரி அவளை சில செயல்களைச் செய்யச் சொல்லி கற்றுக் கொடுக்கக் கூடியது. ஒரு பெற்றோராக நீங்கள் குழந்தையின் மனதில் உலகத்தை எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையையும் மற்றும் அவளுடைய வாழ்க்கைக்கு சிறந்த அர்த்தத்தையும் உருவாக்க கொடுக்க வேண்டும். மகளை வளர்தெடுப்பது பொதுவாகவே கடினமான விஷயமாக இருந்தாலும், அது ஒரு உன்னதமான வேலையாகும். பெண் குழந்தையை வளர்த்தெடுப்பதிலும், அவளுடன் பழகுவதிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

வாழ்க்கை தங்களிடம் முன்வைக்கும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தேவையான நம்பிக்கையை அளித்து, பின்நாளில் சமூகத்தின் சிறந்த மனிதர்களாக தங்களை வெளிப்படுத்தவே குழந்தைகளின் சுய மதிப்பு உதவுகிறது. தங்களை சூழ்ந்துள்ளவர்கள் தங்களை மதிப்பவர்களாகவும், தங்களுடைய மதிப்பை உணர்ந்தவர்களகாவும் இருக்கும் இடங்களில் பெண்களை இருக்கச் செய்ய வேண்டும். குறைவான சுய மதிப்புடைய பெண்கள் தங்கள் வாழ்க்கையில் தவறான பாதையை தேர்ந்தெடுப்பார்கள் என்பது பொதுவான உண்மையாகும். குழந்தைகளை நல்ல வழியில் வளர்ப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. ஒரு தயானவள் தன்னுடைய குழந்தையின் வாழ்வில் பெரிய விஷயங்களை செய்யக் கூடியவள் மற்றும் பெண்களை அவள் வளர்ப்பது ஒன்றும் குறைவான கவனம் கொண்டு செய்யும் விஷயமும் அல்ல. உங்கள் மகளை சுய மதிப்புடன் வளர்ப்பதற்கான சில குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.

1. பாராட்டுங்கள்!


அவளுக்கு பாராட்டுகளை தெரிவியுங்கள்! அவள் அதற்கு தகுதியானவள் தான். அவள் சிறிய வேலையை செய்தால் கூட, நீங்கள் அவளை பாராட்டலாம். அவள் மிகச்சிறந்த பணியை செய்துள்ளதாக சொல்லுங்கள். அவளுக்கு மேலும் சில பணிகளை கொடுத்து, அவளால் அவற்றை செய்ய முடியும் என்று சொல்லுங்கள். அவளால் அவளுடைய வழிமுறையில் எந்த விஷயத்தையும் கையாள முடியும் என்று சொல்லுங்கள். பெண் குழந்தையை வளர்ப்பது சில நேரங்களில் அதிக தேவையுள்ளதாக இருக்கும், அதனால் உங்களுடைய அன்பை முழுமையாக அவளுக்கு கொடுங்கள்.

2. தேவை கல்வி


 நல்ல தரமான கல்வி இயற்கையாகவே சுய மதிப்பை அதிகரிக்கும் கருவியாகும். அவளுக்கு எல்லா வகையிலும் கல்வியை புகட்டுங்கள். அவளை செய்திகளை அறியச் செய்யுங்கள். உங்களுடைய பிஸியான வேலைகளிலிருந்து சிறிது நேரத்தை அவளுடன் கழிப்பதற்காக ஒதுக்குங்கள். அவள் என்ன கற்றுக் கொண்டாள் என்பதை கேளுங்கள், அவளுடன் சேர்ந்து டிவி பாருங்கள்! டிவியில் பார்த்த விஷயங்கள் பற்றியும், அவளைப் பற்றியும் மற்றும் உங்களைப் பற்றியுமான விஷயங்களை அவளுடைய பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், மேலும் அவள் எவற்றை பார்க்கக் கூடாது என்பதையும் குறிப்பிடுங்கள். ஊடகங்களின் தகவல்களை சரியாக தேர்ந்தெடுக்கும் வகையில் அவளுக்கு உதவி செய்யுங்கள். இந்த வகையில் உங்கள் மகளின் சுய மதிப்பினை நீங்கள் உயர்த்தலாம்.

3. திறன்களை வளர்த்தல்

 குழந்தைகளை திறன் மிக்கவர்களாக வளர்ப்பதன் மூலம் அவர்களை சுய மதிப்பு மிக்கவர்களாக்க முடியும் என்பது முக்கியமான கருத்தாகும். பெண் குழந்தைகளை அவர்களுக்கான திறன்களை அவர்களாகவே வளர்க்கச் செய்வதும் கூட, பெண்களை வளர்ப்பதன் ஒரு பகுதியாக உள்ளது. அவள் தன்னுடைய கனவுகளை செயல்படுத்த ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுங்கள். பெண்களை வளர்ப்பது எளிதான விஷயம் கிடையாது, அதற்கு நிறை அன்பும், நேரமும் தேவைப்படும்.

4. வீட்டில் உள்ள இதழ்களை கவனிக்கவும்

 நீங்கள் எப்பொழுதும் செய்ய வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்றாகும். உங்கள் வீட்டில் நீங்கள் வாங்கும் இதழ்களையும் மற்றும் உங்கள் மகள் அவற்றில் எதை படிக்கிறார் என்பதையும் சற்றே கவனிக்க வேண்டும். அவள் சரியான இதழ்களையும், நூல்களையும் படிக்க நீங்கள் வழிகாட்ட வேண்டும். இதுவும் பெண்களை வளர்க்கும் முறை தான்.

5. அன்பை வெளிப்படுத்துங்கள்

 உங்களுடைய அன்பை உங்கள் மகள் உணர வேண்டும். கடினமான நாட்களிலும் கூட அவளை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அவளுக்கு உணர்த்த வேண்டும் மற்றும் அவள் துன்பத்தில் இருக்கும் நாட்களில் தனிமையில் அவளை விட்டு விடக் கூடாது. உங்களுடைய அன்பை அவளுக்கு காட்டுங்கள், அவளை உணரச் செய்யுங்கள். இதன் மூலம் குழந்தைகளின் சுய மதிப்பு உயரும். சில குழந்தைகளிடம் சுய மதிப்பு குறைவாகவே இருக்கும். எனினும், உலகம் முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தங்கள் குழந்தைகளை தயார் செய்ய வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். அவளை இவ்வகையில் சுய மதிப்புடன் தயார் செய்வதன் மூலமாக ஒரு நல்ல வாழ்க்கையை நீங்கள் அவளுக்கு அமைத்துக் கொடுக்கிறீர்கள்.

குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........



குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்ட விடமால் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணை இதோ...


* பிசிஜி - பிறப்பின் போது

* ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) - பிறப்பின்போது

* ஹெபடைடிஸ் பி (2) - 4 வாரங்கள்

* டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 8 வாரங்கள்

* டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 12 - 20 வாரங்கள்

* டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) - 18-20 வாரங்கள்

* அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) - 8-9 மாதங்கள்

* சின்னம்மை (விருப்பத்துடன்) - 12-18 மாதங்கள்

* எம்எம்ஆர் - 15-18 மாதங்கள்

* எச்ஐபி (பூஸ்டர்) - 15-18 மாதங்கள்

* டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) - 18-24 மாதங்கள்

* ஹெபடைடிஸ்-ஏ மருந்து (விருப்பம்) - 2 ஆண்டுகள்

* டைபாய்டு ஊசி - 3 ஆண்டுகள்

* டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) - 5 ஆண்டுகள்

* ஹெபடைடிஸ் - ஏ மருந்து (விருப்பம் - 5 ஆண்டுகள்

* எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம்எம்ஆர் கொடுக்காவிட்டால்) - 5 ஆண்டுகள்

* வாய்வழியாக டைபாய்டு - 8 ஆண்டுகள்

* வாய்வழியாக டைபாய்டு - 9 ஆண்டுகள்

* டெட்டானஸ் - 10 ஆண்டுகள்

* சின்னம்மை தடுப்பூசி - 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)

* டைபாய்டு வாய்வழியாக - 12 ஆண்டுகள்

* டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) - 16 ஆண்டுகள்

Sunday 8 December 2013

அம்மா-பாசத்தின் தெய்வம் - அவசியம் படிக்கவும்!


இந்த கதை உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

கள்ளிப்பட்டு என்னும் ஊரில் இருந்தது அந்த அரசினர் பள்ளி. அங்கு ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். மாணவர்கள் அனைவரும் சிறப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர். அப்போது “ஐயா” என்று ஒரு குரல் கேட்டது.

பெண்-ஒற்றைக் கண்ணுடன்ஆசிரியர் திரும்பிப் பார்த்தார். வகுப்பறையின் வாசற்படிக்கு அருகே முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். அவளை பார்க்கவே அருவருப்பாக இருந்தது. ஏனெனில் அவளுக்கு ஒரு கண் இல்லை. அவளைப் பார்த்ததும் மாணவர்கள் அனைவரும் பயந்துவிட்டனர். வகுப்பு ஆசிரியர் கூட பயந்தவராய் அவளைப் பார்த்து,

“யாரும்மா நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார்.


“ஐயா, என் மகன் ராமு மதிய சாப்பாட்டை மறந்து விட்டு வந்து விட்டான். அவனிடம் கொடுக்கத்தான் இந்த சாப்பாடுக் கூடையை எடுத்து வந்துள்ளேன். இதை அவனிடம் கொடுத்துவிட்டு சென்று விடுகிறேன்.” என்றாள்.
“ராமு! உங்க அம்மாகிட்ட போய் அந்த கூடையை வாங்கிட்டு வா.”

ராமு எழுந்து சென்று வாங்கி வந்து ஆசிரியரிடம் நன்றி கூறி அமர்ந்தான். அவனது அம்மாவும் சென்றுவிட்டாள். ஆனால் வகுப்பறையில் உள்ள மாணவர்கள்தான் ராமுவை ஓட்டித்தள்ளிவிட்டனர்.

“ஏய்....... ஒத்த கண்ணு அம்மா!”

“டேய்! அதுதான் உங்க அம்மாவா? பேய் மாதிரி இருக்காங்க...”

“ராமு அம்மா, ஒத்த கண்ணு அம்மா”

என்றெல்லாம் அவனை ஏளனம் செய்தனர். ராமுவிற்கு அழுகையே வந்துவிட்டது. ஆசிரியர் மாணவர்களை அதட்டி அமைதிபடுத்தினார்.

பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற ராமு, தனது புத்தகப்பையை வீட்டினுள் ஒரு மூலையில் தூக்கி எறிந்தான். அவன் அவ்வளவு கடுப்பாக இருப்பதைப் பார்த்த அவன் அம்மா வள்ளி “என்னப்பா ஆச்சு? ஏன் இவ்வளவு கடுப்பா இருக்கே?” என்று கேட்டாள்.

“எல்லாம் உன்னாலதான். நான் எத்தனை முறை சொல்றது, என்ன பார்க்க பள்ளிக்கூடம் வராதேனு? நீ இன்னைக்கு வந்ததால எல்லாரும் என்ன ‘ராமு அம்மாவுக்கு ஒத்த கண்ணு’ அப்படினு எவ்வளவு கேலி கிண்டல் பண்ணினாங்க தெரியுமா? நான் அழுதே விட்டேன்.”

“நீ சாப்பாட்டை மறந்து விட்டு போயிட்டே. சாப்படலனா உடம்பு கெட்டுடும். அதனாலதான் எடுத்துக்கிட்டு வந்தேன்.”

“நான் சாப்பிடாம செத்தா உனக்கு என்ன? என்னையை அசிங்கப்படுதுவதே உனக்கு வேலையாப்போச்சி. நீ இனிமே பள்ளிக்கூடம் வந்த, நான் பள்ளிக்கு போகவே மாட்டேன்.”.

“சரிப்பா, என்ன மன்னிச்சிடு. இனிமே உன்னை நான் தொந்தரவு செய்யமாட்டேன்.” என்று கூறியவள் சாமியறைக்குள் சென்று குமுறிக் குமுறி அழுதாள். தன் மகனே தன்னை கேவலமாக பார்க்கிறானே என்று சாமியிடம் முறையிட்டாள்.

ராமுவின் அப்பா அவன் பிறந்த ஒரு மாதத்திலேயே இறந்துவிட்டார். அவனுடைய ராசிதான் அவரை கொன்றுவிட்டது என்று அனைவரும் கூறினர். ஆனால் அவனது அம்மா வள்ளி, “என் புருஷன் குடிகாரன். குடிச்சி, குடிச்சியே செத்து போய்ட்டான். அதுக்கு என் புள்ள ராசியை தப்பா சொல்லாதீங்க” என்று அவனை மெச்சிக்கொள்வாள். புருஷன் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ளாமல், கூலி வேலை செய்து அவனை காப்பாற்றி வருகிறாள்.

