.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 8 October 2013

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம்!

கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்த தினம் (அக்.8, 1959) 


தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அருகே சங்கம் படைத்தான் காடு என்னும் சிறிய ஊரில் அருணாச்சலனார்-விசாலட்சி தம்பதியருக்கு இளைய மகனாக 1930-ஆம் ஆண்டு பிறந்தார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். இவருடைய தந்தை அருணாச்சலனாரும் கவி பாடும் திறமை கொண்டவர். இவருக்கு கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும், வேதாம்பாள் என்ற சகோதரியும் இருந்தனர்.


எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் பள்ளிப்படிப்பை மட்டுமே இவரால் மேற்கொள்ள முடிந்தது. பின்னர், திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டார். தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டினார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் கிராமியத்தை தழுவியதாக இருககும். பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். 1955-ஆம் ஆண்டு ‘படித்த பெண்’ திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி, சினிமாவில் அழுத்தமான முத்திரையை பதித்தார்.



இவருக்கும் கௌரவாம்பாள் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவ்விருவருக்கும் 1959-ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு குமரவேல் என பெயர்சூட்டி மகிழ்ந்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அந்த ஆண்டிலேயே இதே தேதியில் (08.10.1959) அகால மரணம் அடைந்தார்.



பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ‘பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம்’ அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இவருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன.

எஸ் பி ஐ-யின் முதல் பெண் தலைவரானார் அருந்ததி பட்டாச்சார்யா !


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (எஸ்பிஐ) புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சார்யா நேற்று பொறுப்பேற்றார். நாட்டின் மிகப் பெரிய அரசுடமை வங்கியின் முதலாவரது பெண் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். வங்கியின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு 57 வயதான அருந்ததி, எஸ்பிஐயின் மேலாண்மை இயக்குநர் மற்றும் நிதித்துறை தலைவராக பதவி வகித்தார்.



8 - lady_ARUNDHATI_

 



இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக இருந்த பிரதீப் சவுத்ரி கடந்த மாதம் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய தலைவராக அருந்ததி பட்டாச்சாரியா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வங்கியின் 207 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவர் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.


57 வயதான அருந்ததி பட்டாச்சாரியா, பணிமூப்பு அடிப்படையில் தலைவர் பதவிக்கு வரும் பட்டியலில் முன்னிலையில் இருந்தார். நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அலுவலராக பதவி வகித்த அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும்.பட்டாச்சாரியாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதால், வங்கியின் 4 நிர்வாக இயக்குனர் பதவிகளில் ஒன்று காலியாக உள்ளது. 



பொதுத்துறை வங்கிகளின் பெண் தலைவர்கள் வரிசையில் அலகாபாத் வங்கியின் தலைவர் சுபலட்சுமி பன்சே, பாங்க் ஆப் இந்தியா தலைவர் வி.ஆர். ஐயர் ஆகியோருடன் இப்போது அருந்ததி பட்டாச்சாரியா இணைந்துள்ளார். இதேபோல் தனியார் வங்கிகளில் சண்டா கோச்சார் (ஐசிஐசிஐ), சிக்லா சர்மா (ஆக்சிஸ்), நைனா லால் கித்வாய் (எச்.எஸ்.பி.சி.) ஆகியோரும் தலைவர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Arundhati Bhattacharya becomes first woman to head SBI

*************************************


 The government on Monday cleared the elevation of Arundhati Bhattacharya as the chairperson of the State Bank of IndiaBSE -1.19 % – the first woman chief of the country’s largest lender – succeeding Pratip Chaudhuri who retired on September 30.

தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது!


பட்டம், பதவி எல்லாம் எனக்கு ஒரு தூசுக்குச் சமானம்!” என்று ஓர் அரசியல்வாதி சொன்னால் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாதவர்கள் பாராட்டிக் கை தட்டுவார்கள்.


 ஆனால் விஞ்ஞானிகள் “”உண்மைதான், பட்டம், பதவி என்ற தூசுகள் இல்லாவிட்டால் அவரும் இருக்க மாட்டார்!” என்று ஏளனமாகச் சிரிப்பார்கள். ஏனென்றால் தூசுகள் இல்லாமலிருந்தால் பிரபஞ்சமே உருவாகியிருக்காது. பூமியும் இருக்காது. நாமும் இருக்க மாட்டோம். தூசி அவ்வளவு மகத்துவமும் மகாத்மியமும் கொண்டது.


