.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

சாளரம்!

சாளரம்

இந்தச்சாளரம்
 
இப்பேருலகின் உட்செல்ல
 
எனக்கான வாசலாயிருக்கிறது
 
மலைகள்தாண்டி விழுகின்ற கதிரவனும்
 
நட்சத்திரங்கள் நிரம்பிய வானமும்
 
இங்கிருந்தே என் கரங்களுக்கு
 
எட்டுவனவாய் இருக்கின்றன

சாரல் சிதறடித்தபடியோ
 
இளவெயிலின் புன்னகையுடனோ
 
என் அத்தியாவசிய முகங்கள்
 
இதன்வழியேதான்
 
 எனதறைக்குள் பிரவேசிக்கின்றன

நிறைத்துக்கொண்ட தத்தம் பொருட்களுடன்
 
வியாபாரத்திற்காய் விரைகின்ற
 
பெருங்கூட்டத்தின் தந்திரங்களை
 
இங்கிருந்து கணித்தலும் சாத்தியமாகிறது

சாலையில் பரபரப்புகள் நிறையும்
 
பாரமான பொழுதுகளில்
 
திரைச்சீலை இழுத்து நகர்த்தி
 
தனித்துப்போதலும்கூட இங்கே
 
மிக இலகுவாய் இருக்கிறதெனக்கு

***********************

 
Design by New Themes | Bloggerized by KarunKuyill - KarunKuyill | All-in-One Website
back to top