ராமு தன் உயர் கல்விக்கு சென்னை செல்லவேண்டிய சூழ்நிலை. அதனால் தன் தாயிடம் விடைபெற்று சென்று அங்கு விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் படிக்கும் காலக்கட்டத்தில் விடுமுறைக்கு கூட அவன் அம்மாவை பார்பதற்கென்று வந்தது கிடையாது. இதை நினைத்து வள்ளி வருந்தாத நாளே இல்லை. பெத்த மனம் தன் பிள்ளையை பார்க்க ஏங்கியது. அதனால் அவள் ஒருநாள் ராமுவின் கல்லூரிக்கே சென்றுவிட்டாள். இப்போதும் ராமு தனது அம்மாவை மிகவும் அசிங்கப்படுத்தி அனுப்பினான். அதனால் நொந்துபோய் வீட்டிற்கு சென்ற அவள் ராமுவை பார்க்கச்செல்லாமல் அவனுக்குத் தேவையான பணம் மட்டும் அனுப்பி வந்தாள். ராமுவிடமிருந்து கடிதம் வரும். ஆனால், வள்ளி எப்படி இருக்கிறாள் என்று கேட்டிருக்கமாட்டான். “எனக்கு ஐயிந்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும்” என்று மொட்டையாக இருக்கும். அவளும் தன் மகன் இவ்வளவு கல் நெஞ்சக்காரனாக இருக்கிறானே என்று அழுதுகொண்டே பணத்தை அனுப்புவாள்.

ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அவனிடமிருந்து வரும் கடிதம் கூட வருவதில்லை. தன் மகனுக்கு என்ன ஆயிற்றோ என்று அவன் தன்னை அவமானப்படுத்தினாலும் பரவாயில்லையென்று அவனது கல்லூரிக்குச் சென்று விசாரித்ததில், அவனது படிப்பு முடிந்து வேலை கிடைத்துச் சென்றுவிட்டதாக தெரியவந்தது. அவளும் தன்னை தன் மகன் அடியோடு மறந்துவிட்டானே என்று தினமும் அழுதுகொண்டே இருப்பாள். அதனால் அவளது உடல்நிலை மோசமானது. சில வருடங்கள் கழிந்தன. ராமு நல்ல வேலையில் உள்ளதாகவும், அவனுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதாகவும், தான் அவனைப் பார்த்ததாகவும் ஒருவர் வந்து வள்ளியிடம் கூறினார். இந்த செய்தி அவளுக்குப் புத்துயிர் அளித்தது.

அவர் மூலம் அவன் விலாசத்தை அறிந்து அவனை பார்க்கச் சென்றாள். சென்னையில் அவனது இருப்பிடத்திற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரித்ததில் அவன் வீட்டைக் கண்டுபிடித்தாள். அங்கு ராமுவின் பிள்ளைகள் பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் தவறவிட்ட பந்து வள்ளிக்கு அருகில் வந்தது. அதை எடுத்துக்கொண்டு தன் பேரப்பிள்ளைகளை கொஞ்ச அவள் சென்றபோது அவளது ஒற்றைக்கண்ணைப் பார்த்து பயந்துபோய் பிள்ளைகள் அழ ஆரம்பித்தன.

குழந்தைகளின் அழுகை சத்தத்தை கேட்டு ராமு வெளியில் வந்தான். அம்மாவை பார்த்த ராமு ஏதோ பிச்சைக்காரியைப்போல் போல் “நீ எதுக்கு இங்க வந்த, நாங்க நல்லா இருக்கறது உனக்கு பிடிக்கலயா? உன் மூஞ்சிலேயே படக்கூடாதுன்னுதான நான் எங்க இருக்கிறேன்னு சொல்லவேயில்ல, இப்ப என் பிள்ளைகல பயம்புறுத்த வந்துட்டியா? முதல வெளிய போ”, என்றான் ராமு.

“இத்தனை வருடங்கள் கழித்து நான் அவனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால் இவன் நம்மை அம்மா என்று கடுகளவு கூட பாராமல் இப்படி சொல்லிவிட்டானே! இனிமேல் இவனிடம் பாசத்தை எதிபார்ப்பது தவறு” என்று எண்ணிய வள்ளி அங்கிருந்து வந்துவிட்டாள்.

சில நாட்கள் கழித்து ராமுவிற்கு ஒரு கடிதம் வந்தது. அது அவன் அம்மாவின் அண்டை வீட்டுக்காரர் எழுதியது. அதில் “ராமு உங்க அம்மா இறந்துவிட்டார். அவங்க உன்னிடம் தருமாறு கொடுத்தக் கடிதத்தை இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். தயவு செய்து படிக்காமல் விட்டுவிடாதே. இருக்குபோதுதான் அவர்களை மதிக்கவில்லை. இறந்தபிறகாவது இந்த கடிதத்தை படித்து அவருடைய ஆத்துமாவை சாந்தியடைய வை!” என்று இருந்தது. ராமு தன் அம்மா இறந்துவிட்டாளே என்று சிறு கவலைகூட இல்லாமல் இன்னொரு கடிதத்தை எடுத்துப் படித்தான்.

“ராமு! என் மகனே! உன்னைப் பெற்றெடுக்க மறு பிறவி எடுத்தேன். என் ரத்தத்தைப் பாலாக்கி உனக்குக் கொடுத்தேன். என் உடலையே உருக்கி கூலி வேலை செய்து உன்னைப் படிக்கவைத்தேன். ஆனால் அதற்கெல்லாம் நீ கொடுத்த கைமாறு எந்தவொரு தாய்க்கும் கிடைக்கக்கூடாது. சரி, ஏன் என்னை நீ வெறுக்கிறாய்? நான் ஒற்றைக் கண் கொண்டவள் என்பதால்தானே? நீ குழந்தையாய் இருந்தபோது ஒரு விபத்தில் உன்னோட ஒரு கண்ணை இழந்துவிட்டாய். உன்னை ஒரு கண்ணோடு பார்ப்பதற்கு என் இருதயமே நின்றுவிடும் போலிருந்தது. அதனால் என் ஒரு கண்ணை கொடுத்து உன் கண்ணைக் காப்பாற்றினேன், என் அழகை இழந்தேன். ஆனால் எனக்கு அப்போது அது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை உனக்கு கூறி வளர்த்திருக்கவேண்டும். ஆனால் அப்படி செய்திருந்தால், நீ ஒருவித மன உறுத்தலுடன் வாழ்ந்துவந்திருப்பாய்.” இதைப் படித்தவுடன் ராமுவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. மேலும் படித்தான்.

“அழாதே மகனே, எனக்காக அழாதே. உன் பிள்ளைகளுக்காக அழு. அவர்களை வளர்க்கும்போதே நீ படும் கஷ்டங்களை சொல்லி வள. இல்லையென்றால் என் கதிதான் உனக்கும்.”