8 - dust space

 



தூசு என்பதில் முக்கால்வாசி } மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றின் உடலிலிருந்து உதிர்ந்து விழுகிற உயிரற்ற துணுக்குச் செதில்கள்தான். அவற்றைப் பல வகையான சிறு பூச்சிகள் உண்டு வாழ்கின்றன. அத்தகைய சிறு பூச்சிகள் பெரிய பூச்சிகளின் இரையாகின்றன. பெரிய பூச்சிகளைச் சிறிய பிராணிகள் சாப்பிடுகின்றன. சிறிய பிராணிகளைப் பெரிய பிராணிகள் உண்கின்றன. இந்த வரிசைக்கு “உணவுச் சங்கிலி’ என்று பெயர். அதில் தூசு முதல் கண்ணி. இந்த உணவுச் சங்கிலி உயிரினப் பரிணாமத்தில் ஒரு முக்கியமான அம்சம். அதன் கண்ணிகளில் ஒன்று அறுந்தாலும் எல்லா உயிரினங்களுமே அழிந்து போகும்.



தூசியில் நுண்ணிய மண் தூள்கள், கல் பொடி, உலோகத் துணுக்குகள், ரசாயன மூலக்கூறுகள் போன்றவையும் இடம்பெறுகின்றன. அவை நமக்குப் பலவிதமான உதவிகளைச் செய்கின்றன. எடுத்துக்காட்டாகப் பகல் நேரத்தில் வெளியில் மட்டுமே வெயிலடித்தாலும் வீட்டுக்குள் வெளிச்சமாக இருப்பதற்குக் காரணம் தூசிகள் சூரிய ஒளியை நாலா திசைகளிலும் பிரதிபலித்துச் சிதற வைக்கின்றதுதான். தூசிகள் இல்லாவிட்டால் நேரடியாக வெளிச்சம் வர முடியாத இடங்களெல்லாம் கன்னங்கரேலென இருட்டாயிருக்கும். பட்டப்பகலில் கூட வீட்டுக்குள் நிறைய விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டியிருக்கும். மின்வெட்டு இன்னும் தீவிரமாயிருக்கும். மரத்தடிகளில்கூட இருள் சூழ்ந்திருக்கும். மின்சாரச் செலவு, கிரசின் செலவு எல்லாம் வானளவுக்கு உயர்ந்துவிடும்.



வளிமண்டலத் தூசிகள் மீது சூரிய ஒளி படும்போது அதற்கு லம்பமான திசையில் நீல ஒளி மட்டும் அதிக அளவில் பூமியை நோக்கித் திருப்பிவிடப்படுகிறது. அதனால் வானம் நீல நிறம் பெறுகிறது. அந்த நிறத்தைக் கடல் பிரதிபலிப்பதால் அதுவும் நீலமாகத் தெரிகிறது.
காலையிலும் மாலையிலும் சூரியன் அடிவானத்தை நெருங்கும்போது தூசிகள் அதன் ஒளியைப் பூமியை நோக்கி வளைக்கும். அப்போது சிவப்பு நிற ஒளி மற்ற ஒளிகளைவிட அதிகமாக வளைவதால் அந்த நேரங்களில் சூரியனும் வானமும் சிவந்து காணப்படுகின்றன. “பொன் மாலைப் பொழுது’ என்று பாடத் தோன்றுகிறது.



மழை வளத்துக்கே தூசிகள்தான் காரணம். கடல்களிலிருந்தும் நீர் நிலைகளிலிருந்தும் நீர் ஆவியாகி வானில் பரவுகிறது. அதன் வெப்பநிலை குறையும்போது அது தூசுத் துகள்களைப் பற்றிக் கொண்டு திரவமாகிறது. தூசுகளில்லாது போனால் நீராவி திரவத் துளியாக மாறி மேகங்களாக உருவாகாது. மழையும் பெய்யாது.



வானில் வெகு உயரத்தில் பறக்கும் விமானங்கள் செல்லும் பாதையில் அவற்றுக்குப் பின்னால் நீண்ட வால்களைப்போல வெண்புகைக் கோடுகள் தோன்றுவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், தாழப்பறக்கும் விமானங்களுக்கு அவ்வாறு வால்கள் உண்டாகாது. நீண்ட தூரம் பயணம் செய்யும் விமானங்கள் கிட்டத்தட்ட 50 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். அங்கெல்லாம் காற்றின் அடர்த்தி குறைவாயிருக்கும். தூசிகளேயிராது. அதனால் அங்கு பரவியிருக்கிற நீராவி, ஆவி நிலையிலேயே நீடித்திருக்கும். அதன் ஊடாக ஒரு விமானம் பறந்து செல்லும்போது அதன் எஞ்சினிலிருந்து வெளிப்படும் புகைத் துணுக்குகளைப் பற்றிக் கொண்டு ஆவி திரவத்துளிகளாக மாறும்; அவையே வெள்ளைப் புகைக் கோடுகளாகத் தெரிகின்றன.



இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே தூசி வடிவத்தில்தான் அவதரித்தது. 1,400 கோடி ஆண்டுகளுக்கு முன் “பெருவெடி’ என்ற சம்பவம் நிகழ்ந்து பிரபஞ்சம் விரிவடைந்தது. அதில் முதலில் தோன்றிய நுண்துகள்கள் கூடி எலக்ட்ரான்களாகவும் புரோட்டான்களாகவும் நியூட்ரான்களாகவும் திரண்டன. அவை ஒன்றுகூடி ஹைட்ரஜன் அணுக்களாக மாறின. ஹைட்ரஜன் அணுக்கள் திரண்டு விண்மீன்களாக இறுகின. விண்மீன்களுக்குள் அணுக்கருப் பிணைவுகள் ஏற்பட்டு ஹீலியம், கார்பன் இத்யாதி தனிமங்கள் தோன்றின.
விண்மீன்களுக்கு வயதாகிவிட்டபின் அவை வெடித்துச் சிதறின. அவற்றின் துகள்கள் விண்வெளியில் தூசுகளாகப் பரவின. அவை மீண்டும் மேகங்களாகித் திரண்டு இறுகிச் சூரியன் போன்ற விண்மீன்களாகவும் பூமி போன்ற கோள்களாகவும் மாறின. எனவே பூமியின் “பூர்வாசிரம’ நிலை தூசிகள்தான்.



இந்தப் பிரபஞ்சத்தில் இன்னமும் ஏராளமான தூசுப் படலங்கள் மிதந்துகொண்டு தானிருக்கின்றன. அவற்றிலிருந்து புதிய விண்மீன்களும் கோள்களும் உருவாகிக் கொண்டிருக்கக்கூடும். அவை வயதான பின் மீண்டும் வெடித்துத் தூசு மண்டலங்களாகச் சிதறலாம். பழந்தமிழ்ப் புலவர் பரஞ்சோதி முனிவர் “”அண்டங்கள் எல்லாம் அணுவாகி, அணுக்களெல்லாம் அண்டங்களாகிப் பெரிதாய்ச் சிறிதாயினும்” என்று இதே கருத்தை வெளியிட்டிருக்கிறார்.



தூசுகள், அளவுக்கு மீறித் திரண்டாலும் ஆபத்துத்தான். சுமார் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன் வானத்திலிருந்து ஒரு பெரிய விண்கல் பூமியில் வந்து விழுந்தது. அதனால் ஏகப்பட்ட தூசி எழுந்து வானம் முழுவதிலும் அடர்த்தியாகப் படர்ந்து சூரிய ஒளியை மறைத்துவிட்டது. பூமியில் “இருள்’ சூழ்ந்தது. சூரிய ஒளியில்லாததால் தாவரங்கள் பட்டுப்போய் அழிந்தன. அப்போது உலகில் உலவிய டைனாசார்களில் சாக பட்சிணிகளாயிருந்தவை உணவு கிடைக்காமல் முற்றாயழிந்தன. மாமிச பட்சிணிகளாயிருந்தவையும் அசைவ உணவு கிடைக்காமல் அழிந்தன. அப்போதிருந்த உயிரினங்களில் கிட்டத்தட்ட 95 சதவீதம் வரை முற்றாயழிந்து போனதாகச் சொல்கிறார்கள். கரப்புகள் போன்ற பூச்சிகளும் மூஞ்சுறு போன்ற பாலூட்டிகளும் மட்டுமே மிஞ்சின. அந்தப் பாலூட்டிகளின் சந்ததிகள்தான் இன்றுள்ள மனிதர்களும் மற்ற விலங்குகளுமாகும்.


சிமென்ட் ஆலைகள் போன்ற தொழிற்சாலைகள் வெளியிடும் புகையில் சிமென்ட் துகள்கள் அதிகமிருக்கும். அது ஆலையைச் சுற்றியுள்ள வயல்களிலும் தோப்புகளிலும் உள்ள தாவரங்களின் இலைகளில் விபூதி அபிஷேகம் செய்ததைப்போலப் படிந்துவிடும். அதன் காரணமாகத் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் தமக்குத் தேவையான சத்துகளை உற்பத்தி செய்து கொள்ள முடியாமல் வாடி வதங்கிவிடும். விரைவிலேயே அவை அழிந்து போகும்.