இதை படித்ததும் ராமு தன் தவறை உணர்ந்தான். அவனது கண்ணில் தாரை தரையாய் நீர் வழிந்தது. தரையில் புரண்டு புரண்டு அழுதான்.

வாழும்போதே தன் தாயின் தியாகத்தை உணராமல், அவள் இறந்தபிறகு அழுது என்ன பிரயோஜனம்?

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?.

Saturday 7 December 2013

குட்டீஸ்களுக்கு உணவு ஊட்டும் போது பொறுமை முக்கியம்!

 


குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஆனால் அதையே மிகவும் கஷ்டமான காரியமாக நினைத்து குழந்தைகளை உண்ணவைக்க பாகீரத பிரயத்தனம் செய்கின்றனர் சில பெற்றோர்கள். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமர்த்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சில குழந்தைகள் உணவை விழுங்காமல் அப்படியே வெளியே தள்ளிவிடுவார்கள். குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளை தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். அவர்கள் தரும் ஆலோசனைகள் உங்களுக்காக.

ருசியான உணவு

குழந்தைகளுக்கு மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை சிறிதளவு ஆகாரம் கொடுப்பது அவசியம். அதில் மூன்று முறை சாதம், காய்கறி உள்ளிட்ட உணவுகளும், இருமுறை சிநாக்ஸ்வகையாகவும், பின்னர் ஜூஸ், பால் போன்றவகையாகவும் இருப்பது அவசியம். தயிர் சாதம், காரட் மசியல், பழக்கூழ் என குழந்தைகளுக்கு பிடித்தமாதிரியான உணவுகளை தயாரித்து அளிப்பது அவர்களின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும்.

தானியங்கள், பயிறு, பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள் என குழந்தைகளின் உணவுகளை திட்டமிட்டு தயாரித்து அளிக்கவேண்டும். புரதச்சத்து நிறைந்த மாமிச உணவுகள், சீஸ், பீன்ஸ் போன்றவைகளைக் கொண்டு தயாரித்த உணவுகளை அளிக்கவேண்டும். பிரட், ஆப்பிள், சூப், போன்றவைகளை இரவு நேரங்களில் கலர்புல்லாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிடுவார்கள்.

சரியான அளவு

குழந்தைகளின் வாய்க்குள் எந்த அளவிற்கு உணவு பிடிக்குமோ அந்த அளவிற்கு மட்டுமே உணவுப்பொருளை வைக்கவேண்டும். அதிகமாக சாப்பிடவேண்டும் என்பதற்காக எக்கச்சக்க உணவுகளை திணிப்பதால் தொண்டைக்குழியில் சிக்கி குழந்தைகள் சிரமப்படும். அதுவே உணவின் மீதான வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

ஊட்டச்சத்து உணவுகள்

புதிய வகை உணவுகளை அறிமுகப்படுத்தும் போது குறைந்த அளவு கொடுத்து குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுகிறதா? என்பதை கவனித்து பின்னர் உணவை அளிக்கவேண்டும். குழந்தைகளுக்கு வறுத்த, பொரித்த உணவுகளை கொடுப்பதை விட நார்ச்சத்துள்ள உணவுகளை அறிமுகப்படுத்தினால் அவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

ஜங்க் ஃபுட் வகைகளைகளை அதிகம் தருவதற்கு பதிலாக மாலை நேரங்களில் பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் உணவுகளை பழக்கப்படுத்துவது அவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வழி ஏற்படும்.

பொறுமை அவசியம்

குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை விழுங்கத் தொடங்கும். அதனால், நாம்தான் பொறுமையாக உணவை அவர்களுக்கு ஊட்டிவிட வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டே மெதுவாக உணவு ஊட்டவேண்டும். குழந்தையில் நாவில் உள்ள சுவை நரம்புகளுக்கு ஏற்ப உணவை ருசியாக தயாரித்து அளித்தால் குழந்தைகள் உணவு உட்கொள்வார்கள்.

ஸ்பூன் எச்சரிக்கை

இன்னும் சில குழந்தைகளுக்கு முதன் முறையாக ஸ்பூன் கொண்டு உணவை கொடுக்கும் போது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

குழந்தைகளுக்கு ஸ்பூன்கள் கொண்டு உணவு ஊட்டும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சிறு குழந்தைகள் மிக வேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில் அல்லது முகத்தில் ஸ்பூன் பட்டு காயம் ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.

அதனால், எக்காரணம் கொண்டும் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகிக்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.

முன் உதாரணம்

நம்முடைய உணவுப் பழக்கமே குழந்தைகளை தொற்றிக்கொள்ளும். ஊட்டச்சத்து எதுவும் இல்லாத உணவுகளை பெற்றோர்களே ருசிக்காக வாங்கி உண்ணும் போது அந்த பழக்கம் குழந்தைகளை தொற்றிக்கொள்கிறது. எனவே வீடுகளில் நாம் சத்தான உணவுகளை தயாரித்து உண்பதனால் அதனை குழந்தைகளுக்கு வழங்க முடியும். அவர்களுக்கும் சரிவிகித சத்துணவு கிடைக்கும். எனவே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நம்முடைய உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்வது நலம் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.

Friday 6 December 2013

குழந்தை!



* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.


* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.


* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.


* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.


* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.


* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.


* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.


* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.


* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.


* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.


** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்.

Thursday 5 December 2013

குழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி?

எல்லா பெற்றோர்களுக்குமே தங்கள் குழந்தைகள் நிறைய சத்துள்ள உணவுவகைகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக வளரவேண்டும் என்ற ஆசை சற்று அதிகமாகவே இருக்கும்.

அதற்காக தனக்கு உணவில்லாவிட்டாலும் பரவாயில்லை, குழந்தைகளுக்கு எவ்வளவு செலவானாலும் சத்தான உணவழிக்க வேண்டும் என பாடுபடுகிறார்கள்.

ஆனால் குழந்தைகளோ பெற்றோர் கொடுக்கும் உணவு வகைகளை தீண்டுவதே இல்லை.

எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என அடம்பிடித்து சாப்பிட மறுக்கிறார்கள்.

இது பெற்றோருக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதோடு குழுந்தையை அடித்தல், குழந்தை சாப்பிடாததால் அதனுடன் பேசாமல் இருத்தல் போன்ற எதிர்மறை விளைவுகளையும் உண்டாக்குகிறது.

ஏன் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்பதை தெரிந்துகொள்ள ஒரு உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்.

· குழந்தைகளுக்கு மிக அதிக உணவு தேவையில்லை. உதாரணமாக ஒரு பெரிய சாக்லெட் சாப்பிட்டால் அதற்கு மதிய உணவு தேவைப்படாது.

எனவே மதிய உணவு கொடுத்தால் அதை சாப்பிட மறுப்பதில் வியப்பேதும் இல்லை.

· பெற்றோர்களுக்கு மற்ற குழந்தைகள் சாப்பிடும் அளவோடு தன் குழந்தை சாப்பிடும் அளவை ஒப்பிட்டு பார்க்கும் பழக்கம் உண்டு.

அவ்வாறு ஒப்பிட்டு பார்க்கும் போது எப்போதும் அடுத்த குழந்தையை விட தன் குழந்தை குறைவாகவே உண்பதாக தோண்றும்.

இது ஒரு மாயத் தோற்றமே.

· தன் குழந்தை “நன்றாக சாப்பிடுகிறது”

என பிறரிடம் சொன்னால் கண் திருஷ்டி ஏற்பட்டுவிடும்

 என்று நினைத்துக்கொண்டு பல பெற்றோர்கள் “என் குழந்தை

 சாப்பிடுவதே இல்லை” என குழந்தையின் முன்பாகவே

 பிறரிடம் சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.

அதை கூர்ந்து கவனிக்கும் குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்க்க ஆரம்பிக்கின்றன.

· குழந்தைகள் ஒரே உணவை எப்போதும் விரும்பி உண்பதில்லை அவர்களின் உடலில் என்ன சக்தி குறைவாக உள்ளதோ அந்த சக்தி அதிகமாக உள்ள உணவை விரும்பி சாப்பிடுவார்கள்.

உடலில் பற்றாக்குறையாக இருந்த சக்தி தேவையான அளவு சேர்ந்தவுடன் அந்த சக்தி இருக்கும் உணவை விரும்ப மாட்டார்கள்.

உதாரணமாக முட்டையில் உள்ள சக்தி குறைவாக இருக்கும் ஓர் குழந்தை முட்டையை தொடர்ந்து சில காலத்திற்கு விரும்பு சாப்பிடும்.

அக்குழந்தைக்கு முட்டையில் உள்ள சக்தி தேவையான அளவு உடலில் சேர்ந்தவுடன் முட்டையை அறவே வெறுக்க ஆரம்பித்துவிடும்.

எனவே ஒரே வகையான உணவை சாப்பிடுமாறு குழந்தையை கட்டாயப்படுத்தக்கூடாது.

ஓர் உணவை சாப்பிடவில்லை எனில் வேறு உணவை கொடுத்து உண்ணச் சொல்ல வேண்டும்.

· தேவைக்கு அதிகமான உணவைக் கொடுத்தால்

“உடல்பருமன்” ஏற்பட்டு குழந்தைகள் பெரியவர்களாகும்

 போது அதுவே அவர்களுக்கு பெரிய

 பிரச்சனையாக மாறிவிடும்.

எனவே உணவுப் பண்டங்களை திணித்து

 உடல் நோயை உண்டாக்க வேண்டாம்.

Wednesday 4 December 2013

கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு ஆண் வர்க்கம்!


இந்த உலகத்திலேயே ஆண் வர்க்கத்தை பொறுத்த வரை கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு உயிரினம் கடல் குதிரைதான்.

கடல் குதிரைகளிடையே உடல் உறவு என்பது கிடையாது. பரஸ்பரம் சீண்டிக் கொள்கின்றன.

இச்சீண்டல்களை தொடர்ந்து பெண் கடல் குதிரையின் உடல் சிலிர்த்து விடுகின்றது.

ஆண் கடல் குதிரையின் வயிற்றுப் பகுதியில் இனப் பெருக்க பை என்கிற உறுப்பு காணப்படுகின்றது.

ஆணின் இவ்வுறுப்புக்குள் பெண் கடல் குதிரை மிகவும் நுட்பமான முறையில் முட்டைகளை உட்செலுத்தி விடுகின்றது.

ஆண் கடல் குதிரை கர்ப்பம் தரித்து விடுகின்றது.

ஆண் கடல் குதிரையின் வயிற்றில் சுரக்கின்ற ஒரு வகை திரவம்தான் குட்டிகளுக்கு உணவு.

மூன்று வாரங்களின் பின் குட்டிகளை வெளித் தள்ளி விடுகின்றது ஆண் கடல் குதிரை.

ஒரு பெரிய படையை போல குட்டிகள் வெளியில் வந்து விடுகின்றன. பிரசவ வேதனை மிகவும் கொடுமையானது தான்.

இந்த மரத்தின் கதையைக் கேளுங்கள்.. (முழுவதுமாகப் படிக்கவும்)




சில வருடங்களுக்கு முன், ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இருந்தது. அந்த மரத்துடன் விளையாடுவதையே ஒரு சிறுவன் வழக்கமாக கொண்டிருந்தான்.தினமும் அந்த மரத்தை பார்க்க கண்டிப்பாக வந்திடுவான். அந்த மரமும் அவனுடன் விளையாடி மகிழ்ந்தது.

ஆப்பிள்களை பறித்து விளையாடுவது ,மரக்கிளையில் தொங்குவது, மரத்தைக் கட்டிக் கொள்வது என்று சின்ன சின்ன குறும்புகள் செய்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை பார்க்கும் போதும், அவனுடன் விளையாடும் போதும் அந்த மரத்திற்கு அளவற்ற மகிழ்ச்சி.

சிறுவன் கொஞ்சம் பெரியவன் ஆனதும் ஒரு நாள் மரத்தை பார்க்க வந்தான்.அவனை பார்த்ததும் மரம் "வா வந்து என்னுடன் விளையாடு " என்று ஆசையாக அழைத்தது. சிறுவன் "இல்லை இப்போதெல்லாம் அப்படி விளையாட முடியாது, நான் பெரியவன் ஆகிவிட்டேன்.எனக்கு விளையாட பொம்மைகள் வேண்டும்" என்றான்.

மரம், "என்னிடம் பொம்மைகள் எதுவும் இல்லை, என்னிடம் இருக்கும் ஆப்பிள்களை பறித்துக் கொள்.அதை விற்றுப் பணமாக்கி பொம்மை வாங்கிக் கொள் என்றது"

சிறுவனின் முகம் உடனே மலர்ந்தது.அப்படியா உண்மையாவா!! என்று எல்லா பழங்களையும் பறித்துக் கொண்டு சென்றான். அதன் பின் மரத்தைப் பார்க்க வரவில்லை.

மீண்டும் சில நாட்கள் கழித்து வந்தான்.இம்முறையும் மரம்" வா, வந்து என்னுடன் விளையாடு " என்று அழைத்தது.அவன் இல்லை நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன். நான் என் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் தங்குவதற்கே வீடு இல்லாமல் இருக்கிறோம்.உன்னால் எங்களுக்கு வீடு தர முடியுமா என்றது.