அளவுக்கு மீறித் தூசிகள் காற்றில் பரவியிருந்தால் மனிதர்களும் விலங்குகளும் சுவாசக் கோளாறுகளாலும் நுரையீரல் நோய்களாலும் தோல் நோய்களாலும் பீடிக்கப்படுகின்றனர். சிமென்ட் ஆலைகள், கல்நார்ப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள், பாறைக்கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகள், பாறைகளைச் செதுக்கவும் மெருகேற்றவும் செய்கிற தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் காற்றில் கல்தூசி நிறைந்திருக்கும். அதைச் சுவாசிக்கிறவர்களின் நுரையீரல்களில் அது படிவதால் “சிலிக்கோசிஸ்’ என்ற கொடிய நோயுண்டாகிறது. அதேபோலப் பெரிய பண்ணைத் தோட்டங்களிலுள்ள காற்றில் மகரந்தத் துகள்கள் நிறைந்திருக்கும். சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா, மூச்சிரைப்பு போன்ற வியாதிகள் உண்டாகும்.


பெரு நகரங்களில் வாகனங்கள் உமிழும் புகையால் மக்களுக்கு நுரையீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. குளிர்காலங்களில் அந்தப் புகைத்துணுக்குகளில் நீராவி படிந்து தரை மட்டத்தில் மூடுபனியாகப் பரவுகிறது. ரயில்களும் விமானங்களும் மூடுபனி கலையும் வரை காத்திருந்து புறப்படவும் இறங்கவும் நேரிடும். சாலைகளில் வாகனங்கள் பாதை புலப்படாமல் விபத்துக்குள்ளாகலாம்.


குளிர்காலங்களிலும், “போகி’ போன்ற பண்டிகை நாள்களிலும் மக்கள் டயர்களையும் குப்பைகளையும் எரிப்பதாலும் காற்றில் புகையும் கார்பன் துகள்களும் பரவிக் கெடுக்கும். ரப்பர், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிக்கும்போது நச்சு வாயுக்களும் உருவாகி நுரையீரல் புற்றுநோய்கூட உண்டாகும்.


சுற்றுச்சூழலில் மாசு பரவாமல் தடுக்க “மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள்’ என்ற அமைப்புகள் மத்திய அரசிலும் மாநில அரசுகளிலும் உள்ளன. அவ்வப்போது அவை “தங்களால் முடிந்த’ சில நடவடிக்கைகளை எடுக்கின்றன; எனவே நாம் நமது மூக்கையும் வாயையும் மூடிக்கொண்டு நடமாடுவதே நல்லது.

தமிழர்களின் வரலாறு!


 
 
 

              தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். 
 
 
 
இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.
 
 



குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ்,


 
இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது  ஏழு பனை நாடு, ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன. அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. 
 
 
இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன.
 


 
குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
 


 
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.


இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.


வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம். வரலாற்றுத் தேடல் தொடரும்!

காதல் கோவில் 'கஜுரஹோ' - சுற்றுலாத்தலங்கள்!



     காதல் கோவில் 'கஜுரஹோ'

காதல் கோவில் 'கஜுரஹோ'
கலைநயத்துடன் எழுந்து நிற்கும் கோவில்களுக்கும் காம விளையாட்டுக்களைச் சித்தரிக்கும் சிற்பங்களுக்கும் பெயர்பெற்றது 'கஜுரஹோ'. இங்குள்ள ஆயிரக்கணக்கான சிற்பங்களில் வெறும் பத்து சதவீதமே காமத்தைச் சித்தரிப்பவை. ஆனால், அத்தனையும் 'பளிச் பளிச்' ரகங்கள்.

'காதலையும் காமத்தையும் தெரிந்து கொள்' என்கிற ரீதியில் உருவாக்கப்பட்ட கஜுரஹோ சிற்பங்கள், கி.பி.9- கி.பி.13ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை. மத்தியப் பிரதேச மாநிலம் சாட்டர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கஜுரஹோவின் பழைய பெயர் கர்ஜுரவஹாகா என்பதாகும். கர்ஜுர் என்றால் சமஸ்கிருதத்தில் ஈச்சம்பழம் என அர்த்தமாம். அப்போது, ஈச்ச மரங்கள் நிறைந்த இடமாக இருந்ததால், கர்ஜுரவஹாகா என்றழைக்கப்பட்டு பின்னர் கஜுரஹோ என மருவியதாக வரலாறு.

ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து 13ம் நூற்றாண்டு வரை மத்திய இந்தியாவை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், சாந்தலர்கள் எனப்படும் ராஜபுத்திரர்கள். இவர்களில் மன்னர் வித்யாதர், கஜினி முகமதுவை எதிர்த்து நின்றவர். வித்யாதருக்கு, வீரத்தைப் போல கலைரசனையும் அதிகம் போல. கஜுரஹோ கோவில்களுக்கும் சிற்பங்களுக்கும் முக்கிய காரணகர்த்தா இவர்தான் என கருதப்படுகிறது. கஜுரஹோ கலைப்பொக்கிஷங்களை உருவாக்க மன்னர்கள் 100ஆண்டுகள் செலவிட்டனராம்.

இங்கு கட்டப்பட்ட 80க்கும் மேற்பட்ட கோவில்களில், தற்போது எஞ்சியிருப்பவை 22கோவில்களே. எட்டு சதுர மைல் பரப்பளவில் விரிந்து எழுந்து நிற்கும் கோவில்களை மேற்குப் பகுதி கோவில்கள், கிழக்குப் பகுதி கோவில்கள், தெற்குப் பகுதி கோவில்கள் என மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் தேவிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை.

இங்குள்ள லட்சுமணா கோவில் பிரசித்தம். விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோவிலில் காணப்படும் 'வைகுந்த விஷ்ணு' உருவம் பரவசம் தரக்கூடியது. கோவிலின் வெளிப் பிரகாரத்தில் 600க்கும் மேற்பட்ட சிற்பங்கள் காணப்படுகின்றன.
இதே போல் வராஹா கோவிலும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள வீணையுடன் காட்சி அளிக்கும் சரஸ்வதி, ஒன்பது கிரகங்களின் உருவங்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும், கண்டரிய மகாதேவா கோவில், சௌன்ஸாத் யோகி கோவில், விஸ்வநாத் கோவில் போன்றவையும் முக்கியமானவை.
கோவில்களுக்குள் பக்தி மணம் வீசும் தெய்வ ஓவியங்கள், சிற்பங்கள் நிறைய உள்ளன. காதல் சிற்பங்கள் அனைத்தும் கோவில்களின் வெளிச்சுவர்களில் மட்டுமே என்பதும் இங்கு இன்னொரு சிறப்பு. காதலைப் பற்றித் தெரியாதவர் கூட கஜுரஹோ சென்று வந்தால் காதல் மன்னராகி விடுவர் என்றும் கூட வேடிக்கையாக சொல்லப்படுவது உண்டு. கஜுரஹோ கலைச் சின்னங்களை உலக பண்பாட்டுச் செல்வமாக 1986ல் யுனெஸ்கோ அறிவித்தது.

எப்போது செல்லலாம்? எப்படிச் செல்லலாம்?
அக்டோபர்- ஏப்ரல் மாதங்கள், கஜுரஹோ செல்ல உகந்த மாதங்கள் ஆகும். மஹா சிவராத்திரியன்று இங்கு நடக்கும் சிவ- பார்வதி கல்யாணம் சிறப்பு வாய்ந்தது. பிப்ரவரி- மார்ச் மாதத்தில் இசை, நாட்டிய விழா நடத்தப்படுகிறது. இதில் பல பகுதிகளில் இருந்தும் இசை, நாட்டிய ரசிகர்கள் திரளாக பங்கேற்கிறார்கள். கஜுரஹோவில் தினமும் மாலையில் ஒளி, ஒலி காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் கஜுரஹோவின் சிறப்பு பற்றி ஆங்கிலம் மற்றும் இந்தியில் சுமார் ஒருமணி நேரம் விளக்கம் அளிக்கின்றனர்.
டெல்லி, ஆக்ரா, வாரணாசி, காத்மண்டு ஆகிய இடங்களில் இருந்து கஜுரஹோவுக்கு தினசரி விமானப் போக்குவரத்து உள்ளது. மஹோபா, ஹர்பல்பூர் ஆகியவை கஜுரஹோவுக்கு அருகில் உள்ள ரயில்நிலையங்கள். மும்பை, டெல்லி, சென்னையில் இருந்து வருபவர்களுக்கு ஜான்சி ரயில்நிலையம் வசதியானது. ஜான்சியில் இருந்து கஜுரஹோ சுமார் 175 கி.மீ தொலைவில் உள்ளது.

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top