மரம் " என்னிடம் வீடு இல்லை, என் கிளைகளில் சிலவற்றை எடுத்துக் கொள், அதைக் கொண்டு சின்ன வீடு அமைத்துக் கொள்" என்றது. மீண்டும் அவனின் சந்தோசத்தை கண்டு மரம் மகிழ்ந்தது.தன்னிடம் இருப்பதை இழக்கிறோம் என்று மரம் கொஞ்சமும் வருந்தவில்லை.

வழக்கம் போல் மரம் அவன் வரவிற்காக ஏங்கி தவிக்கிறது.நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஒரு கோடை நாளில் வந்தான். எனக்கு வெப்பமாக இருக்கிறது.கடலுக்கு செல்ல ஆசையாக இருக்கு.எனக்கு ஒரு படகு வேண்டும் என்றான்.மரம் என்னிடம் படகு இல்லை, ஆனால் நீ என் தண்டுப் பகுதியை எடுத்து படகு செய்துக் கொள் என்றது.அவனுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டான்.

காலங்கள் ஓடி அவனுக்கும் வயதாயிற்று.அப்போதும் ஒரு நாள் மரத்தைப் பார்க்க வருகிறான்.இம்முறையும் மரம் அவனை ஆசையாய் வரவேற்று அரவணைக்க நினைக்கிறது. எனக்கு வயதாகிட்டு, மிகுந்த களைப்பாய் இருக்கு.நான் இங்கு ஓய்வு எடுக்க ஆசைபடுகிறேன் என்றது.

எல்லாவற்றையும் இழந்தும் சிரித்துக் கொண்டே மரம் "என்னிடம் இருப்பது வேர் மட்டுமே.நீ என் வேர் பகுதியை சிறிது வெட்டி விட்டு அந்த இடத்தில் ஓய்வு எட்டுத்துக் கொள் " என்று சொல்லிக்கொண்டே சாகிறது.

அவனும் அவ்வாறே செத்துக் கொண்டிருக்கும் மரத்தின் மேலே படுத்துக் கொண்டான்.

 நீதி :
கதையில் இருந்து உங்களுக்கு என்ன புரிகிறது. நாம் மரங்களிடம் இருந்து எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு அவற்றை வெட்டி விடுகிறோம்.மரத்தை வெட்டுவது பாவம்.இவ்வளவு தானே!!!

கதை அதை மட்டும் சொல்லவில்லை.இந்த மரம் தான் நம் ஒவ்வொருவரின் பெற்றோரும். சிறுவயதில் பெற்றோருடன் ஆடிப் பாடி மகிழ்கிறோம்.வளர வளர அவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் விலகி நம் தேவைகளுக்கு மட்டும் அவர்கள் முன் சென்று நிற்கிறோம்.

நாம் குடும்பம் ஆனதும் முழுவதுமாய் ஒதுங்கி, நமக்கு பிரச்சனை என்றதும், நம்மை காத்துக் கொள்ள மட்டும் அவர்களை எதிர்பார்க்கிறோம்.பெற்றோர்கள் இந்த மரத்தை போன்றே நம் வரவிற்காக எப்போதும் ஏங்குபவர்கள்.தம்மால் இயன்றதை நமக்கு கொடுத்து நம் புன்னகையில் அவர்கள் சந்தோசத்தை தேடுவார்கள்.

Sunday 1 December 2013

தாயன்பு!

தாய் இல்லாமல் நாம் இல்லை; தாய் இன்றி உலகில் எவரும் பிறப்பதில்லை. என்பது உலகறிந்த உண்மை. தாய் எனும் சொல் நாடு, மண் ஆறு, கடல், இயற்கை…… மேலும் பலவற்றிற்கு உவமையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் தாய் மீது அன்பு செய்வது போல் நாட்டின் மேலும், மனிதர்கள், இயற்கை மற்றும் இதர உயிரினங்கள் மீதும் அன்பு செய்ய வேண்டும் என்பதற்காகவே. இவ்வலைப் பூ தாய் மடியின் இதத்தையும், தாய் நாட்டின் மடியை பங்கிடுவதில் சகோதர இனங்களுக்கிடையே வலுப்பெற்ற ஆயுதக் கலாச்சாரத்தையும், இதனால் தாய் நாட்டிற்கு ஏற்பட்ட வீழ்ச்சிகளையும், கடல் தாயின் கோர தாண்டவம், கலாச்சார சீரழிவுகள், பெண்ணுரிமை மற்றும்; சிறுவர் உரிமைகளையும் எடுத்துரைப்பதற்காகவே வடிவமைக்கப்பட்டது.

அ.. ன்.. பு.. எனும் இந்த மூன்று எழுத்துக்கள் இரத்தத்தில் கலந்து, நரம்புகளை மீட்டி, ஊணர்சிகளை மெருகூட்டி வார்தையாக வரும் பொழுது இந்த உலகையே கட்டி வைக்கும் வல்லமையைப் பெறுகிறது. இத்தகைய அன்பிற்காக ஏங்குவோர் எத்தனை பேர், கிடைக்காமல் இறந்தவர் எத்தனை பேர், கிடைத்ததை இழந்தவர் எத்தனை பேர் அனுபவித்தவர் எத்தனை பேர், ஆசை காட்டி மோசம் செய்வதை போல் அன்பை காட்டி துவம்சம் செய்பவர்கள் எத்தனை பேர் உண்மையான அன்புடன் ஒருவர் பழகினாலும், அதைனை உரசிப் பார்த்து உண்மை, பொய் அறிய வேண்டிய சூழல்.

நம் கண்ணாடி மனதில் கல் வீசி விளையாடும் சமூகத்திலிருந்து நம்மை பாதுகாப்பவள் தாய். சோற்றோடு அன்பையும் சேர்த்தே ஊட்டியவள். வைரத்தைப் போலவே தாயும் பன்முகம் கொண்டவள். கணவனுக்காகவும், குடும்பத்திற்காகவும், குழந்தைக்காகவும், தன் தேவைகளை தியாகம் செய்தவள். இப்படித்தாங்க chemistry பாடத்தில் fail- ஆகி டீச்சரிடம் செமத்தியா, அழாம (ஏனெண்டா நான் படிச்சது coeducation School) அடி வாங்கிட்டு அப்படியே நேரா வீட்டுக்கு வந்து அப்பாட்ட நாலு குட்டு வாங்கிட்டு ஆள விட்டா போதும் சாமியோவ் எண்டு ஓடிப்போய் அம்மா மடியில தலைய வச்சு ஓன்னு அழுதா இருக்கிற சுகம் இருக்கே.

நான் அழ, அம்மா ஆறுதல் சொல்ல, அப்பாவுக்கு வீடே போர்க்களமாயிரும். திரும்பி வந்து என்னை தவணை முறையில் அடிச்சுப் போட்டு என்ட சத்தம் தாங்கமுடியாம புறமுதுகிடுவார் அப்பா. இப்படி அடிக்கடி அப்பாவை புறமுதுகிட வைத்துள்ளேன். அப்பொழுதெல்லாம் என்னை தலைகோதி, தன்னோடு அணைத்து, கண்ணீரைத் துடைத்து சிறந்த தளபதியாக இருந்தவர் தாய். அப்பாவின் அடிக்கு பயந்து எத்தனையோ குழந்தைகள் வீட்டை விட்டே ஓடுகிறார்கள். அவர்களை ஓடாமல் கட்டிப்போடும் அன்புச் சங்கிலி தாயிடமே உள்ளது.

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க!


• மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும், இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.


• வெள்ளைப் பூண்டுடன், கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.


• நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும். ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.


மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும். தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

எடை குறைவுடன் பிறந்த குழந்தை பராமரிப்பு முறைகள்!



எடை குறைவுடன் பிறந்த குழந்தையானது மிகவும் சிறியதாகவும், போதிய ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கும். ஆனால் குழந்தை இவ்வாறு பிறந்துவிட்டது என்று வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால் மட்டும் எதுவும் சரியாகிவிடாது.

இந்த நேரத்தில் தான், அத்தகைய குழந்தையை மிகவும் கவனமாக கவனித்து, சரியான உணவுகளை சரியான வேளையில் கொடுத்து, முறையாக பராமரிக்க வேண்டும். பொதுவாக எடை குறைவாக பிறந்த குழந்தைகளை எளிதில் நோய்கள் தொற்றும் வாய்ப்பு உள்ளதால், அதிகப்படியான கவனிப்பானது இன்றியமையாதது.

சொல்லப்போனால், இந்த நேரத்தில் பெற்றோர்கள் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். ஆனால் இப்போது சிரமத்தை மனதில் கொள்ளாமல், சரியாக கவனித்தால், உங்கள் குழந்தையும் மற்ற குழந்தைகளைப் போல் இருப்பார்கள். சரி, இப்போது அப்படி எடை குறைவாக பிறந்த குழந்தையை சரியாக கவனிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

• குறைவான எடையில் குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் உடலில் போதிய சத்துக்கள் கிடைக்கும்.எடை குறைவில் குழந்தை பிறந்தால், அடிக்கடி தொடர்ச்சியாக பாலைக் கொடுக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு உடலில் சத்துக்கள் சேர்வதற்கு சற்று தாமதமாகும்.

• மற்ற குழந்தைகளை விட, எடை குறைவாக பிறந்த குழந்ததையை மிகவும் கவனமாக தூக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான குழந்தைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், கைகளில் வைத்திருக்கும் போது, முக்கியமாக தலையை மிகவும் கவனமாக பிடித்துக் கொள்ள வேண்டும்

• பொதுவாக எடை குறைவில் பிறந்த குழந்தை தூங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான குழந்தைகளுக்கு SIDS (Sudden Infant Death Syndrome) என்னும் திடீரென குழந்தை இறப்பு நோய்த்தாக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், பெற்றோர்கள் குழந்தையை தங்களது வயிற்றில் தூங்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

• மிகவும் குறைந்த எடையில் பிறந்த குழந்தையைச் சுற்றியுள்ள இடங்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்த குழந்தைகளுக்கு நோய்களானது எளிதில் தாக்கக்கூடும். எனவே குழந்தையை சுற்றியுள்ள இடத்தை மட்டுமின்றி, குழந்தையையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

• குழந்தையின் எடை சரியான அளவில் வரும் வரை, பெற்றோர்களைத் தவிர வேறு யாரையும் குழந்தையை தூக்க அனுமதிக்க வேண்டாம்.

Friday 29 November 2013

குழந்தையின் வளர்ச்சி!

 

குழந்தையின் வளர்ச்சி என்பது ஒரு குழந்தையின் உடல் அளவில் ஏற்படும் வளர்ச்சியினை குறிக்கிறது. இதனை உடல் எடை, உயரம் (குழந்தையின் உயரம்). தலை மற்றும் கை. மார்பு போன்றவற்றின் சுற்றளவுகளைக் கொண்டு அளக்கலாம். இவ்வளவுகளை மாதிரி மேற்கோள்களைக் கொண்டு ஒப்பீடு செய்து, குழந்தையின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதனை அறியலாம்.

சாதாரணமாக, நல்ல உடல் நலம் மற்றும் நன்கு போஷிக்கப்பட்ட குழந்தைகளில், குழந்தை பிறந்த ஓராண்டுக்குள் மிக அதிவேகமான வளர்ச்சி ஏற்படும்.

எடை- பெரும்பாலும் எல்லா குழந்தைகளிலும் பிறந்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் உடல் எடை குறைந்து பின் 7லிருந்து 10 நாட்களுக்குள் மீண்டும் கூடும். உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது முதல் மூன்று மாதத்திற்கு, ஒரு நாளுக்கு 25 முதல் 30 கிராம் வரை கூடும். அதற்குப் பின்னர் எடைகூடுவதின் வேகம சற்று குறையும். பிறந்த 5 மாதத்தில், உடல் எடை இரண்டு மடங்காக அதிகரிக்கும் மற்றும் ஒருவருடத்தில் அது மூன்று மடங்காக அதிகரிக்கும். ஆனால் எடை குறைவாக பிறந்த குழந்தைகளில் இதுபோன்று ஏற்படுவதில்லை.

மாறாக எடைகுறைவாய் பிறந்த குழந்தைகளின் எடை ஐந்து மாதங்களுக்கு முன்பாகவே இரண்டுமடங்காக உயரும். ஒரு வருடத்திற்கு பின் உடல் எடையில் ஏற்படும் மாற்றமானது அவ்வளவு விரைவாக உயராது. பெரும்பாலும் குழந்தைகளின் உடல் எடை முதல் ஐந்து முதல் ஆறு மாதங்கள் மிக நன்கு உயர்ந்து இரண்டு மடங்காகும். ஆனால் ஆறுமாதத்திற்கு பின் எடை உயர்வு ஏற்றத்தாழ்வுடன் காணப்படும். ஏன் அப்படி நடக்கிறது என்றால் ஆறு மாதத்திற்கு பின் தாய்ப்பால் மாத்திரம் குழந்தைக்குப் போதுமானது அல்ல. தாய்ப்பாலுடன் பிற கூடுதல் உணவுப்பொருட்களையும் சேர்த்திருக்க வேண்டும். ஒரு குழந்தையின் உடல் எடை அக்குழந்தையின் உடல் உயரத்தையும் பொறுத்தமைகிறது. குழந்தையின் எடை பரிந்துரைக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதனை கண்டறிவது மிக முக்கியமானது. உடல் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இன்றி காணப்பட்டால் அது குழந்தையின் இளைத்துப்போவதை அல்லது குழந்தையின் ஊட்டச்சத்து பற்றாக்குறையினை குறிப்பிடுகிறது.

உயரம் - உயரம் என்பது குழந்தையின் வளர்ச்சியினை அளவிடும் ஒரு அளவுகோலாகும். புதிதாய் பிறந்த குழந்தையின் உயரம் 50 செ.மீ இருக்கும். முதல் வருடத்தில் குழந்தையின் உயரத்தில் 25 செ.மீ அதிகரிக்கும். இரண்டாம் வருடத்தில் 12 செ.மீ அதிகரிக்கும். 3 ஆம் 4ஆம் மற்றும் 5ஆம் வருடங்களில் 9 செ.மீ, 7செ.மீ மற்றும் 6 செ.மீ என்ற அளவில் உடலின் உயரம் அதிகரிக்கும்.

தலை மற்றும் மார்பின் சுற்றளவு - குழந்தை பிறப்பின் போது குழந்தையின் தலைசுற்றளவு 34 செ.மீராக இருக்கும். 6-9 மாதத்திற்கு பிறகு மார்பின் சுற்றளவு அதிகரித்து தலையின் சுற்றளவை விட அதிகமாக இருக்கும். குழந்தை சரிவர போஷிக்கப்படாமலிருப்பின் மேற்கூறிய வண்ணம் மார்பின் சுற்றளவு தலையின் சுற்றளவை விட அதிகரிக்க 3 முதல் 4 வருடங்கள் வரை எடுத்துக்கொள்ளும்.

நடுக்கையின் (புயத்தின்) சுற்றளவு - குழந்தையின் கைகள் பக்கவாட்டில் ஓய்வெடுக்கும் நிலையில் உள்ளபோது, புயத்தின் நடுவில் அதன் சுற்றளவு அளக்கப்பட வேண்டும். அவ்வாறு அளக்கும் போது, அளக்கும் டேப்பை மெதுவாக, மென்மையாக, குழந்தையின் உடற்திசுக்களை அழுத்தாவண்ணம் புயத்தில் நடுப்பகுதியில் வைத்து அளவீடு செய்ய வேண்டும். பிறந்ததிலிருந்து ஒரு வருடம் வரை மிக அதிகமான வளர்ச்சி காணப்படும். அதாவது 11 செ.மீ-லிருந்து 12 செ.மீ வரை சுற்றளவில் வளர்ச்சி காணப்படும். நன்கு போஷிக்கப்பட்டு வளர்க்கப்படும் குழந்தைகளின் புயத்தின் சுற்றளவானது ஓராண்டிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை சுமார் 16-லிருந்து 17 செ.மீ அளவிலேயே இருக்கும். இந்த காலகட்டங்களில் குழந்தையின் உடலில் உள்ள கொழுப்பு, தசைகளினால் மாற்றப்படுகிறது. தேவைப்படும் அளவின் 80 சதத்திற்கு அதாவது 12.8 செ.மீ கீழாக இருந்தால் இது மிதமானது முதல் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினை சுட்டிக்காட்டுகிறது.

அனைத்து ரீதியிலும் குழந்தையின் மேம்பாடு

 குழந்தையின் உடல் வளர்ச்சியோடு கூட மன வளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனம் இவற்றைக் கூட கண்காணிப்பது அவசியம். இவற்றைவிட வளர்ச்சிக் குறியீடுகள் பயன்படுத்தி, குழந்தையின் உடல், மன, புத்தி வளர்ச்சியைக் கணக்கிட, சுகாதார நலப் பணியாளர்கள் தாயையும், பிற குடும்ப நபர்களையும் பயிற்றுவிக்க வேண்டும்.

Tuesday 26 November 2013

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


வசதியாகத்தான் இருக்கிறது மகனே…

நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது,

முன்பு நானும்

 இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!


முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!


இதுவரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும்


என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல்  அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது.


நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்


 உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்


 இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!





இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்…


உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.




நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…


வாழ்க்கை இதுதானென்று!



நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு… 



உறவுகள் இதுதானென்று!

Monday 25 November 2013

பிறந்த குழந்தை ஏன் அழுகிறது உண்மையான காரணம் இதுதான்!

 

இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன?

இதோ தெரிந்துகொள்ளுங்கள்.

ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம்.

 இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான்

 குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம்.

அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..

Sunday 24 November 2013

குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாத சில செயல்கள்!

1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, “உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே'' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும்போது, “அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்’' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, “கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்’ போன்ற வார்த்தைகளை தயவுசெய்து உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், “அப்பாகிட்டே சொல்லிடாதே’ என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே “அப்பாக்கிட்ட சொல்லிடு வேன்’ என்று மிரட்டும்.

6.குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. “உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்கடீச்சருக்கே ஒண்ணும் தெரியலே’ போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறி னால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7.குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. ” கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்’ என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8.குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதாஎ ன்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, “பாசிடிவ் அப்ரோச்’ இருக்க வேண்டும். “நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்’ என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். “நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடுதான் மேய்க்கலாம்’ என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……


பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது முக்கியமாக செய்யக் கூடாதவை சில……

* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும் இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.

 * மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது.

 * மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும்.

 * அதிக காரம், சூடான வீர்யமுள்ள உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது அகாலத்தில் நழுவலாம்.

 * உடம்பை மூடிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டாலும், இரவில் சஞ்சாரம் செய்தாலும் சிசுவுக்குச் சித்த பிரமை உண்டாகும்.

 * சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் சிசுவுக்குக் காக்கை வலிப்பு உண்டாகும்.

 * எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயப்படும் சுபாவமுள்ள குழந்தை பிறக்கும். இவையனைத்தும் சுகப் பிரசவத்தைக் கெடுக்கும்.

சுகப்பிரசவம் நடக்க சில வழிமுறைகள்!

 

கர்ப்பிணிகள் வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும். அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.

அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும். இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது.

தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும். மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது. அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது.

அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம். ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது. சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால்.

ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும். மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது. தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top